maandag 11 maart 2013

‘புலிகள்’ ஆட்டுக்குட்டிகள் போன்று மாறியது எப்படி? – ஓர் ஊடகத்தின் கண்ணோட்டம்!!



இவ்வாறு Huffington Post எனும் ஊடகத்தில் Jack Healey தெரிவித்துள்ளார். அதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியன் வரையானதாகும். அதாவது இது உலகமெங்கும் வாழும் யூத சனத்தொகையின் ஐந்து மடங்காகும். தமிழர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தமிழ் மக்கள் தென்னிந்தியா, மலேசியா, சிறிலங்கா, கனடா மற்றும் ஏனைய பல உலக நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாவர். ஏனையோர் கிறீஸ்தவர்களும் முஸ்லீம்களுமாவர்.
ஏ.ஆர்.ரஹ்மானால் இசையமைக்கப்பட்ட Slumdog Millionaire எனும் திரைப்படத்தின் பாடலை, அதேபோல் M.I.A.வின் [மாதங்கி அருட்பிரகாசம்] ‘Paper Planes’ எனும் இசைத்தொகுப்பை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இதேபோன்று திரைப்பட இயக்குனர் எம்.நைற் சியமாளனின் திரைப்படங்களையும் Parks and Recreationல் அசிஸ் அன்சாரியின் நகைச்சுவையையும் நீங்கள் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள்.
இவற்றை எல்லாம் அறிந்து வைத்திருக்கும் உங்களுக்கு நவி பிள்ளையின் நகர்வுகள் தொடர்பாகவும் ஐ.நா அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பெரிதளவில் கவனத்திற் கொண்டிருக்கமாட்டீர்கள். ஆனால் நவி பிள்ளை பல்வேறு உலக நாடுகளின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா பிரதிநிதி ஆவார். இதேபோன்று நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பாக ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் தமிழ் மக்களின் கலை, அரசியல் மற்றும் அறிவியல் தொடர்பாக நீங்கள் தொடர்புபடுத்திப் பார்க்க முற்படலாம். ஆனால் இந்த ஆக்கமானது தமிழ் கலாசாரம் தொடர்பாக ஆராய்வதை நோக்காகக் கொண்டிருக்கவில்லை.
சிறிலங்காவானது பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களில் திட்டமிட்ட முறையில் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது 1983ல் இடம்பெற்ற கறுப்பு யூலைக் கலவரத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரத்தில் 400 தொடக்கம் 3000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 25,000 வரையானோர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டது.
இது நாட்டில் மிகப் பெரிய உள்நாட்டுப் போர் ஒன்றுக்கான ஆரம்பமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவப் படைகள் தனிநாட்டுக்காக போராடிய தமிழர் போராட்டத்திற்கு எதிராக மிகப் பாரியளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இந்த யுத்தத்தின் இறுதியில் கெட்டவாய்ப்பாக பல்வேறு மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன.
மே 2009 அதாவது யுத்தத்தின் இறுதி நாட்களில் வெள்ளைக் கொடிகளை தலைக்கு மேல் உயர்த்தியவாறு சரணடைய முன்வந்த தமிழ் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததுடன், 90,000 வரையான பெண்கள் யுத்த விதவைகளாகினர். இந்நிலையில் தமிழ் மக்கள் சிறிலங்காவில் அனுபவிக்கின்ற, முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தற்போது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போதும் இங்கு வாழும் தமிழ்ப் பெண்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுவதுடன், ஆண்கள் மற்றும் சிறார்கள் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்ட பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் 12 வயதான தமிழ்ச் சிறுவன் ஒருவன், தமிழ்ப் புலிகளின் குடும்பத்து உறுப்பினர் என்ற காரணத்தால் மட்டும் பாதுகாப்பு படையால் படுகொலை செய்யப்பட்ட செய்தியும் இங்கு ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கமானது சிறிலங்காவில் வாழும் ஏனைய இனங்களைத் தலையெடுக்கவிடாது தடுப்பதற்கான தனது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இவ்வாறான பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான மீறல்கள் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கமானது தன் மீதான யுத்த கால மீறல்கள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் சிறிலங்காவில் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இது தொடர்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமை கண்காணிப்பாளர்கள் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவர் என ஐ.நா மற்றும் பிரித்தானியா என்பன அறிவித்த போதிலும் சிறிலங்கா அரசாங்கமானது இதற்கு உடன்படவில்லை.
அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அனைத்துலக பிரதிநிதிகள் குழுக்கள் செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்பது இங்கு முக்கியமாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் மக்கள் வாழும் இந்தப் பிரதேசங்களுக்கு அனைத்துலக பிரதிநிதிகள் குழுக்கள் நேரில் சென்று பார்வையிடுவதற்கு பல்வேறு தடைகள் இடப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமை நியமங்கள் மற்றும் பொதுவான மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
‘புலிகள்’ ஆட்டுக்குட்டிகள் போன்று மாறியது எப்படி? 2009ல் சிறிலங்கா அரசாங்கத்தால் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதப் போராட்டமாக பரிணமித்த விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போராட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு மீளஒழுங்குபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2009ல் பிலடெல்பியா என்ற இடத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தனது முதலாவது சந்திப்பை ஒழுங்குபடுத்தி நடாத்தியது.
இந்த அரசாங்கமானது புலம்பெயர் வாழ் தமிழ் சமூகத்திடமிருந்து தேர்தல் மூலம் வாக்குகளைப் பெற்று உருவாக்கப்பட்டது. தமிழ் சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கோட்பாடுகள் மற்றும் முன்னுரிமைகள் போன்றவற்றை தேர்தல்களில் முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுவதுடன் புலம்பெயர் மக்களின் உணர்வுகளை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த அரசாங்கமானது புரட்சிகரமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது புலிகளின் இராணுவ உத்திகளையோ அதன் இராணுவ முறைமையையோ பின்பற்றாது முற்றிலும் வன்முறையற்ற நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் புலிகள் தற்போது ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளனர் என்பது அடையாளங் காணப்பட்டு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்காகும்.
ஆட்டுக்குட்டிகள் போன்று மாறியுள்ள புலிகள் வன்முறையற்ற விதத்தில் தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த உலகம் விழித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் கவனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக புலம்பெயர்ந்து வாழும் 80 மில்லியன் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுதப் போராட்டத்திலிருந்து அமைதி வழிப் போராட்டத்திற்கு மாறி ஜனநாயக ரீதியில் தமக்கான மனித உரிமையையும் அரசியல் உரிமையையும் பெற்றுக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பக்கம் அனைத்துலகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். உங்களது பதிலுக்காக இந்த புலம்பெயர்ந்தோர் உலகம் காத்திருக்கிறது.
*Jack Healey Founder, Human Rights Action Center
http://asrilanka.com/2013/03/10/15576

Geen opmerkingen:

Een reactie posten