எதிர்வரும் 31ம் திகதியுடன் ஹலால் சான்றிதழ் நாட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது.
அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுபல சேனாவின் மாநாடொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலபேயில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,
ஹலால் சான்றிதழ் என்பது எமது நாட்டுக்குத் தேவையில்லாததொன்று. அதனை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும்.
இல்லையேல் மக்களை ஒன்று சேர்த்து இந்த அமைப்பினூடாக போராட்டத்தினை முன்னெடுக்க நாம் தயங்க மாட்டோம்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தை அரசிடம் பொறுப்பேற்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.
இது ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டு ஏனையோர் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற முடியும்.
நாட்டில் உள்ள பிற மதங்களின் அடிப்படைவாதிகளின் ஊடுருவலினால் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பௌத்த மதத்தின் தர்மங்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த பொதுபல சேனாவாகும். மாறாக இது ஒரு மதவாதம், இனவாதம் அல்லது ஒரு கட்சி சார்ந்த அமைப்போ கிடையாது.
இதேவேளை, இவ்வாறான அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு எமது அமைப்பு நாடு தழுவிய ரீதியில் இவ்வாறான மாநாடுகளை முன்னெடுக்கும் என அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten