vrijdag 12 april 2013

எனது உரையை முழுமையாக பிரசுரிக்க வேண்டும்! தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுத்த அஸ்வர்!


தமிழ்ப் பத்திரிகைகள் தனது பேச்சை முழுமையாகப் பிரசுரிக்காவிட்டால், நான் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்புவேன் என தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுக்கின்றார் ஆளும்கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவை அல்ல, ஆயிரம் தடவைகள் இடையூறு செய்வேன் என்றும் கூறினார். நேற்று நாடாளுமன்றத்தில் நான்கு சட்டவரைவுகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் உரையாற்றிய அஸ்வர் சட்ட வரைவுகள் தொடர்பாக எதையும் பேசவில்லை. நேற்று முன்தினம் இந்தச் சபையில் நானும் பிரதி அமைச்சர் காதரும் அடிக்கடி இடையூறு செய்ததாகத் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது மௌனமாக இருந்த சம்பந்தனுக்கோ, கூட்டமைப்புக்கோ தற்போது பேச எந்தவிதமான அருகதையும் இல்லை. அதனாலேயே நாம் இடையூறு செய்தோம். தொடர்ந்தும் செய்வோம்.
நாம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுபவர்கள் அல்லர். எரியும் நெருப்பை அணைப்பவர்கள். அரசுடன் இருக்கும் அமைச்சர்களும், உறுப்பினர்களும் எமது மக்களின் நலன்களுக்காகவே சேவையாற்றுகின்றோம்.
தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் தமது புகைப்படங்கள் வெளிவர வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் அல்லர் நாம். எமது இனத்தின் மீது எமக்கு அக்கறை உண்டு. ஆர்வம் உண்டு. அதன் காரணமாகவே நாம் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றோம்.
தமிழ்ப் பத்திரிகைகள் எமது உள் உணர்வுகளையும், ஆதங்கங்களையும் புரிந்துகொண்டு செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும். எனது பேச்சுகளை அவை முழுமையாகப் பிரசுரிக்க வேண்டும். இல்லையேல், நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்புவேன்'' என்றார் அஸ்வர்.

Geen opmerkingen:

Een reactie posten