தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கூட்டமைப்பு,ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரிற்கு செல்வதில்லை என்ற தீர்மானமும் அதற்காக அவர்கள் கூறியுள்ள காரணமும்..
..தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வவனியா வளாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி மாநாட்டிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரசன்னமாகி இலங்கையில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்த காலப்பகுதியில் மட்டுமல்ல அதற்கு முன்னரான 60 ஆண்டுகளாக போர்க்குற்றங்களும் மனித்தத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்பதனையும் அவை வெறும் போர்க் குற்றங்கள் மட்டுமல்ல திட்டமிட்ட இனஅழிப்பு என்பதனை பதிவு செய்திருக்க வேண்டும்.
சர்வதேச நாட்டு இராஐதந்திரிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள் என்ற காரணம் காட்டி கூட்டத்திற்கு செல்வதிலிருந்து கூட்டமைப்பு விலகிக் கொண்டமை தமிழ் மக்களது நலன் அடிப்படையில் அல்லாமல் பிறசக்திகளது நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே கருதவேண்டியுள்ளது.
பிறநாடுகள் எப்போதும் தமது நலன்களை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பது வரலாறு. இதுவரை காலமும் தமிழ் மக்களது பிரச்சினையில் தலையிட்ட நாடுகள் தமிழ் மக்களை தமது நலன்களை அடைந்து கொள்வதற்காகவே பயன்படுத்திவந்துள்ளன என்பதும் கூட்டமைப்பினருக்குத் தெரியாத ஒன்றல்ல.
இந்த சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களது நலன் அடிப்படையில் சிந்தித்திருந்தால் நிச்சயம் ஜெனீவா சென்று தமிழர் தரப்பு நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதாவது தமிழ் மக்கள் மீது கடந்த அறுபது ஆண்டுகளில் புரியப்பட்ட இனஅழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நியாயம் பெற்றுக் கொள்ளுவதற்கு தமிழ்த் தரப்பிற்கு கிடைத்த முக்கயமாகதொரு சந்தர்ப்பத்தினை உரிய முறையில் பயன்படுத்தாது தவிர்த்துக் கொண்டதன் மூலம் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் சர்வதேச விசாரணை ஒன்றில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி புரிந்துள்ளனர்.
மனித உரிமைகள் மாநாட்டில் வாக்குரிமைகள் கொண்டுள்ள நாடுகளுக்கு எமது நிலைப்பாட்டை ஏற்கனவே எழுத்து மூலம் தெரிவித்து விட்டோம். செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம்.
ஆகவே அஞ்சத் தேவையில்லை. என்று கூறுவதும் வன்முறைச் சூழல் உருவாகும் என அஞ்சுகிறொம். அதனால் மீண்டும் எனதுமக்கள் பாதிப்படையக் கூடும் என அஞ்சுகிறோம். அவ்வாறு மக்கள் பாதிக்கப்படுவதனை விடும்பவில்லை. ஆகவே ஜெனிவாவுக்குச் செல்லவில்லை. என்று கூறுவதும் இனப்படுகொலையாளிகளுக்கு சாதகமாக தாம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் கூறும் நொண்டிச்சாட்டு.
கடந்த கால அரசுடன்மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் சிவில் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு, அதற்கான ஆக்கபூர்வமான பதிலேதும் கூட்டமைப்பினரிடமிருந்து கிடைக்கப்பெறாத நிலையில், மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.
தொடர்ந்தும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகளைத் தடுக்க சிவில் சமூகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக் கோருவதுடன் சிவில் சமூகத்தினருக்கு தமிழ் மக்கள பக்கபலமாக இருக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நடவடிக்கையானது, மாணவ சமுதாயமாகிய எங்களுக்கு கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten