தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 december 2013

பொட்டம்மான் மறைவிடம் முற்றுகை- (அவலங்களின் அத்தியாயங்கள்- 87): நிராஜ் டேவிட் !!

மகாவம்சத்தை மாற்றி வரலாற்றை அழித்து போயயாக்கியதாக குரல் கொடுக்கும் நாம் நம் வாழ்வில் அனுபவித்த கண்டும் கேட்டும் அறிந்த விடயங்களை மாற்றி எழுதுபவர்களை தமிழ்ப்பற்று என்று அனுமதிப்பது மட்டும் சரியா??எழுதுபவர்கள் வரலாற்றுத்துரோகம் செய்வது அவர்கள் சார்ந்த பகுதிக்கு பலம் சேர்த்து நம் உண்மைகளை அழிக்கவே அன்றி நமக்கு உதவவில்ல!!உதாரணமாக டேவிட் பொய் உரைப்பது அவர் சார்ந்த மதத்தை பொய் மூலம் பரப்பவே அன்றி தமிழில்,தமிழ் ஈழத்தில் கொண்ட பற்று அல்ல,சுவிஸ்சில் இருந்து கொண்டு சில பணங்களை விட்டெறிந்து ஏழை பங்காளனாக காட்டுவதெல்லாம் ஏமாற்று வித்தையே!!நான் இறந்தாலும் என் வார்த்தைகள் வாழ்ந்து உங்கள் ஏமாற்றம் உங்கள் பரம்பரை அழிவதை காட்டி அதன் காரணம் உங்கள் ஏமாளித்தனம் என்பதை இடித்துரைத்து நிற்கும்!!
சில்வண்டு!!
கடந்த அத்தியாயத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் யாழ். பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தேன்.
யாழ். பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவரால் பொட்டம்மான் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாரே தவிர, யாழ்.பொது வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெறவில்லை என்பதை அந்தச் சம்பவத்தின் பொழுது அங்கிருந்த ஒரு அன்பர் எனக்கு எழுதியிருந்தார்.
அவர் அனுப்பிய தகவல் இதுதான்:
பொட்டம்மான் யாழ். பொது மருத்துவமனையில் அப்போது அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவில்லை. ஏன் தெரியுமா? அப்பகுதியில் சண்டை தொடங்கும் அறிகுறி இருந்தது. அதனால் ஆனைப்பந்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் யாழ். பொது மருத்துவ மனையை சேர்ந்த ஒரு சத்திர சிகிச்சை நிபுணரே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தார்.இதை ஏன் இவ்வளவு தெளிவாக சொல்கிறேன் என்று தெரியுமா? பொட்டம்மான் காயப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டதும் அவர் இருக்கும் இடத்தை எனது போராளிகளிடம் கேட்டேன். அவர்கள் சொன்ன தகவலை வைத்துக் கொண்டே அங்கு சென்றேன். அங்கே அவர் சத்திர சிகிச்சை முடிந்து மயக்க மருந்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தார்.கையில் போடப்பட்டிருந்த நாள உணவை அறுத்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தார். அந்த வேளையில்தான் அவரை அங்கே சந்தித்தேன். மறக்க முடியாத நினைவு அது..
தகவலுக்கு நன்றிகள்.
இனி தொடர்ந்து கட்டுரைக்குச் செல்வேம்.
தேடிவந்த ஹெலிக்கொப்டர்கள்
கரவெட்டி, களட்டியில் பொட்டு அம்மான், காயமடைந்த போராளிகள், அன்டன் பாலசிங்கம் போன்றவர்கள் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் செய்தி இந்தியப் படையினர் காதுகளை வந்தடைந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டைக் குறிவைத்து இரண்டு ஹெலிக்கொப்டர்கள் பறந்து வந்தன.
போர் தொடங்கிய காலத்திலிருந்தே யாழ்.குடா முழுவதும் இந்தியப் படை விமானங்களின் நடமாட்டங்கள் அதிகமகவே இருந்து வந்தன. பொருட்களையும், படையினரையும் ஏற்றி இறக்குவதற்கும், வானில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கென்றும் இந்தியப் படை விமானங்கள் யாழ் குடா முழுவதும் ஆரவாரப்பட்டுத் திரிந்தன. விமானங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனே பாதுகாப்பு நிலை எடுப்பதற்கு மக்கள் பல காலமாகவே பழகியிருந்தார்கள்.
பொட்டம்மான் உட்பட மற்றைய முக்கியஸ்தர்கள் தங்கியிருந்த பிரதேசத்திலும் அடிக்கடி விமானங்கள் பறந்தபடிதான் இருந்தன. ஆனால் குறிப்பிட்ட அந்த தினத்தன்று அப்பகுதியில் பறந்து வந்த உலங்கு வானூர்திகள் தமது வழக்கமான பயணப்பாதையை திடீரென்று மாற்றி பொட்டம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்து வர ஆரம்பித்தன.
மாலை மங்கத்தொடங்கும் நேரம். சாதாரணமாகவே இப்படியான ஒரு நேரத்தில் உலங்குவானூர்திகள் தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்குவது கிடையாது. இலக்குகளை துல்லியமாகத் தாக்கமுடியாது என்ற காரணத்தால் பெரும்பாலும் மாலை நேரங்களில் தாக்குதல்களை ஆரம்பிப்பது கிடையாது. ஆனால் பொட்டு அம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்த வானூர்திகள் வீட்டை ஓரிருதடவைகள் சுற்றிவந்தன.
பழுத்த அனுபவம் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டார்கள். நிலையெடுத்துக் கொண்டார்கள். கட்டிடங்களின் பின் மறைந்து கொண்டார்கள். காயமடைந்த நிலையில் இருந்த பொட்டு அம்மான் மற்றும் போராளிகளை ஒரு கொங்கிறீட் கூரையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.
திடீரென்று ஹெலிக்காப்டர்கள் தாக்க ஆரம்பித்தன. சகட்டுமேனிக்குத் தாக்குதலை நடாத்தின.
பொட்டு அம்மான் குழுவினருடன் தங்கியிருந்த அன்டன் பாலசிங்கம் மற்றும் அவருடைய மனைவி போன்றோர் வெளியே வளவின் மத்தியில் இருந்த தண்ணீர் தொட்டியின் சீமெந்து தூணுக்கு பின்னே மறைந்து கொண்டார்கள். சுற்றிச் சுற்றிவந்து தாக்குதல் நடாத்திய ஹெலியின் பார்வையில் இருந்து தப்புவதற்கு அவர்களும் தூனில் முதுகை ஒட்டியபடி தூணை சுற்றிச்சுற்றி அரக்கினார்கள்.
தாம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் குறைந்தது முப்பது புலிகளாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்று இந்திய விமானப் படையினர் நம்பினார்கள். தளத்தில் இருந்த தமது மேலதிகாரிகளுக்கு அதனை அறிவிக்கவும் செய்தார்கள். திருப்தியுடன் அவர்கள் தமது விமானங்களை தளத்திற்குத் திருப்பினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைய அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் எந்த ஒரு போராளிக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. வீடுகள் கூரைகள் சேதமாகினவே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.
இடப்பெயர்வு
பொட்டு அம்மான், அன்டன் பாலசிங்கம் மற்றும் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு விடயங்கள் போராளிகளுக்கு நன்றாகப் புரிந்தது.
ஒன்று, இந்தியப் படையினருக்கு தமது இருப்பிடம் பற்றிய செய்திகள் துல்லியமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. அடுத்தது மறுநாள் தரைவழியான முற்றுகை ஒன்று நிச்சயம் அப்பகுதியில் இடம்பெறும் என்பது.
உடனடியாகவே தமது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தீர்மானித்தார்கள்.
அப்பகுதியில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்திருந்தது அவர்களுக்கு புதிய சிக்கல்கலை ஏற்படுத்தியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, ஈ.என்.டி.எல்.எப்., புளொட் உட்பட மற்றய இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினரும் யாழ்.குடா முழுவதும் வசித்து வந்ததால், தகவல் கசிவைத் தடுப்பது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
அதேவேளை, மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் அப்பொழுது இருக்கவில்லை. எனவே ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். ஒரே பெரிய குழுவாக இருந்து அனைவருமே அகப்பட்டுக்கொள்வதை விட சிறிய சிறிய குழுக்களாகப் பிரிந்து சென்று தங்கியிருப்பது என்று முடிவுசெய்தார்கள்.
பொட்டு அம்மான் கரவெட்டியில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள நவிண்டில் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்டன் பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியிலேயே வேறு ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டார்கள்.
வலியால் துடித்த பொட்டு அம்மான்:
பொட்டு அம்மானின் காயங்கள் மிகவும் மோசமாக ஆரம்பித்தன. சரியாக சிகிச்சை அளிக்கப்படாமை, தொடர்ச்சியான நகர்வுகள், தேவையான ஓய்வின்மை போன்ற காரணங்களினால் மேலும் மோசமான நிலையை நோக்கி அவரது உடல் நிலை சென்றுகொண்டிருந்தது. அவரது கமர்கட்டு காயத்தால் ஊனம் வடிய ஆரம்பித்தது. வெப்ப அவியலான நிலையில் அவரது காயங்கள் சீழ் பிடிக்க ஆரம்பித்திருந்தன.
அவரது வயிற்றுக் காயத்திலும் புதிய சிக்கல். விட்டு விட்டு வலிக்கத் தொடங்கின. காரணத்தைக் கண்டுபிடிக்க கருவிகள் எதுவும் இல்லை. மருந்துகள் கைவசம் இல்லை. வலியினால் மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து முனகியபடியே கஷ்டப்பட்டார். அவரது முனகல் அவர்களது மறைவிடத்தை காட்டிக்கொடுத்துவிடுமோ என்று மற்றப் போராளிகள் அஞ்சினார்கள்.
அவர்கள் வீட்டினுள் மறைந்திருக்கும் விடயம் அயலவர்களுக்கு தெரிந்து அவர்கள் மூலமாக இந்தியப் படையினரின் காதுகளைச் சென்றடைந்துவிடும் என்ற பயம் ஒரு பக்கம்: இரவில் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்திரியும் இந்தியப் படையினர் காதுகளில் முனகல் சத்தம் விழுந்துவிட்டாலும் நிலமை ஆபத்திற்கு இட்டுச் சென்றுவிடும்.
மிகவும் அச்சமான, ஆபத்தான சூழ்நிலையில் அன்று பொட்டம்மானும், அவரது குழுவினரும் தங்கியிருந்தார்கள். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதே தப்பிப்பதற்கு சிறந்த வழியாக இருந்தது.
பொட்டு அம்மானின் காயங்கள் அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. அவரால் நீண்ட தூரம் நடக்கமுடியாத நிலையும் காணப்பட்டது. அவரை ஒரு சாய்மானைக் கதிரையில் இருத்தி போராளிகள் தமது தோள்களில் சுமந்தே நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.
நவிண்டில் பகுதியில் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த விடயம் அப்பிரதேச மக்கள் மத்தியில் போதுமான அளவு கசிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பொட்டம்மானும், மற்றவர்களும் நெல்லியடியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
நெல்லியடியில் புராதன வீடொன்றில் அனைவரும் தங்கவைக்கப்பட்டார்கள். அப்பிரதேசவாழ் மக்களும், அந்த போராளிகளுக்கு பல வழிகளிலும் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தார்கள். நெல்லியடியில் ஓரளவு அசுவாசப்பட்டுக்கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அப்படி இருக்கும் போது, ஒரு நாள் பொழுது சாயும் நேரம் அவர்களை நோக்கி ஒரு பாரிய ஆபத்து வந்துகொண்டிருக்கும் செய்தி அவர்களின் காதுகளை வந்தடைந்தது.
பொட்டு அம்மான், அன்டன் பாலசிங்கம் மற்றும் அங்கு தங்கியிருந்த போராளிகளைக் குறிவைத்து இந்தியப் படையினர் ஒரு பாரிய முற்றுகையை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
தொடரும்..
nirajdavid@bluewin.ch

Geen opmerkingen:

Een reactie posten