தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 maart 2012

தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் காரியவசம்- மன்னிப்பு கேட்டார்!


 [ தற்ஸ்தமிழ் ]
தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல ஆயிரம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை லண்டனின் சனல் 4 நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று இன்னொரு வீடியோ ஆவணப்படத்தை அது வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலச்சந்திரன் உள்ளிட்ட பல தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபாவை தமிழக எம்.பிக்கள் முடக்கிப் போட்டனர்.
ஆனால் மத்திய அரசு வளைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் மத்திய அரசுக்கு இலங்கைக்கு எதிராக செயல்படாவிட்டால் ஆட்சிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை திமுக எடுக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் நேற்றும், இன்றும் ஒரு திமிர்த்தனமான பேட்டியை அளித்திருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றும், நாளிதழ் ஒன்றும் அதை வெளியிட்டன.
இதையடுத்து பிரசாத் காரியவசத்தை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அறிவித்தல் அனுப்பியது. இதையடுத்து காரியவசம் மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காரியவசம், நான் இந்திய எம்.பிக்கள், குறிப்பாக தமிழக எம்.பிக்கள் மீது அளவில்லாத மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் குறித்து நான் மரியாதைக்குறைவாக பேசவில்லை. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதற்கான அதிகாரமும் எனக்கு இல்லை.
மேற்கத்தைய நாடுகளில் உள்ள சில குழுக்கள், இலங்கைக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நான் தமிழக எம்.பிக்கள் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை, திரித்துக் கூறப்பட்டவை.
எனது கருத்து எம்.பிக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தால் நான் அதற்காக பகிரங்க மன்னிப்பு கோரிக் கொள்கிறேன். இதையே நான் இந்திய மத்திய வெளியுறவு இணைச் செயலாளரிடமும் தெரிவித்தேன்.
இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா, இல்லையா என்பதை இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து இலங்கை அரசு கருத்து தெரிவிக்காது என்றார் காரியவசம்.
முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு காரியவசம் அளித்த பேட்டியில், தமிழகத்தில் உள்ள சில குழுக்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தக் குழுக்கள்தான் தமிழக எம்.பிக்களைத் தூண்டி விட்டு மத்திய அரசுக்கு நெருக்கடியையும், நிர்ப்பந்தத்தையும் கொடுத்து வருகிறார்கள். இதனால்தான் தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளுக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. இவர்கள் சேர்ந்துதான் மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றனர். இந்த எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார் காரியவசம்.
இந்தப் பேட்டி தமிழக எம்.பிக்களுக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சிபிஐ எம்.பி. டி.ராஜா உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் புகார் கூறினர். இதையடுத்தே மத்திய அரசு காரியவசத்தை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.
முன்னதாக போர்க்குற்றம் தொடர்பாக காரியவசத்தை மத்திய அரசு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த விளக்கத்தையும் இந்தியா கேட்கவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையே, பிரசாத் காரியவசத்தின் திமிர்ப் பேச்சு தொடர்பாக இன்று ராஜ்யசபாவில் உரிமை மீறல் நோட்டீஸை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten