maandag 11 maart 2013

கனடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை!


விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததாகவும், கருவிகளை வாங்க முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டி, கனடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடும்படி, அமெரிக்காவிடம்  இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது.
சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற கனேடியத் தமிழர் மீது தீவிரவாத குற்றச்சாட்டின் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து, இலங்கை அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அசாதாரணமான இந்த வேண்டுகோள் கடிதத்தை அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவை பிணையில் விடுவிக்கக் கோரும் மனு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி அமெரிக்காவுக்கு சிறிலங்கா எழுதிய கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனினும் இதனை அடிப்படையாக வைத்து சுரேஸ் சிறீஸ்கந்தராஜா சார்பில் கோரப்பட்ட பிணைக்கு நீதிபதி அனுமதி மறுத்து விட்டார்.
வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற சுரேஸ், விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்க வங்கிகள் ஊடாக 13 ஆயிரம் டொலர் நிதி சேகரித்ததாகவும், ரமணன் மயில்வாகனத்துடன் இணைந்து இரவுப்பார்வை கருவிகள், இலத்திரனியல் கருவிகள், நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருள்களை வாங்க முயன்றதாகவும் அமெரிக்க சட்டவாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
இலங்கையருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவருக்கு எதிரான பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை நீக்கிக் கொள்ளமாறு அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது.
கனேடிய பிரஜையான குறித்த நபருக்கு எதிராக அமெரிக்காவில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2012ல் குறித்த நபர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல், பயங்கரவாத நிதி சேகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நீக்கிக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது.
சுரேஸை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஏன் கரிசனை எடுத்துக் கொள்கின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten