zaterdag 6 april 2013

4 நாட்கள் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி யாரை திருப்தி படுத்த இந்த அவசர கூட்டு ஒப்பந்தம்?- மனோ கணேசன் கேள்வி


பழைய கூட்டொப்பந்தம் மார்ச் 31 ம் திகதி முடிவுக்கு வந்தது. புதிய ஒப்பந்தம் ஏப்ரல் 4ம் திகதி கையெழுத்திடப்பட்டுள்ளது. உலக தொழிற்சங்க வரலாற்றில் நான்கே நான்கு நாட்கள் காதும் வைத்தாற்போல் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திடப்பட்டுள்ள ஒரே ஒரு பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தம் இதுதான்.
அப்பாவி தோட்ட தொழிளார்களுக்கு எதிரான இந்த இரகசிய கூட்டொப்பந்தத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும், ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க செயலாளர் வேலாயுதமும் செய்து முடித்துள்ளார்கள்.
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட எம்பி ஆர். யோகராஜன், பேச்சுவார்த்தையின்போது ஒருசிலர் மத்தியில் நிலவிய வெளிப்படை தன்மையற்ற இரகசியதன்மையை ஆட்சேபித்து பேச்சுவார்த்தையில் தொடர்ந்து கலந்துகொள்ள மறுத்துள்ளார். இது நடைபெற்றுள்ள இரகசிய சதியை மேலும் உறுதிப்படுத்துகின்றது என மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று கையெழுத்திடப்பட்டுள்ள தோட்ட தொழிலாளரின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்தம் தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
வழமையாக கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வரும் மார்ச் 31ம் திகதியிலிருந்து ஆறு மாதம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இந்தமுறை ரொம்பவும் அவசர, அவசரமாக ஆக நான்கு நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லி, புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இவர்கள் என்ன சம்பள தொகையை முன் வைத்தார்கள்? அதற்கு நிறுவனங்கள் என்ன பதிலை தந்தன? அடிப்படை சம்பள தொகையை கூட்டி, வருகை படியை குறைக்கும் யோசனையை இவர்கள் முன் வைத்தார்களா? வருகை படி என்ற தொகை பெரும்பாலான தொழிலாளிகளுக்கு கிடைப்பதில்லை என்பதை இவர்கள் எடுத்து சொன்னார்களா? ஏன் என்றுமில்லாத இந்த அவசரம்? யார் ஆறுமுகம் தொண்டமானை அவசரப்படுத்தினார்கள்? 450 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு தான்தோன்றிதனமாக உடன்பட்டது ஏன்? இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதி எம்பி யோகராஜனுக்கும் தெரியாமல் இரகசியம் பேணப்பட்டது ஏன்? இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க செயலாளர் வேலாயுதமும் உடன்பட்டது ஏன் என்ற கேள்விகள் இன்று மலையகம் முழுக்க எழுந்துள்ளன.
வாழ்க்கை செலவு உயர்வினால் உருக்குலைந்து போயுள்ள மலையக தொழிலாளிகளுக்கு எதிராக செய்து முடிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், ஒரு திரைமறைவு காட்டிக்கொடுப்பு சதியாகும். 2011ம் வருடம் மார்ச் மாதம் முதல் பெறப்பட்ட அடிப்படை சம்பளம் ரூபா. 380. நேற்று கையெழுத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் மூலம் 2015ம் வருடம் மார்ச் வரை கிடைக்கப் போகும் அடிப்படை சம்பளம் ரூபா 450 ஆகும். அதாவது அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆக 18 விகித அடிப்படை சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்வை கண்டுள்ள இந்த வேளையில் இந்த சம்பளம் போதாது. விலை உயர்வுக்கு எதிராக கபினட் அமைச்சரும், பிரதி அமைச்சரும் தொழிலாளிக்கு கோதுமை, அரிசி மானியம் பெற்றுகொடுத்தாக வரலாறு இல்லை.
இந்நிலையில் அரைகுறை சம்பளம் பெறும் உழைக்கும் தொழிலாளி மண்ணையும், புல்லையுமா சாப்பிடுவது என ஆறுமுகம் தொண்டமானும், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏனைய புண்ணியவான்களும் விளக்க வேண்டும்.
நமது மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு, கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானது அல்ல. நமது போராட்டம் முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிரானது. நாம் வெளியில் இருந்து போராடுகின்றோம். அதன்மூலம் தோட்ட நிறுவனங்களின் மீது ஏற்படும்.
அந்த அழுத்தத்தை பயன்படுத்தி, நீங்கள் உள்ளே இருந்து பேச்சுவார்த்தை நடத்தி, பேரம் பேசி, நமது மலையக பாட்டாளிக்கு நியாயமான சம்பளத்தை உறுதிபடுத்திடுங்கள் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடமும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க செயலாளர் வேலாயுதத்திடமும் நான் நேரடியாக எடுத்து கூறியிருந்தேன்.
ஆனால் இவற்றை இவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. தொழிற்சங்க பேச்சுவார்த்தைக்கும், பேரம் பேசலுக்கும், போராட்டத்திற்கும் உலகம் முழுக்க வழங்கப்படும் உரிய கால அவகாசத்தை இங்கே வழங்கவில்லை. மலையகத்தின் பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்க அனுபவஸ்தர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
இது எதுவும் செய்யாமல், அவசர, அவசரமாக காதும், காதும் வைத்தாற்போல் நான்கு நாட்களில் பேசி முடித்து, கையெழுத்து இட்டது எவரது தேவையை நிறைவேற்றுவதகற்காக என்பதை இவர்கள் இருவரும் மலையக சமூகத்திற்கு பதில் கூற வேண்டும். மலையக தொழிசங்க கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை ஞாயிற்றுகிழமை அட்டனில் முடிவு செய்யப்படும்.

Geen opmerkingen:

Een reactie posten