dinsdag 29 januari 2013

புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தலையும் மீறி அவுஸ்.குழுவினரை சந்தித்த முல்லைத்தீவு மக்கள்


இராணுவத்தினரதும், புலனாய்வாளர்களினதும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முல்லத்தீவு கேப்பாபிலவு மக்கள் தங்கள் மன உணர்வுகளை அவுஸ்திரேலிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் முக்கியஸ்த்தர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
காட்டுப்பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு 4மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு விடுவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மக்கள் தொழில், அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்கின்றனர்.
இந்நிலையில் இன்று குறித்த பிரதேசத்திற்குச் சென்ற மேற்படி அவுஸ்திரேலிய குழு அங்குள்ள நிலமைகளை சுமார் 20நிமிடங்களில் நேரடியாக அவதானித்திருப்பதுடன், மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டிருக்கின்றனர்.
இதன்போது இராணுவத்தினரதும், புலனாய்வாளர்களதும் அதிகரித்த நடமாட்டத்தினால் மக்கள் அவர்களுடன் நெருங்கிப் பேசுவதற்கு அச்சப்பட்டனர். எனினும் அத்தனை நெருக்குவாரங்களையும், அச்சுறுத்தலையும் தாண்டி ஒரு சில மக்கள் தங்கள் பிரச்சினைகளை கூறினர்.
குறிப்பாக தொழில் வாய்ப்பு, கல்வி, மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு தட்டுப்பாடும், நிறைவற்ற தன்மையும் காணப்படுவதாக கூறிய மக்கள் இந்த நிலமை சொந்த ஊர்களில் ஒருபோதும் இருந்ததில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.
இதேபோல் மீள்குடியேற்றத்திற்கென அழைத்துவரப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படாத போதும் எங்களுடைய வீடுகளைப் பார்வையிடவும், கைவிட்டுவந்த கால்நடைகளை மீட்கவும் படையினர் இதுவரையில் அனுமதிக்கவில்லை.
எனவே எங்கிருந்தாலும், சொந்த மண்ணில் வாழ்வதுபோல் வராது எங்களை எங்கள் சொந்த மண்ணுக்கு கொண்டுசென்று விட அனுமதி பெற்றுத் தாருங்கள் என மக்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த மக்களுடைய பிரச்சினைகள் குறித்து தாம் உணர்ந்து கொள்வதாகவும் அதற்கான முனைப்புக்களை தாம் சிந்திப்பதாகவும் குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் கூறியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten