vrijdag 12 april 2013

சவுதி அரேபியாவில் மூவாயிரம் சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள்!!


இலங்கை போருக்குப் பின் 8,000 அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றம்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 12:08.11 PM GMT ]
இலங்கைப் போருக்குப் பின் சுமார் 8000 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக அவுஸ்திரேலிய குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கூறியுள்ள அதிகாரி, மே மாதம் 2009ல் இருந்து 2013ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வரை அவுஸ்திரேலியாவுக்கு 8,170 இலங்கை அகதிகள் வந்துள்ளனர்.
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகுதான் இந்த அளவுக்கு இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர்.
2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை வெறும் 16 தான்.
அதே சமயம் 2012ஆம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 6,428 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நாட்டுக்குள் நுழைவதை அவுஸ்திரேலியா கடந்த 2011ம் ஆண்டு தடை செய்தது. என்றாலும் இந்த எண்ணிக்கை குறையவில்லை.
ஒரு அகதியை அவுஸ்திரேலியா அழைத்து செல்ல இலங்கை ரூபாயில் 5 லட்சம் வரை ஏஜெண்டுகள் வாங்குகின்றனர்.
இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் இது போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
தமிழக அகதிகள் முகாமில் நீண்ட நாட்களாக அகதிகளாக இருப்பதால் விரக்தி அடைந்து தமிழ் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
மேலும் தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர்.
நன்கு படித்த இளைஞர்கள் இது போன்ற பணிகளை விரும்புவதில்லை.
அவர்கள் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளிநாடு செல்லும் இது போன்ற ஆபத்து மிகுந்த செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தென்கொரியாவில் பணிபுரியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு பெற்றோர் வேண்டுகோள்!
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 11:52.26 AM GMT ]
இலங்கையிலிருந்து தமது பிள்ளைகளை வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ள பெற்றோர் தற்போது ஏற்பட்டுள்ள கொரிய நெருக்கடியின் விளைவாக கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளார்கள்.
யுத்த நெருக்கடிகள் தொடங்குவதற்கு முன்னர் எப்படியாவது தங்களது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்று அவர்கள் அழுதபடி வேண்டி நிற்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் பல இளைஞர்கள் தென் கொரியாவில் தொழினுட்பம் சார்ந்த தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றிருக்கின்றார்கள்.
இவர்களின் பெற்றோர் தற்சமயம் வட-தென் கொரிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவது கண்டு கலங்கிப் போயுள்ளார்கள்.
ஏறாவூரிலுள்ள ஆதம்பாவா சித்தி நஜீமா எனும் தாய் 24 வயதுடைய இப்றாஹிம் பைறூஸ் எனும் தனது புதல்வனை நினைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகக் கூறுகின்றார்.
'என் மன நிலை பதறிக் கொண்டிருக்கின்றது. யுத்தம் தொடங்கினால் அந்த நாட்டிலிருந்து வந்து சேரமுடியாது. அதற்கு முன்னர் எப்படியாவது தனது மகன் வந்து சேர்ந்து விட வேண்டும்' என்று ஏங்குகின்றார்.
உயிர் இருந்தால் பின்னர் சம்பாதித்துக் கொள்ளலாம். பாதுகாப்பான இடத்திற்கு எமது பிள்ளைகளை அனுப்புவார்கள் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கின்றோம். யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் எமது பிள்ளைகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார்.
'எங்களுக்கு எதுவுமே தெரியாமல் இருக்கின்றது அவர்கள் எதுவுமே சொல்கின்றார்கள் இல்லை. என்று கொரியாவிலுள்ள தனது மகன் கூறுவதாகவும் ஏதும் பிரச்சினை என்றால் எமது நாட்டுக்கு உயிரைத் தப்பி ஓடி வந்து விடு என்று தனது மகனிடம் தான் அறிவுறுத்தியிருப்பதாகவும் எப்படியிருந்தாலும் எனது மன நிலை பதற்றமாகத் தான் உள்ளது' என்று கூறுகின்றார் தனது மகனைக் தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ள தந்தை எம்.எம். இப்றாஹிம்.
நாமும் நேரடியாக யுத்தத்தை அனுபவித்தவர்கள். விமானக் குண்டுத் தாக்குதல்கள், கண்ணிவெடிகள், ஷெல்லடிகள், துப்பாக்கிச் சூடு இவற்றையெல்லாம் கண்ட அந்தப் பயங்கரம் மனதில் வாட்டுகின்றது.
எமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதே சிறந்தது என்று அழுகையுடன் கூறுகின்றார் தனது மகனைத் தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ள மற்றொரு தாயான ஏறாவூரைச் சேர்ந்த ஹச்சி முஹம்மது சகீலா தெரிவித்தார்.

துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தம்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 02:19.48 PM GMT ] [ பி.பி.சி ]
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு.என்.எச்.சி.ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங்கள் மீண்டும் விண்ணபிக்கப் போவதாகவும் யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் அதிகாரி தமது பதிலில் தெவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் கீதார்த்தனன் தெரிவித்துள்ளார்.
அந்த 19 பேருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வேறு எதாவது அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரா என்பதை தமது அமைப்பு பிரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த 19 பேரில் ஒன்பது பேர் திருப்பி அனுப்பவே முடியாத நிலையில் இருப்பதாகக் கூறும் கீதார்த்தனன், அப்படி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்றும் கூறுகிறார்.
அந்த ஒன்பது பேரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் இலங்கையிலிருந்து வெளியிருந்தார்கள் என்று அவர்களது வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால் தாங்கள் 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டதாக லோஹினி ரதிமோகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தற்போது துபாயில் தமது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ள நிலையில் இருக்கும் இவர்களில் சிலர் இறுதி யுத்த நேரத்தில் இலங்கை அரசிடம் சரணடைந்து, பின்னர் முகாம்களிலிருந்து தப்பித்து இந்தியா சென்று தஞ்சம் புகுந்திருந்தார்கள் எனவும் வழக்கறிஞர் கீதார்த்தனன் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் மூவாயிரம் சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 02:36.52 PM GMT ]
சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைகின்ற சட்டவிரோத இலங்கைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணியாளர்களை தொழிலில் ஈடுபடுத்தியுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்தமையே இதற்குக் காரணம் என பணியகத்தின் பொது முகாமையாளர் ஹரிஸ்சந்திர பட்டகொட விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள சுமார் 300 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் ஜெத்தாவிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்தை நாடியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சவுதி அரேபியால் இலங்கைப் பணியாளர்கள் சுமார் மூவாயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து அவர்கள் மீ்ண்டும் நாடு திரும்புவதற்காக தலா ஐயாயிரத்து 800 சவுதி ரியால்களை கட்டணமாக செலுத்த நேரிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten