zondag 26 februari 2012

நாட்டின் இன்றைய நிலைமை வன்முறைக்கு வித்திடலாம்! அச்சத்தில் கூட்டமைப்பு! ஜெனிவா அமர்வை தவிர்த்தது!


[ வீரகேசரி ]உண்மையான துரோகிகள் மீண்டும் இனங்காணப்பட்டனர்!!
தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடும். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்வதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 வது அமர்வு தொடர்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அராங்கம் தானே ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை மீறுவதில் பெயர் போனது. அது மட்டுமன்றி பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டை பகிரங்க அறிக்கைகளினூடாக நிறைவேற்றுவதிலும் அது பெயர் போனது.
இதன் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஜெனீவா அமர்வுகளில் பிரசன்னமாயிருக்க மாட்டாது என்றும் தீர்மானித்துள்ளது என்று அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அராங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூல காரணம் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வை எட்டுவதில் எதுவித தடையையும் அரச தரப்பு போடக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விடயம் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை மற்றும் இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கம் ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகள்
சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகியவைகளை மீறியமை,
இனப்பிரச்சினைக்கான காரணிகள்,
மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற் தீர்வொன்றை அடைதல்,
இராணுவ மயமாக்குதலை நீக்குதல்,
துணை ஆயுதக்குழுக்களைக் கட்டுப்படுத்தல்,
குடியியல் நிர்வாகத்தை வலுவூட்டுவதற்கான அத்தியாவசியத் தேவை,
தகவல் சுதந்திரம்,
ஊடக சுயாதீனம்,
தடுப்பு சம்பந்தமான வெளிப்படைத்தன்மை,

மேலும் தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்திக்கும் சுயாதீனம் உட்பட வேறு விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்ற, இனப்பிரச்சினையினால் பிரதானமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடயங்கள் மிக முக்கியமானவைகளாகும்.
யுத்தம் அது தொடரப்பட்ட முறையும் அவர்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான விடயங்கள் கலந்துரையாடப்படும் எந்தத் தொடர் நிகழ்வுகளைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான கரிசனையைக் கொண்டுள்ளது.
இந்த இரு அறிக்கைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதுடன் அதன் நிலைப்பாட்டினை மீளவும் வலியுறுத்துகிறது.
கடந்த ஆறு தசாப்த காலமாக இலங்கை அரசானது இலங்கைக்குள் இருக்கும் பல்தேசிய, பல்கலாசார பன்மைச் சமூகத்துக்கான தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியுள்ளமையும், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அது கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்பாடுகள் ஆகியவைகளை மீறிச்செயற்படுவது கவலைக்குரிய விடயங்கள் என்பதையும், இதனால் தான் தற்போதைய நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேர்ந்துள்ளது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் கூறி வைக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும் நடைமுறைக்கு ஏதுவானதுமான நேர்மையான அரசியற்தீர்வைக் கண்டடைவதற்கான தனது அர்ப்பணத்தைப் பகிரங்கமாகக் கூறிவந்துள்ளதுடன், அதனை அது மீளவும் வலியுறுத்துகிறது.
ஒரு வருட காலத்துக்கு மேலாக அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தகைய தீர்வைக் கண்டடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான வழிமுறைகளிலே முயன்றும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்தீர்வை கண்டடைவதிலே அரசுக்கு நேர்மையான அர்ப்பணிப்பு இல்லாமையினால் அது எவ்வித முன்னேற்றத்தையுமே காணவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten