முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-4)
இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.
இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 13-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாளுக்குநாள் இறந்தும், துடி துடித்த நிலையிலும், உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், உலக வல்லாதிக்கத்தின் முன் சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.
மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டனர்.
இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..
நேற்றைய தொடர்ச்சி..
விடுதலைப் புலிகளின் படையக புலனாய்வு தளபதியாக இருந்த கேணல் சால்ஸ் அவர்கள் மூன்றாம்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பலியானர், இந்த சம்பவம் அன்றைய போராட்டகாலத்தில் படையக புலனாய்வுத்துறையில் ஒரு பின்னடைவாகவே காணப்பட்டது.
தமிழர் போராட்டத்தில் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மிகப்பெரும் பலமாக இருந்தவர் இவர். இச்சம்பவம் அன்றைய காலகட்டிடத்தில் ஈழத்தில் வசித்து வந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஸ்ரீலங்கா அரச தரப்பு இவரின் இழப்பை கொண்டாடியது, இவரது மரணம் விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல் ரீதியாக பாரிய வீழ்ச்சி, அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் விடுதலைப் புலிகள் என்ற கேள்வியுடன் நாட்கள் கடந்து செல்கின்றன.
இந்நிலையில் மடுவுக்குள் ஊடுருவியது ஸ்ரீலங்கா அரச படை, நாங்கள் உட்பட பெரிய பெரியமடுவில் வசித்து வந்த பல கிராம மக்கள் அடுத்தடுத்து வெள்ளாங்கள், முழங்காவில் பகுதியில் குடியேறுகின்றனர், நாங்கள் முழங்காவிலில் உள்ள பிள்ளையார் கோயிலின் அண்மித்த பகுதியில் கொட்டகை போட்டு குடியேறினோம் எங்கள் மாவட்டமான மன்னாரை விட்டே வெளியேறி விட்டொம் மனதில் பெரிய கணம், இது எங்களுக்கு நான்காவது இடம் இந்த நிலையிலே எங்களுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது, இந்தப் பயணம் முள்ளிவாய்க்காலில்தான் முடியும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை, தெய்வத்தைக் கூட கடந்த போர் விட்டுவைக்கவில்லை, இங்கு நாங்கள் குடியேறிய நிலையில் மடு மாதாவின் உருவ சிலையும் தேவன்பிட்டி தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில்தான் மாங்குளம் - மல்லாவி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நோயாளார் காவு வண்டிக்கு கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. பெரியபண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சானைச் சேர்ந்த இரண்டு அரச ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தொடர் தளபதிகளின் மரணம் விடுதலைப் புலிகளுக்கும் அடுத்தடுத்து சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழர்களுக்கோ விடுதலைப் புலிகளின் மேல் இருந்த நம்பிக்கை குறையவில்லை. அதே நேரம் இந்தியா உட்பட்ட சர்வதேசம் மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர் அதற்கேற்றாற்ப்போல் தமிழகம் மற்றும் புலம்பெயர் உறவுகள் நடத்திவந்த தொடர் போராட்டங்களும் அமைந்திருந்தது. என்னதான் தொடர் துன்பத்தைத் அனுபவித்தாலும் இந்த நிலைமாறும் என்ற எண்ணத்தோடு தினம் தினம் வேதனைகளுடன் நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம் அப்போதுதான் மீண்டும் ஒரு அதிர்ச்சி!
இனப்படுகொலை தொடரும்..
முன்னய பாகம்...
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் N.Jeyakanthan அவர்களால் வழங்கப்பட்டு 13 May 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை N.Jeyakanthan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
Geen opmerkingen:
Een reactie posten