maandag 1 augustus 2011

அவலப்படும் மக்கள் வெளிப்படுத்திய செய்தி! தவறாகக் கையாள்பவர்களையிட்டு கவனம் தேவை

[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 08:55.51 AM GMT ]
பெரும் அழிவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளான தமிழ் மக்கள், உரத்த குரலில் பலமான செய்தியொன்றினைக் கூறியுள்ளார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்ததின் ஊடாக தமிழ்த் தேசிய அரசியல் தளத்தினை எவர் கையிலும் ஒப்படைக்கத் தயாராக இல்லை என்பதுதான் தமிழ் மக்கள் சொன்ன செய்தி.
இதனை கூட்டமைப்பிலுள்ள உயர்மட்டத் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலண்டன் கூட்டமைப்புக் கிளை நடாத்திய ஒன்றுகூடலில், பல சிக்கலான விடயங்களை முன்வைத்திருந்தார். சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வினை நாம் முன்வைக்க வேண்டுமென்கிற தொனியில் அமைந்திருந்தது அவரது உரை.
இலங்கைத் தீவிலுள்ள ஏனைய மக்களின் நியாயத்தை நாங்கள் கவனிக்கவில்லையென்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், சில சொற்களைத் தவிர்க்க வேண்டுமென அறிவுரை வழங்குகின்றார்.
அதாவது சுயநிர்ணயச், சமஷ்டி, சுயாட்சி போன்ற சொல்லாடல்களைக் கண்டு பெரும்பான்மையினம் அச்சப்படுகிறது என்று சொல்ல வருகிறார் போல் தெரிகிறது.
சிங்களக் கடும்போக்கு வாதிகளுக்கு, மாகாணசபை, 13ஆவது திருத்தச் சட்டம், சம உரிமை போன்றவைகள் கூட வேப்பங்காய் போல் கசக்கிறது. ஆகவே, அவர்களை மகிழ்விப்பதற்கு, எத்தகைய சொற்பதங்களை தமிழர் தரப்பு பயன்படுத்தலாமென்பதை இச்சட்டத்தரணி விளக்க வேண்டும்.
அண்மையில், சர்வதேச நெருக்கடிக்குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையில், புலம்பெயர் மக்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரைகள் குறித்தே இவர் அதிக கவலை கொள்கிறார்.
மிகவும் நல்ல அறிக்கையென்று புகழாரம் சூடும் தேசியப் பட்டியல் உறுப்பினர், இறைமையுள்ள ஒரு தேசிய இனத்தை, வெறும் சிறுபான்மை மக்கள் என்று இவ்வறிக்கை விபரிப்பதை கவனிக்கவில்லையா?
மேற்குலகம் மட்டுமே சர்வதேசத்தின் குரல் என்கிற தப்பான அபிப்பிராயம் எம்மில் பலரிடமுண்டு. அதுமட்டுமல்லாது சர்வதேச சமூகத்தின் பலம் மட்டும் எம்மிடம் உண்டென சிலர் கருதுகின்றார்கள். மக்கள் பலமே, இந்தச் சர்வதேச நாடுகளுக்கு தமது அரசியல் அபிலாஷையை - அடிபணியாத அரசியல் நிலைப்பாட்டினை, கடந்த தேர்தல் ஊடாக வெளிப்படுத்தியது.
தமிழ் மக்கள் தமது தமிழ்த் தேசிய அரசியலை பெருந் தேசியவாதத்திடம் கையளித்திருந்தால், இலண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்திருக்காது.
எத்தனை இடர் வந்த வேளையிலும், தமது அரசியல் உரிமையினை பேரினவாத அரசிடம் கையளிக்காமல், உறுதியாக நின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், கொழும்பில் நடைபெறும் அரசுடனான பேச்சுவார்த்தையிலும் கூட்டமைப்பினை நிறுத்தி வைத்திருக்கிறது.
நெருக்கடிக் குழுவின் ஆலோசனையைக் கேட்டு, புலம் பெயர் தமிழ் மக்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்று கூறுவதோடு, இரண்டு பக்கமும் போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதனால், அதனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்குகிறார் சுமந்திரன்.
இறுதிப் போரில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு, இவை புரியவில்லையென்று ஆதங்கப்படுவது வேடிக்கையாகவிருக்கிறது.
சர்வதேச தரம் வாய்ந்த மனித உரிமை அமைப்புக்களும், ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவைத் தலைவி நவநீதம்பிள்ளை அம்மையாரும் இத்தகைய விசாரணை ஒன்றினையே கோருகின்றார்கள்.
அத்தோடு நீதியான விசாரணை நடத்தப்படும் வரையில் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டுமென அமெரிக்க காங்கிரஸும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக முதல்வரும் இதனையே தீர்மானமாக மேற்கொண்டு வலியுறுத்துகின்றார்.
அடுத்ததாக,சர்வதேச சமூகத்திற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். சந்து பொந்துகளிலெல்லாம், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தை அல்லது ஜனாதிபதி கூறுவது போல் விவரணப் படத்தைப் போட்டுக் காட்டும் சர்வதேசமானது, போர்க்குற்ற விசாரணை கோரும் புலம்பெயர் சமூகத்தின் மீது, எந்த வகையில் சந்தேகம் கொள்கிறது என்று கூற முடியும்?
அனைத்துலக சமூகத்தின் புவிசார் அரசியல் நலன்களை, பிராந்திய ரீதியாகப் பிரித்துப் பார்த்து, சமகால அரசியல் நிலவரங்களைப் புரிந்து கொள்வதே பொருத்தமானது. இலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரைகள், அறிவுரைகள் கூறும் மேற்குலகின் சிந்தனைக் குவியமான சர்வதேச நெருக்கடிக் குழுவானது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமுண்டு.
வரவு செலவு பற்றாக்குறையில் திண்டாடும் அமெரிக்க சமஷ்டி அரசாங்கம், இந்த வருடம் 1.5 ரில்லியன் டொலர் குறையை நிரப்ப திண்டாடுகிறது. தேசிய கடன் எல்லையை (sovereign debt ceiling) 14.3 ரில்லியனாக அதிகரிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை, எதிர்த்தரப்பான குடியரசுக் கட்சி நிராகரிக்கிறது.
கடன் எல்லையை குறுகிய காலத்திற்கு மட்டும் நீடிக்க வேண்டுமென்கிற குடியரசுக் கட்சியின் நிபந்தனையை, அடுத்த வருடம் (2012) அதிபர் தேர்தலில் மீண்டும் குதிக்கவிருக்கும் ஒபாமா விரும்பவில்லை. குறுகிய காலமென்பது அதிகபட்சம் ஆறு மாதந்தான்.
இதனை ஏற்றுக்கொண்டால் அடுத்த வருடம் தேர்தல் வரும் நேரத்தில், மறுபடியும் இந்த முகட்டைத் தொடும் சிக்கல் உருவாகி, ஒபாமாவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிடலாம். இவை தவிர, பணம் படைத்தோர் மீது அதிக வரியைச் சுமத்த வேண்டுமென ஒபாமாவின் ஜனநாயக கட்சி கூறும் அதேவேளை, மக்களுக்கு வழங்கும் சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீட்டினை குறைக்க வேண்டுமென குடியரசுக் கட்சி வலியுறுத்துகிறது.
ஆயினும் கடன் எல்லையை 14.3 ரில்லியனாக உயர்த்த வேண்டுமென்கிற காலக்கெடு ஆகஸ்ட் 2ஆம் திகதியாகும். கடன்பெறும் தகுதியை நிர்ணயம் செய்யும் முகவர் அமைப்பானது (Credit Rating Agency), AAA தரத்திலிருந்து, அடுத்த படி நிலைக்கு அமெரிக்காவை
கீழ் இறக்கிவிடும் அபாயத்தையிட்டே அமெரிக்க ஆட்சியாளர்கள் கவலையடைகிறார்கள். ஏற்கனவே தொடரும் இச் சிக்கலால், அமெரிக்காவின் டொலர் நாணயத்தின் பெறுமதி கீழிறங்கி வருகிறது. முதலீட்டு நிதி நிறுவனங்களும், கடன் வழங்குவதை நிறுத்திவிடும் ஆபத்தும் தென்படுகிறது.
ஆகவே இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்கிற அறிவுரையை, சர்வதேச நெருக்கடிக்குழு முன்வைத்தால் இத்தருணத்தில் மிகப் பொருத்தமாகவிருக்கும். போர்க்குற்ற விசாரணை ஊடாக நீதி நிலை நாட்டப்பட வேண்டுமென்கிற அழுத்தத்தினை, இலங்கை அரசின் மீது புலம்பெயர் அமைப்புக்கள் பிரயோகிப்பதனால், அரசியல் தீர்வொன்றினை முன்வைக்க அரசு தயக்கம் காட்டுகிறதென கற்பிதம் கொள்வது வரலாற்றுத் தவறாகவே முடியும்.
இறைமையுள்ள தேசிய இனத்தின் பிறப்புரிமை சார்ந்த அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கி, அதன் அடிப்படையில் அரசியல் தீர்வினை அம்மக்களுக்கு வழங்குவதுதான் சரியானதாக அமையும்.
அதேவேளை, கடந்த 27ஆம் திகதியன்று சனல்4 தொலைக்காட்சியானது கொலைக் களத்தில் நின்ற இரண்டு சாட்சிகளை முன்னிறுத்தி ஒரு விவரணப் படத்தை வெளியிட்டது. அது குறித்து தனது கருத்தினை வெளியிட்ட ஊடகவியலாளர் ஜொனாதன் மில்லர், ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு இவ்விவகாரத்தை பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிச்சயம் எடுத்துச் செல்ல வேண்டுமென குறிப்பிட்டார்.
ஆதலால் அரசு முன்வைக்கும் தேசிய நல்லிணக்க நட்புக் கரத்தினை, அவலத்தைச் சந்தித்த அந்த வலியோடு வாழும் மக்கள், தமக்கான நீதி கிடைக்கும் வரை, பற்றிப் பிடிக்க மாட்டார்கள் என்பதனை, நடந்து முடிந்த தேர்தலும், தொடரும் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படங்களும் உணர்த்துகின்றன.
சுமந்திரன் எம்.பி.யின் இணக்கப்பாட்டு அரசியல் பார்வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளின் கருத்தாக அமையாது என்பதனை அவர்களே உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், சர்வதேசத்திற்கும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஒரு காத்திரமான செய்தியை உணர்த்தியிருக்கிறது என்பதனை திடமாகச் சொல்லலாம்.
அரசின் தேர்தல் காலச் சலுகைகளுக்கோ அல்லது அபிவிருத்தி மன்னர்களுக்கோ, தமது அடிப்படை அரசியல் உரிமைகளைத் தமிழ் மக்கள் விட்டுக் கொடுக்கவில்லை என்பதுதான் அச் செய்தி.
பேரினவாத அரசு தரும் தீர்வினையோ அல்லது சர்வதேசம் வழங்கும் பரிந்துரைகளையோ தமிழ் மக்கள் கருத்தில் கொள்ளவில்லை.
அதாவது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம், இணைந்த தாயகத்திலேயே தமக்கான இறைமையோடு கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
இவை தவிர இங்கு முக்கியமானதொரு பங்களிப்பினை இத்தேர்தலில் வழங்கிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் அரசியல் நகர்வு மிகவும் காத்திரமானது என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.
அரசின் அரசியல் வியூகத்திலும், அதிகார பலத்திலும் சிக்குண்டு கிடந்த வடகிழக்கு தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைக்க, மனோ கணேசன் ஆற்றிய பங்கு காலத்தை உணர்ந்து செய்யப்பட்ட பணியாகக் கருதலாம்.
ஆகவே சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வினை முன்வைக்க வேண்டுமா? இல்லையேல் இறைமை கொண்ட தமிழ்த் தேசியத்தின் அடிப்படை அரசியல் உரிமையை விட்டுக் கொடுக்காமல், சரியான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டுமா என்கிற மதில் மேல் பூனைத் தடுமாற்றங்கள் தேவையில்லை.
இத்தனை அடக்குமுறைக்கூடாக, இத்தேர்தலில் தமிழ் மக்கள் சொன்ன செய்தி என்னவென்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் இறைமையற்ற அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்பதே புத்திசாலித்தனமானதென கருதினால், மக்கள் சபை என்கிற லேபலில், கிராம சபைதான் மிஞ்சும்.
ஆகவே திடமான முடிவை மேற்கொள்ளுமாறு மக்கள் வழங்கிய ஆணையை -அந்த மக்கள் சக்தியை, தவறாகக் கையாள்பவர்களையிட்டு கவனம் தேவை.
-இதயச்சந்திரன்
 ithayachandran@hotmail.co.uk

Geen opmerkingen:

Een reactie posten