போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மைக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி வக்கீல்கள் நூதன பேராட்டம் நடத்தினர்.
இலங்கை போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபச்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பேரணியாக புறப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அலுவலகத்திற்கு பூட்டுப்போட முயன்ற அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது பொலிஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அங்கு போக்குவரத்தும் சிறிது பாதிக்கப்பட்டது. பேரணியில் ராஜபச்சவை முகமூடி அணிந்த ஒருவரை சங்கிலியால் கட்டி இழுத்து வந்தனர்.
பேரணியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணிய ஆதித்தன், இணைச் செயலாளர் செல்வம் கிறிஸ்டோபர், வழக்கறிஞர்கள் ரகுராமன், இக்னேஷியஸ், அதிசயகுமார், ராமச்சந்திரன், ரசல், மற்றும் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் உட்பட சுமார் 100பேர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் ராஜபக்சவுக்கு தூக்கு!
இதேபோன்று கோவில்பட்டியில் வழக்கறிர்கள் சங்கம் சார்பில், ராஜபக்சவுக்கு தூக்கு போடும் போரட்டம் நடந்தது. மாதிரி சர்வதேச நீதிமன்றம் அமைத்து அதில் ராஜபச்ச உருவ பொம்மைக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினர்.
இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேன்மோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten