இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதியளித்திருந்ததாக அமெரிக்காவில் நிலைகொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் இது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் குறிப்பிட்டதாகவும், நடேசன் இது தொடர்பாக தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு தான் நடேசனை அறிவுறுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு சர்வதேச விசாரணையிலும் இது குறித்து சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பிக்கவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டின் சிந்தனையாளர் வட்டத்தில் இணைந்து பணியாற்றியவரே இந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்றும் நடேசன் தன்னிடம் கூறியதாக இந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார். ஜோன் லீ என்டர்ஸன் என்பவர் பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டை இலங்கையின் நெருங்கிய நண்பர் என்று அண்மையில் நிஙுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். மே மாதம் 16ம் திகதி நோர்வேயில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரோடு நடேசன் தொடர்பு கொண்டுள்ளார். இந்த வெளியேற்றத் திட்டம் பற்றி அவரிடம் விசாரித்துள்ளார். தங்களைக் காப்பாற்ற கப்பல் ஏதும் வருகின்றதா என்றும் வினவியுள்ளார். பதிலுக்கு அந்த நோர்வே பேராசிரியர் இலங்கை நேரப்படி நள்ளிரவில் கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார். இத்தகைய ஏற்பாடுகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இவருக்கு கொழும்பிலுள்ள பதில் தூதுவர் தெரிவித்துள்ளார். பின்னர் இது பற்றி நோர்வே தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் அது குறித்து கொழும்பில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை தொடர்பு கொண்டுள்ளார். அதன் பிறகே இவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. நடேசனால் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அரசியல் கட்சியொன்றை தொடங்குவது சம்பந்தமாக இவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களுடன் கலந்துரையாடியுள்ளார், என்று கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது |
21 Mar 2011 |
Geen opmerkingen:
Een reactie posten