dinsdag 13 maart 2012

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' ஜெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது!!!


நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது.
இலங்கையின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது.
'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் இலங்கையில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும் முயன்றுள்ளது.
நான்கு கற்கைகளை அராய்வதன் மூலம் இவ் ஆவணத் திரைப்படமானது இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் உட்பட பல முக்கிய அதிகாரிகள் போர்குற்றங்களை இழைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் இத் திரைப்படம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற நிலைப்பாட்டையும் ஐ.நா. சபையின் இலங்கைக்கு ஆதரவான கண்மூடித்தனமான நிலைப்பாட்டையும் அலசியுள்ளது.
முன்னைய விவரணத்திலிருந்து தொடரும் இத் திரைப்படம் பாதுகாப்புப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், பெண் போராளிகள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கைதானவர்கள் திட்டமிட்ட முறையிற் கொல்லப்பட்டமை போன்றவற்றோடு போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக அதிர்ச்சியான பல புதிய ஆராங்களை வெளியிட்டுள்ளது.
கண்ணாற் கண்ட சாட்சியங்களின் படி மக்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் இறக்கக் காரணமாகப் பொய்யான தகவல்களை வெளியிட்ட இலங்கையின் அதிகாரிகள் தொடர்பான தகவல்களும் அடங்கியுள்ளன.
மீண்டும் ஒரு கவலைக்குரிய கேள்வியுடன் திரைப்படம் முடிக்கு வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களின் கதறல் செவிடன் காதில் ஊதிய சங்காகிடுமா? காட்சியின் முடிவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இக் கேள்வியானது பார்வையாளரிடையே மீண்டும் மீண்டும் எழுந்தது. சர்வதேச விசாரணை ஒன்றுக்கான குரல் அங்கே ஓங்கி ஒலித்தது.
'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' - 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சி எதிர்வரும் 14ஆம் நாள் மார்ச் மாதம் 2012ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் காணத் தவற வேண்டாமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.
கனடியப் பாராளுமற்ற உறுப்பினர், அதிகாரிகள், ஐ.நா. சபை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இவ் ஆவணத் திரைப்படத்தை எடுத்துச் செல்லக் கனடியத் தமிழர் பேரவை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

Geen opmerkingen:

Een reactie posten