vrijdag 30 september 2011

அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கெடுக்க வாருங்கள்! விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு


[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 04:34.36 PM GMT ]
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கெடுக்க முன்வருமாறு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தென்பகுதி மற்றும் வட பகுதிகளை இரண்டு வௌ;வேறு பகுதிகளாக கவனிப்பதற்கு தாம் தயாரில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டுடன் அனைவரும் ஒன்றினைய வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரத்து 800 முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்துவதனை முன்னிட்டு அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்போது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் நீங்கள் புலிகளால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு இயக்கத்தில் இணைக்கப்பட்டீர்கள். அன்றைய காலகட்டத்தில் நீங்கள் கண்டிருந்த உங்கள் கிராமங்கள், யுத்தத்தின் பின் முற்றிலும் மாறுபட்ட, அபிவிருத்தி அடைந்த நிலையில் இருப்பதை இனி நீங்கள் நேரடியாக காணலாம்.
மற்றைய நாடுகளில் இவ்வாறான புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஐந்து வருடங்கள் வரை நீடிப்பதுண்டு. ஆனாலும் நாம் அதனை இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்துள்ளோம். அந்த வகையில் புனர்வாழ்வு நடவடிக்கையிலும் இலங்கை உலக நாடுகளுக்கு முன்மாதிரியானதாகவே செயற்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் உங்களாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Geen opmerkingen:

Een reactie posten