donderdag 22 september 2011

ஒன்றரைக் கோடி ரூபா பணத்தின் எதிரொலி! சங்கரிக்கு சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ்!



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெறவுள்ளது என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அறிவிப்பு விடுத்திருந்தார்.

இந் நிலையில் இந்த நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கீழுள்ள சட்டத்தரணி ஒருவர் ஊடாகவே இந்த நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த சங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து சம்பந்தன் வெளியேறியதன் பின்னர் நான்கு தடவைகள் தேர்தல்கள் வந்து சென்றிருக்கின்றன.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இரண்டு சபைகளில் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியிருந்தது.

இந்தச் சூழலில் தாம் தான் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்து எமது நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவது வேதனையளிக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

தமிழரசுக்கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் தமது வருடாந்த மாநாட்டினை இந்த ஆண்டும் நடத்தியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் இருக்கின்ற ஒன்றரைக் கோடி ரூபா பணமே சம்பந்தனின் இந்த முடிவிற்கான காரணம் என்கிறார் கூட்டணியின் மூத்த உறுப்பினர் ஒருவர்.
21 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten