சனல் 4 ஆவணத் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரில் கண்டனர் என்று கூறிய நேர்முகக்காணல்கள் பெய்யானவை எனக்கூறி இலங்கை இன்று லைஸ் அக்ரீட் அப்போன் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் தோன்றி இருந்த தமிழ்வாணி ஞானகுமார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஆவார் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார்.
இராணுவத்தால் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை விவரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை: உண்மை மற்றும் பகுப்பாய்வு - ஜூலை 2006 மே 2009 என்கிற அறிக்கையை இவர் நேற்றுக் காலையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து வெளியிட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு முக்கியமாக குறிப்பிட்டவை வருமாறு:-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகள் தொடர்பாக இவ்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சமாதானத்தை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் எப்போதும் விருப்பம் கொண்டிருக்கவே இல்லை.
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என வகை தொகை அற்றோர் பலியாகினர்.
ஆகவே இம்மனிதகுல அழிவைத் தடுப்பதற்கே மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்தது, நாட்டை மீட்டெடுக்க முயன்றது.
நாடு தற்போது மீளக் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றது. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் போராளிகள் சரண் அடைகின்றமை தொடர்பாக எனக்கு எவரும் அறிவித்து இருக்கவில்லை. இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கவும் இல்லை.
சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்ல வேண்டிய தேவைப்பாடு அரசிடம் இருக்கவில்லை. இறுதி யுத்தத்தின்போது சுமார் 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். இவர்கள் கட்டம் கட்டமாகப் புனர்வாழ்வு பெற்று கணிசமான தொகையினர் தற்போது சமூகமயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான தமிழ்ச்செல்வன், சூசை மற்றும் ரூபன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் சரண் அடைந்து இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் இராணுவத்தினரின் விமானத் தாக்குதலில் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்டு இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரும் இராணுவத்திடம் சரணடைந்து இருந்தனர்.
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இறுதி நாட்களில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, உலக உணவு ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களும், பணியாளர்களும் பின்வாங்கி இருந்தனர். ஆனால், அந்நிலைமையிலும் அரச தொண்டு உதவியாளர்கள் மக்கள் சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.
சனல் 4 தொலைக்காட்சியில் தோன்றி இருக்கின்ற தமிழ்வாணி ஞானகுமார் சிவிலியன் அல்லர். இவர் விடுதலைப் புலி உறுப்பினர். புலிகளுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர். இவர் விடுதலைப் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளில் தொடர்புபட்டு செயற்பட்டு இருந்தார்.
துர்கா என்பவரும் புலி உறுப்பினரே. புலிகள் இயக்கத்தின் முன்னிலைத் தளபதிகளில் ஒருவராக செயல்பட்டு இருந்தார்.
இந்தியாவில் உள்ள முகாம்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் தலைமறைவாக வாழ்கின்றனர். ஆனால், இவர்களின் விபரங்கள் எம்மிடம் இல்லை. திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.
இலங்கையின் நற்பெயருக்குப் பங்கம் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு சனல் 4 தொலைக்காட்சி சில வீடியோக்களை வெளியிடுகிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல், போலியான தகவல்களை வைத்து வீடியோக்களை வெளியிடுகிறது.
இராணுவச் சிப்பாய்கள் இருவருடைய வீடியோ பேட்டி என்று ஒன்றை சனல் 4 அண்மையில் வெளியிட்டது. சில நோக்கங்களை அடைந்து கொள்ளவே சனல் 4 இவ்வாறு செயற்பட்டு வருகிறது.
ஆனால் இலங்கையின் இறைமைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினர், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து வெளிநாடுகளில் செயல்படுகின்ற புலம்பெயர் தமிழர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற செயற்பாடுகளுக்கு இந்த அறிக்கை முற்றுப் புள்ளி வைக்கும். |
Geen opmerkingen:
Een reactie posten