dinsdag 12 maart 2013

கிளிநொச்சியில் அரச ஆதரவு ஆர்ப்பாட்டம்: கட்டாயப்படுத்திக் கொண்டு செல்லப்படும் மக்கள்


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக உருவாகியிருக்கும் அழுத்தங்களைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக வன்னியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையானவர்கள் அச்சுறுத்தப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அரசாங்கத்துக்கான தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காக இதனை ஏற்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி டயசும் இதற்கான உதவிகளைச் செய்துவருவதுடன், ஆட்களைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்தியிருப்பதாகவும் தெரிகின்றது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 10.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டாயப்படுத்தி கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீதான அழுத்தங்களை ஜெனீவாவில் கைவிடு என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவின் உத்தரவின் பேரிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொண்டர் ஆசிரியர் மற்றும் சமுர்த்தி நியமனங்களைப் பெற்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்குகொள்ளாவிட்டால் அவர்களுடைய பதவி பறிபோய்விடும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், அச்சத்தின் காரணமாக பெருந்தொகையானவர்கள் அரச ஆதரவுடன் வந்த வாகனங்களில் ஏறிச்சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் நேற்றிரவே வழங்கப்பட்டதாகவும், இன்று அதிகாலை முதலே பஸ் வண்டிகளில் இவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், இராணுவத்தினரும் இதற்குப் பெருமளவுக்கு உதவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten