நேற்றிரவு உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வருகை தந்திருந்த இயக்குனர் வ.கௌதமன், ராம் மற்றும் தமிழின உணர்வாளர் திருமுருகன் உள்ளிட்டோரையும் கைது செய்து அண்ணாநகரிலிருக்கும் கல்யாண மண்டபத்திற்கும், அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டோ என்ற மாணவர் யார் என குறிவைத்து கேட்டபடியே உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பகல் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கவேலு உண்ணாவிரதமிருந்த மாணவர்களை பார்க்க வந்த போது, தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். மத்திய அரசின் சார்பில் எவரேனும் வந்தால் மட்டுமே தம்மால் பேச முடியும் என மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மாணவர்களை சந்திக்க முயன்ற திமுக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை கல்லூரிகள் தொடங்கப்படும் போது மாணவர்களின் போராட்டம் மேலும் வலுவடைய கூடும் என தமிழக அரசு அஞ்சுவதால், அறவழியில் சந்தித்து பேசுவதற்கு பதிலாக போராடுகிறவர்கள் மீது அடக்குமுறை ஏவுவதாகவும், மத்திய அரசும், மாநில அரசும் இலங்கை விடயத்தில் ஒரே நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன என்பது இதிலிருந்து புலனாவதாகவும் தமிழக தமிழின உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று மதுரை பெரம்பலூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
Geen opmerkingen:
Een reactie posten