ஜெனீவா விவகாரங்கள் காரணமாக அமெக்கா இலங்கையுடனான எதிரி நாடென்று எவரும் எண்ணக்கூடாது. இருதரப்பு நட்புறவுகள் தொடர்ந்தும் பேணப்படும். எவ்வாறெனினும் தற்பொழுது நாம் நெருக்கடியானதோர் நேரத்தில் இருக்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டினிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமெரிக்க உறவு தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த ஊடகத்துக்கு அவர் வழங்கிய விஷேட பேட்டியில் மேலும் தெரிவிக்கையில்:
நாம் தற்பொழுது நெருக்கடியானதோர் நேரத்தில் இருக்கிறோம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. இருப்பினும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் சில முக்கிய உறுப்பினர்களுடனான சிறந்த நட்புறவு தொடர்ந்தும் பேணப்படும் என்று நம்புகிறேன்.
அமெரிக்காவின் பின்புலத்துடன் கூடிய இலங்கை தொடர்பான தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என கருதுவதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிறந்த நல்ல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டதே இத்தீர்மானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் மிகவும் அற்புதமானவை. அதேவேளை பொறுப்புக் கூறுதலில் அது ஏமாற்றத்தைத் தந் துள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திட்டம் எங்கே? என்பதை நாம் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். இந்த நாட்டில் உள்ள சிலர் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் எதற்காக அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று எண்ணுகின்றது. என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு ஆதரவுடன் ஆயிரக்கணக்கானோர் கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டமை குறித்து கவலை வெளியிட்ட அமெரிக்க தூதர் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் அமெக்காவின் சதி முயற்சி என்று கூறுவது எந்தவகையிலும் பொருத்தமுடையதல்ல என்று கூறிய அவர், அரசாங்கம் சில முன்னேற்றங்களை செய்துள்ளது. எனினும் அனைத்து விடயங்களிலும் அல்ல என்றார்.
அதேவேளை சர்வதேச அமைப்பு ஒன்றில் இதுதான் எமது திட்டம் இதை செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம் என்று இலங் கையை விளக்கமளிக்குமாறு கேட்பதற்கு இதுதான் சரியான நேரம் என நான் நினைக்கிறேன். அதைத்தான் நாம் கேட்கிறோம்.
ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசு ஆதரவில் நடத்தப்பட்ட பேரணிகளை மனித உரிமை விவகாரங்களுக்கு எதிரான இலங்கை மக்களின் கருத்தாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.
அமெரிக்க அரசாங்கம் இலங்கையை அச்றுத்தப்போவதும் இல்லை. காலக்கெடு விதிக்கப்போவதும் இல்லை.
ஆனால் போருக்குப் பிந்திய விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் முன் இலங்கை தமது கடமைகளை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten