ஆண் சிங்கம், பெண் மனுசி... இந்தக் கலப்பில் தோன்றியதே சிங்கள இனம். அதாவது, மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான பிறப்புதான் சிங்களப் பிறப்பு! இந்த மகாவம்ச வரலாற்றை பயண இடைவெளிகளில் சொல்லிக்கொண்டே வந்தார் நண்பர். மகாவம்சம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் இருந்த அரசன், கலிங்க நாட்டு அரசனின் மகளை மணக்கிறான். அவர்களுக்குப் பிறந்த பெண் பருவம் அடையும்போது, சோதிடம் கணிக்கப்படுகிறது.
சோதிடர்கள் அரசனுக்குக் கூறிய செய்தியால் அவன் அதிர்ச்சியடைகிறான். 'இந்தப் பெண் காமத்தின் மிகுதியால் மிருகத்துடன் உறவு கொள்வாள்’ என்று சோதிடர்கள் கணித்ததுதான் அரசனின் அதிர்ச்சிக்குக் காரணம். அதன்பிறகு, மகளை அரசன் கண்டுகொள்வதே இல்லை.
பிறகு, அவள் ஒரு நாடோடி கும்பலோடு சேர்ந்து ஒரு காட்டைக் கடக்கிறாள். அப்போது அந்தக் கூட்டத்தை மறித்த சிங்கம், எல்லோரையும் விரட்டியடிக்கிறது. ஆனால், அவள் மட்டும் செல்லாமல் அங்கேயே இருக்கிறாள். சிங்கத்தைப் பின்தொடர்ந்து, சோதிடர்கள் கணித்ததுபோல், சிங்கத்தோடு உறவுகொள்கிறாள். சிங்கபாகுவும் சிங்கவல்லியும் அவளுக்குக் குழந்தைகளாகப் பிறக்கின்றனர்.
அவர்களை சிங்கம் குகையிலேயே வைத்திருக்கிறது. சிங்க பாகுவின் கைகள் மற்றும் கால்கள் சிங்கத்துடையது போலவே உள்ளது. சிங்கபாகுவுக்கு 16 வயதாகும்போது தன் தாயிடம், 'ஏன் அம்மா நீயும் அப்பாவும் மிகுந்த வித்தியாசத்தோடு இருக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவள் நடந்தவற்றை விவரிக்கிறாள்.
அதன்பின் சிங்கத்தின் குகையில் இருந்து அவள், சிங்கபாகு, சிங்கவல்லி மூவரும் தப்பிச் செல்கின்றனர். இலைதழைகளை ஆடைகளாக உடுத்திக்கொண்டு, அவர்கள் காட்டில் செல்கின்றனர். தன் அப்பாவின் படையில் படைத்தலைவனாக இருந்த தன் மாமன் மகனைக்கண்டு அவனோடு செல்கிறாள் சிங்கபாகுவின் தாய். சிங்கத்தை மறந்து மாமன் மகனைத் திருமணம் செய்கிறாள்.
குகைக்குத் திரும்பிய சிங்கம், தன் மனைவியையும் பிள்ளைகளையும் காணாமல் கோபமுற்று கிராம மக்களைத் தாக்குகிறது. இதை அரசனிடம் மக்கள் கூற, சிங்கத்தை வீழ்த்தினால் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது.
பயத்தால் யாரும் சிங்கத்தைக் கொல்ல வரவில்லை. இறுதியில் மக்கள், சிங்கபாகுவைத் தேர்வு செய்கின்றனர். சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்யத்தையே தருகிறேன் என்று அரசன் சொல்ல, தன் தந்தையென்றும் பாராது சிங்கத்தைக் கொல்கிறான் சிங்கபாகு.
ராஜ்யத்தை வென்ற சிங்கபாகு, தன் தாயிடமும் அவளது புதிய கணவனிடமும் ராஜ்யத்தை ஒப்படைக்கிறான். மீண்டும் காட்டுக்கே சிங்கபாகுவும் அவன் தங்கை சிங்கவல்லியும் செல்கின்றனர்.
காட்டுக்குள்ளே நகரத்தை அமைத்து, அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு 16 முறை இரட்டைக் குழந்தைகளைப் பெறுகின்றனர். அதில் மூத்தவன்தான் விஜயன். விஜயனால் தொல்லையுற்ற மக்கள் சிங்கபாகுவிடம் விஜயனின் அடாவடிச் செயல்களைக் குறிப்பிட்டு, 'அவனைக் கொன்றுவிடுங்கள்,
இல்லையெனில் நாடுகடத்துங்கள்’ என்று கேட்டுக்கொள்ள... விஜயனையும் அவனுடன் இருந்தவர்களையும் திசைக்காட்டியற்ற கப்பலில் நாட்டைவிட்டு அனுப்பி விடுகிறான் சிங்கபாகு. விஜயனும் அவனுடன் வந்தவர்களும் இலங்கையை அடைகிறார்கள். அவன்தான் பின்னர் தமிழர் வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிக்கிறான். விஜயன் வழியேதான் சிங்கள இனம் விருத்தியடைகிறது.’ -இந்தக் கதை கொண்ட மகாவம்சம்தான் சிங்களர்களின் புனித நூல்.
சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இனத்துவேஷிகளுக்கும் மிருக குணம் எங்கே இருந்து வந்தது என்று இப்போது புரியும். அந்த மிருக சிங்களவர்களின் செயல்தான் முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலை உலக அரசுகளின் இப்போதைய விவாதப் பொருளாக இருந்தாலும், இலங்கை ராணுவத்தின் அன்றைய மனித உரிமை மீறல்கள் பற்றிய சம்பவங்களும் இப்போது பேசப்படுகிறது.
அன்றைய இராணுவ மீறல்களில் முக்கியமானது, திருகோணமலையில் நடந்த ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை, மூதூரில் நடந்த 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை. இதைப்பற்றி இப்போது நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22-வது கூட்டத்தொடரில் பேசிய மகிந்த சமரசிங்க, ''திருகோணமலை மாணவர்கள் கொலை மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்'' என்றார். ராணுவத்தினர்தான் குற்றவாளிகள் என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால், யார் மீது விசாரணை நடக்கிறது என்று தெரியவில்லை. அதற்கேற்ப உலகமும் ஐ.நா-வும் இன்னமும் இலங்கை அரசு சொல்லும் கதைக்கெல்லாம் தலையாட்டுகிறது.
மட்டக்களப்பில் இருந்து புறப்படும் முன், திரிகோணமலையைச் சொந்த ஊராகக் கொண்ட மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''2006 ஜனவரி 2, மாலை கடற்கரைக்குச் சென்ற 20 வயதுக்கும் உட்பட்ட தமிழ் மாணவர்களை இராணுவம் கொன்றது. அது என் வாழ்க்கையில் அறிந்த கொடுமையான சம்பவங்களுள் ஒன்று. மாணவர்கள் மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அந்த வேளையில் இராணுவம் அவர்களை சந்தேகித்து, சுட்டுக்கொன்றுள்ளது.
அதில் லோகிதாசன் ரோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முகநாதன், சிவானந்தா தங்கவடிவேல் என ஐந்து மாணவர்கள் இறந்துபோனார்கள். 'யோகராஜா பூங்குழலோன், பரராஜசிங்கம் கோகுலராஜ் என இரண்டு மாணவர்கள் உயிர் தப்பினர்.
ஆனால், அந்தச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட ராணுவம், 'கை எறி குண்டு தவறுதலாக வெடித்ததால் நேர்ந்த விபத்து இது’ என்றது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் கமினி குணதுங்க, 'மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் அடைந்த காயத்தில்தான் இறந்துள்ளனர்’ என்றார்.
தப்பித்த மாணவர்களின் வாக்குமூலத்தில், மூன்று சக்கர வாகனத்தில் வந்த முகம் அறியா நபர் கை எறிகுண்டை வீசியதாகவும், அந்த வாகனத்தின் பின்னே வந்த ராணுவம் தங்களைச் சுட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அப்படியென்றால் ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுள்ளது. கை எறிகுண்டு தவறுதலாக வெடித்தது என்று வைத்துக்கொண்டால்கூட, மாணவர்களின் உடலில் எப்படித் தோட்டாக்கள் பாய்ந்தன?'' என்றார்.
இறந்த மாணவர் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரன், அண்மையில் மாணவர்களின் நினைவு தினத் தின்போது ஒரு கருத்தை வெளியிட்டார். 'என் குடும்பத்துக்கும் எனக்கும் ஒரே ஆறுதல், இந்தக் கொலைச் சம்பவத்தின் மீதான விசாரணைக்கு நண்பர்களும் சில அமைப்புகளும் ஆர்வத்தோடு இருப்பதுதான். என் மகனைக் கொன்ற கொலை காரர்கள் இலங்கையில் சுதந்திரமாக திரிகிறார்கள்’ என்று வேதனையைக் கொட்டினார்.
இரவு 9 மணி வாக்கில் கொழும்புக்குக் கிளம்பினேன். அடுத்த நாள் இலங்கை நாடாளுமன்றம் சென்றேன். அன்று, 'வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டுடனான உறவுகள்’ பற்றிய விவாதம். அதில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரமேதாசா, ஜெனிவாவில் இலங்கை பாதிக்கப்படுவதைப் பற்றி அரசாங்கத்துக்கு கேள்வி எழுப்பினார்.
இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றீர்களே... வாக்களித்ததா? இதுதான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையா?’ என்று சர்வதேச அளவில் இலங்கை பாதிக்கப்படுவதைப் பற்றியே பேசினார். ஆனால், பாதிக்காமல் இருக்க என்ன மாதிரி கட்டுமானங்களை தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு செய்ய வேண்டும் என்பதை ஆறுதலுக்குக்கூட பேசவில்லை.
நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ் மக்கள் விவகாரங்களை பேசத் தொடங்கினாலே, சிங்கள உறுப்பினர்களின் கூச்சல் ஒலிக்கும். தண்ணீர், நிலம், வணிகம், வாழ் வாதாரம் என எந்த நிலையிலான பிரச்சினையைப் பேசினாலும் முதலில் சிங்கள உறுப்பினர்கள் கூச்சலிடும் வார்த்தை... எல்.டி.டி.ஈ. ஆம்... இதைத் தவிர தமிழர் தரப்பின் வாதத்தை முடக்க சிங்கள உறுப்பினர்கள் எதையும் பயன்படுத்த மாட்டார்கள். நாமல் ராஜபக்ஷே உள்ளே நுழையும்போது, தமிழ் உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.
அதைக் கிண்டலடிப்பதாக நாமலிடம் சிவப்புத் தொப்பி போட்ட முஸ்லிம் உறுப்பினர் கத்தி சிரித்துக்கொண்டே இருந்தார். இன்னொரு உறுப்பினர் இடைமறித்து, எல்.டி.டி.ஈ. பற்றி சகட்டுமேனிக்குத் திட்டி ஏதோ வீரஉரை நிகழ்த்தியதுபோல் நாமலிடம் திரும்பி 'எப்படி’ என்று கேட்க... நாமலோ, 'யெஸ்’ எனக் கைகாட்டுகிறார்.
நாமலின் விஷத்தன்மை ராஜபக்சவை விடக் கொடியது. அவுஸ்திரேலியாவில் தமிழர்களைப் படிக்க வைக்க, வேலைக்கு அனுப்ப, தஞ்சம் புக இடைத்தரகர்களை வைத்து ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவன். அவர்களை கடல் வழியே படகில் அனுப்பி விட்டு, அவுஸ்திரேலியக் கப்பல் படைக்குத் தகவல் கொடுத்துக் கைதுசெய்ய வைக்கும் அதிகாரத்தின் சூத்திரதாரி.
தமிழர்களும் நாமலின் இடைத்தரகர்களை நம்பி, இருக்கும் நிலத்தை விற்றோ சொத்தை அடமானம் வைத்தோ, பணத்தை அவர்களிடம் கொடுப்பார்கள். தரகர்களோ, மொத்தமாக ஏமாளித் தமிழர்களை ஏமாற்றி விட்டு இன்னும் தமிழர்களை ஏமாற்ற, ஆள் தேடிக்கொண்டு இருப்பார்கள்.
ஆங்கிலேயர்களின் தேவைக்கு, கங்காணிகளால் ஏமாற்றி அழைத்துவரப்பட்ட தமிழகத் தமிழர்கள் வாழும் நிலத்தை நோக்கி நானும் போகிறேன்.
ஜூனியர் விகடன்
http://news.lankasri.com/show-RUmryDTaNYks1.html
Geen opmerkingen:
Een reactie posten