zondag 3 maart 2013

மூன்று நாட்கள் மூன்று நகர்கள் ஊடாக பிரச்சாரப்பயணம் !





தமிழீழ மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்ட நீதிக்கான பிரச்சார நெடும் பயணம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை லண்டன் வைற் சிற்றியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிபிசி ஊடகத்தின் தலைமைச்செயலகத்தின் முன்னால், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிராந்தியப் பொறுப்பாளர் நவம் அவர்களும் முன்னாள் மாணவர் பேரவையை சேர்ந்த பொ.சத்தியசீலன் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகிய இந்தப் பிரச்சார நெடும் பயணம் லண்டன் மாநகரை ஊடறுத்து தற்போது சென்றுகொண்டிருக்கின்றது. இவ்நடைபயணத்தில் ஜெயானந்தமூர்த்தி அவர்களுடன் தவராஜசிங்கம் உதயண்ணன், நாகேசு குணநிதி, பரமசிவன் கார்த்திகேசன், சிவா பொன்னம்பலம், கிருசாணந்ததேவர், நவரத்தினம் பிரதீபன், ச.ச.முத்து, சாஜகான் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இலண்டன் நகரில் பிரபல இடங்களின் ஊடாக நடைபயணத்தின்போது பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்கள் பல்லின மக்களுக்கும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.நாளை ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினூடாக 10 மணி நேர நடை பயணமாகவும் இறுதியாக சுவிஸ் நாட்டில் ஜெனிவா நகரை நோக்கி பத்து மணி நேர நடை பயணமுமாக ஐ.நா. முன்பாக முருகதாசன் திடலின் மக்கள் போராட்டத்தில் இணைந்துகொள்கின்றது.
தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தப் பிரச்சார நடைபயணத்தில் தமிழீழ மக்களுக்கான நீதி கோரும் துண்டுப் பிரசுரங்கள் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் விநியோகிக்கப்படுகின்றன. அதில் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பிலிருந்து தமிழீழ மக்களைக் காப்பாற்றத் தவறிய ஐ.நா. பொது மன்றம் தமிழ் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கையேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

- இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளையும்இ அனைத்துலக சட்டங்களை மீறிய போர்க் குற்றங்களையும் ஐ.நா. மன்றம் விசாரிக்க வேண்டும்.
- தமிழீழ மக்களது அரசியல் விருப்பங்கள் தீர்மானங்கள் குறித்து அவர்கள் மத்தியில் ஐ.நா. ஒரு பொது வாக்கெடுப்பை நடாத்த வேண்டும்.

- தமிழ் அரசியல் கைதிகளையும்இ யுத்தக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பவர்களையும் சிறிலங்கா சிறைகளிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

- தமிழீழப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைகளும் காவல் படைகளும் புலனாய்வுப் படைகளும் வெளியேற்றப்பட வேண்டும்.
என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முள்ளிவாய்காலில் இடம் பெற்ற அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலை பாலகன் பாலச்சந்திரன் உட்பட சிறுவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்ட விடயங்கள் என்பனவும் விபரிக்கப்பட்டுள்ளன.
இக்கவனயீர்ப்பு பயணத்திற்கு பிரித்தானியா பிரான்ஸ் சுவிஸ் நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.







Geen opmerkingen:

Een reactie posten