பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இன மோதல் தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிடுவதானது அமைதியான வாழ்வொன்றை வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்காது.
நான் எழுதி வெளியிட்டுள்ள ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலில் சிறிலங்காவில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளேன். சிறிலங்காவின் கொலைக்களங்களில் அகப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறார்கள் தொடர்பாக நான் எனது நூலில் பதிவு செய்துள்ளேன்.
இந்த நூல் தொடர்பாக உலகெங்கும் வாழும் வாசகர்களிடமிருந்தோ கிடைக்கப் பெறும் தனிப்பட்ட செய்திகளைப் பார்க்காவிட்டாலும் கூட, இது தொடர்பாக தொடர்ந்து சிறிலங்கர்களிடமிருந்து குறிப்பாக பெரும்பாலும் சிறிலங்காத் தமிழ் மக்களிடமிருந்து எனக்கு நன்றி கூறப்படுகிறது. சில சிங்கள மக்களும் கூட எனக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். நான் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என சில வாசகர்கள் எனனை மனதார வாழ்த்தியுள்ளனர். சிலர் நான் அவர்களது மனங்களில் என்றும் வாழ்வதாக நன்றியுடன் நினைவுகூர்கின்றனர்.
‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற எனது நூலை வாசித்த பலரை நான் சில நிகழ்வுகளில் சந்திக்கின்ற போது, அவர்கள் என்னைப் பாராட்டி கட்டித் தழுவி தமது அன்பையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர். சிலர் இந்த நூலை வாங்கிய போதிலும், இதனை வாசிப்பதில் தயக்கம் காண்பிக்கின்றனர். ஏனெனில் இவர்கள் சிறிலங்காவில் வாழ்ந்த காலத்தில் பல்வேறு யுத்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களாவர். இவர்கள் இன்னமும் மனதளவில் பாதிப்புக்களுடன் வாழ்வதால் அவர்கள் எனது நூலை வாசிப்பதில் அச்சம் கொள்கின்றனர்.
இந்த நூலில் தமது யுத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஆனாலும் இவ்வாறானதொரு இனப்படுகொலைக்கு சாட்சியமாகவுள்ளதால் அதனை வெளிக்கொணரவேண்டியது தமது கடமை என இந்த மக்கள் உணர்கிறார்கள்.
இந்த நூலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மருத்துவரின் தன்னிகரற்ற துணிச்சல் மிக்க அர்ப்பணிப்பை பல வாசகர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். இந்த மருத்துவருக்கு கனடா வாழ் தமிழ் அமைப்பொன்று ‘வாழ்நாள் நாயகன் விருது’ வழங்கி மதிப்பளித்துள்ளது. இந்த விருதானது குறித்த மருத்துவர் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார் என்பதற்கான முதலாவது அங்கீகாரமாக காணப்படுகிறது. அதாவது இந்த மருத்துவர் சிறிலங்காவின் யுத்த வலயத்தில் பணிபுரிந்த போது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதை மதிப்பளித்தே இந்த விருது வழங்கப்பட்டது.
என்னிடம் யுத்த சாட்சியமாக தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மருத்துவரின் சொந்தப் பாதுகாப்புக் கருதி அவரது உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை என்பதால் அவருக்கான விருது லண்டனில் என்னிடம் கையிளிக்கப்பட்டது. பின்னர் நான் இதனை குறித்த மருத்துவரிடம் சேர்ப்பித்தேன்.
“எனக்கு 70 வயது. ஆனால் நான் தங்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பல சம்பவங்களை வாசித்து அழுதேன்” என கடந்த வாரம் என்னைச் சந்தித்த வயது முதிர்ந்த தமிழன் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தான் இந்தப் புத்தகத்தை இரு நாட்களில் வாசித்து முடித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
“இது பனைமரத்தின் தலையல்ல. இது ஒரு சிறு குழந்தையின் தலை என்ற வசனத்தை வாசித்த போது நான் அழுதேன். நான் மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற நூலை தொடரூந்தில் பயணித்த போது வாசித்தேன். நான் அழுததைப் பார்த்த பல பிரயாணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில் பயணித்த பெண்மணி ஒருவர் எனது கண்ணீரைத் துடைப்பதற்காக துணி ஒன்றைத் தந்தார். தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்த போது தாயொருவரின் உயிர் பறிக்கப்பட்டது என்பதை வாசித்த போது நான் அழுதேன். நீங்கள் எவ்வாறு உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு இவ்வாறான சம்பவங்களைப் பதிவு செய்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்” என எனது நூலை வாசித்த வாசகர் ஒருவர் முகப்புத்தகத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கர்கள் மட்டுமல்ல. சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவில் வாழும் தமிழர்கள் கூட தாம் சிறிலங்காவில் என்ன நடந்தது என்பதை அறிய பெரிதளவில் கவனம் செலுத்தவில்லை என்பதை நினைத்து தற்போது வெட்கப்படுவதாக எழுதியிருந்தார்கள்.
எனது நூல் தொடர்பாக தனது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அதில் குறிப்பிட்ட பல்வேறு சம்பவங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான செயற்திட்டம் ஒன்றை வரைந்து கொண்டதாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி மாணவன் ஒருவர் எழுதியிருந்தார்.
இந்த நூலின் தமிழ் மொழி மூலத்தை இந்தியாவிலுள்ள சிறிலங்கா அகதி முகாங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள மக்களிடம் சிறிலங்கா யுத்தம் தொடர்பாக ஒருவர் எழுதியுள்ளார் எனக் கூறியதாகவும் இந்த பட்டதாரி மாணவன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அகதி முகாம் ஒன்றுக்குச் சென்று இந்த நூலைக் காண்பித்த போது அங்கிருந்த தமிழ் அகதி ஒருவர் சிறிலங்காவின் வரைபடத்தை தனது மனைவிக்கு காண்பித்து அதில் வடக்குப் பகுதி எங்கிருக்கிறது போன்ற விபரங்களைத் தெரிவித்திருந்ததாக அந்த மாணவன் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது லண்டனில் வாழும் சிறிலங்காத் தமிழர் ஒருவர் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களுக்கு ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற எனது நூலின் தமிழ் மூலத்தில் நூறு பிரதிகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இவர் தனது நண்பன் மற்றும் மைத்துனன் ஆகிய இருவருக்கும் இதனை அறிமுகப்படுத்திய பின்னர் அவர்கள் இந்த நூலின் 90 பிரதிகளை எடுத்து ஐ.நா தூதுவர்களுக்கு அனுப்பினர். தாம் தமது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நூலின் பிரதிகளை அனுப்பி அவர்களுக்கு வாசிப்பதற்கு உத்வேகம் அளித்ததாகவும் கனடா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த வாசகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற எனது நூல் வெளியிடப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், லண்டனில் நான் நிகழ்வொன்றுக்குச் சென்றபோது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிராத தமிழர் ஒருவர் நூல் விற்பனையாளரிடம் ஆங்கிலத்தில் 50 பிரதிகள் தருமாறு கோரினார். இதனால் விற்பனையாளர் குழப்பமடைந்தார்.
அப்போது தமிழ் மொழியில் அவரிடம் மீண்டும் எத்தனை நூல்கள் தேவை எனக் கேட்ட போது அவர் தனது கடனட்டையைக் காண்பித்து 50 நூல்களை வாங்கிக் கொண்டு சென்றதை நான் பார்த்தேன். இந்த தமிழர் எனது நூலை வீடு வீடாகச் சென்று விற்கப்போகிறார் என்பது தெரியவந்தது. அதாவது இவர் இதனை தனது இலாபத்திற்காகச் செய்யவில்லை. மாறாக பொதுசேவையாக அவர் இதனைச் செய்தார்.
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் நான் எழுதிய நூலின் ஆங்கில மொழி மூலம் வெளிப்படையாக விற்கப்படுகின்ற போதிலும், வடக்கு நோக்கிப் பயணிக்கும் தமிழ் மக்கள் இதனை வாங்கிச் செல்ல அச்சப்படுகிறார்கள். இவர்கள் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது வழியில் இவர்களது உடைமைகளை சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிடுவதாலேயே இந்த மக்கள் எனது நூலைக் கொண்டு செல்லப் பயப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
பிரித்தானியாவில் இந்த நூல் வெளியிடப்பட்ட போது அங்கு வாழும் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தமது உறவுகளுக்கு அனுப்புவதற்காக ஐந்து அல்லது பத்து பிரதிகளை வாங்கினார்கள். சிங்களவர்கள் சிலர் உட்பட சிறிலங்கர்கள் பலர் என்னிடம் வந்து இந்த நூலின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பதிவுகளை நான் பதிந்ததற்காகவும் எனக்கு நன்றி கூறினார்கள்.
போர் மீறல்கள் தொடர்பாக எழுதுவதும் கதைப்பதும் மனதளவில் பல்வேறு தாக்கங்களை உண்டுபண்ணும் என்பது உண்மையே. ஆனாலும் இவ்வாறான அனுபவங்கள் சாதாரண மக்களை எட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற Adelaide புத்தக விழாவில் சிறிலங்காவைச் சேர்ந்த சிலருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் எனக்காக அவசர அவசரமாக இரவு விருந்தொன்றை ஒழுங்குபடுத்த திட்டமிட்டிருந்தனர். இதனை அவுஸ்திரேலிய நூல் வெளியீட்டாரால் நம்ப முடியவில்லை. இது இயல்பானது என்பதை நான் அவருக்கு தெளிவுபடுத்த முயற்சித்தேன். ஆனால் தமது நூல் ஆசிரியர்களுக்கு இது சாதாரணமாக ஒருபோதும் நடக்காது என அவர் கூறினார்.
செய்தி வழிமூலம் : Huffington Post.
மொழியாக்கம் : நித்தியபாரதி
மொழியாக்கம் : நித்தியபாரதி
, Ex-Amnesty International, Journalist & Author of ‘Still Counting the Dead’ – book on Tamils who survived Sri Lanka’s 2009 war
http://asrilanka.com/2013/03/10/15592
Geen opmerkingen:
Een reactie posten