ஜெனிவாவுக்கு முந்தைய நாட்களில் காற்றலைகளில் தூவப்பட்டுக் காவிச் செல்லப்பட்ட கருத்துருவாக்கம் ஒன்று தமிழக மாணவர்களால் நொருக்கப்பட்டுவிட்டது.
'தமிழீழ விடுதலை' என்ற தமிழ் மக்களது இலட்சிய நெருப்பை சாக்குக் கொண்டு மூடும் முயற்சியில் உலகப் பரப்பெங்கும் 'யதார்த்தம்', 'பூகோள அரசியல்' என்ற பூச்சாண்டிகள் தமிழர் தளங்களில் அடிக்கடி காதுகளில் ஒலிக்க வைக்கப்பட்டு வந்தது.
அந்தக் கருத்துருவாக்கத்தின் உண்மைத் தன்மையையும், காரணத்தையும் உணர்ந்து கொள்ளாத நம்மவர்களில் ஒரு பகுதியினரும் அந்த மகுடிக்கு மயங்கி ஆட்டங்கள் போட்டதும் உண்டு.
தமிழீழம் அமைவதை இந்தியா விரும்பாது. பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். யதார்த்தங்களை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றெல்லாம் எமக்குப் புதிய கீதைகளை உபதேசிக்க முற்பட்டவர்களும் உண்டு.
சோனியாவின் பின்னால் ஒளி வட்டம் தெரிந்ததாகச் சத்தியம் செய்தவர்களும் உண்டு.
எந்தத் தளத்திலும் தோற்றுப் போவதற்கு தன்னம்பிக்கையை இழப்பதே முக்கிய காரணமாக அமைகின்றது.
முடியாது என்றதொரு கருத்தியலை நம்ப வைப்பதன் ஊடாகத் தமிழீழம் சாத்தியமற்றது என்ற அவநம்பிக்கை விதையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக ஊன்றும் முயற்சியில் சிங்களமும் இந்தியமும் சேர்ந்தே முயற்சித்தது.
முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணம் வரை இந்தக் கருத்தியலைத் தமிழீழத்தில் நிறுவ முடியவில்லை.
அதனாலேயே இன்றுவரை தமிழீழ மக்களது அவலங்களும், அவர்கள் மீதான சிங்கள அடக்கு முறைகளும் தொடர்கின்றன.
ஆனால், தமிழினப் பொது எதிரிகள் முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் அமைதியாகவே இருந்த தமிழகத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.
இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தி.மு.க. மூலமாகத் தங்களது பிடிக்குள் வைத்திருந்த தமிழகம் இப்படி ஒரு அக்கினிப் பிழம்பாக மாறும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
2009ல் தங்களை ஆட்சியில் மீண்டும் இருத்திய தமிழகமா இப்படி மாறியது? என்ற ஆச்சரியத்தில் புதைந்து போயுள்ளார்கள்.
நட்பு நாடாகவே சிங்களத்தை வைத்துக் கொள்வதற்காக, 600 தமிழக மீனவர்களைப் பலி கொடுத்த போதும் 'நமக்கென்ன கேடு' என்பது போல் மௌனமாகவே இருந்த தமிழக மாணவர்கள் இப்போது எப்படி அக்கினிப் பிழம்பானார்கள்? என்று அத்தனை பேரும் மூக்கில் விரலை வைத்து வியந்து நிற்கிறார்கள்.
இந்திய தேசத்தால் தடை செய்யப்பட்ட தமிழீழ மக்களது தேசியப் படையும், தேசியத் தலைவரும் இன்று தமிழக மாணவர்களது பேச்சிலும், தமிழக மக்களது மூச்சிலும் நிறைந்துள்ளது.
புலிக் கொடியும், தேசியத் தலைவர் அவர்களது திருவுருவமும் தமிழகத்தில் மீண்டும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றது.
இப்போது, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 12 கோடி தமிழர்களுக்கும் ஒரே தலைவராக, தமிழினத்தின் தலைவிதியை மாற்றும் மகா சக்தியாகவே போற்றப்படுகின்றார்.
நேற்று வரை இருந்த புதிய உலக ஒழுங்கில் விரிசல் நிகழ்த்தப்படுகின்றது. யதார்த்தமும், பூகோள அரசியலும் வெற்றுப் பூச்சாண்டியாக மாற்றம் பெற்றுவிட்டது.
முயற்சியும், நம்பிக்கையும் களத்தை நமக்கானதாக மாற்றி அமைக்கும் என்ற புதிய விதியைத் தமிழகத்து இளைய தலைமுறை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
'தமிழீழம்' மட்டுமே ஈழத் தமிழர்களுகக்கான தீர்வு என்பதை உலகம் ஏற்கும் காலத்தை நோக்கிப் புதிய போர்க்களம் ஒன்று விரிந்து செல்கின்றது.
இதனையே கடந்த புதன்கிழமை சென்னையில் உரையாற்றிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா அவர்கள் தெரிவித்த கருத்தும் உறுதிப்படுத்துகின்றது.
'இலங்கையில் ராஜபக்ச அரசு தொடர்ந்து தமிழர்கள் மீது அடக்கு முறையை கையாண்டால், தனி ஈழம் அமைவது வெகுதொலைவில் இல்லை என்பதை ராஜபக்சவுக்கு கூறிகொள்ள விரும்புகிறேன்' என்ற அவரது எச்சரிக்கை இந்திய ஆட்சிபீடத்தில் உருவாகிவரும் தமிழீழம் குறித்த மாற்றத்தையே உணர்த்துகின்றது.
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதே வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றி வந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு. யஸ்வந்த் சின்ஹா அவர்களது இந்தக் கருத்து, வெறுமனே அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்க முடியாது.
அதுவும், அடுத்த வருடத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் முக்கிய தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் இந்தக் கருத்து தமிழகத்தின் நாடித் துடிப்பின் வெளிப்பாடே.
இது தமிழக மாணவர் சமூகத்தின் தமிழீழ மீட்புப் போராட்டத்தின் முதல் வெற்றியாகவும் நோக்கப்படுகின்றது.
இந்த வெற்றியை முதற் படிக்கட்டாகக் கொண்டு, தமிழக மாணவர்கள், அவர்கள் பின்னால் அணிதிரளும் தமிழக மக்களுடன் புலம்பெயர் தமிழர்களும், உலகத் தமிழர்களும் தமிழீழ விடுதலைக்கான போரை இன்னமும் அதிகமாகத் தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழீழ மண்ணில் மீண்டும் புலிக்கொடி பறக்கும் வரை இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.
- சுவிசிலிருந்து கதிரவன்
Geen opmerkingen:
Een reactie posten