தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 juni 2011

தமிழக ஆட்சியாளரின் மனக்கதவு திறந்துள்ளது

[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 09:34.23 AM GMT ] [ வீரகேசரி ]

தமிழக அரசியலில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் பொதுவாகவே ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் கலந்து கரைந்து போய் விடுவர்.
இந்திய மத்திய அரசில் ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சி கொண்டுள்ள “தேசிய நலன்'' அரசியல் மாயைக்குள் மறைந்து மங்கி தமிழர், தமிழ் நாடு என்ற பிரக்ஞைகளுக்கு அப்பால் நின்று தமிழக ஆட்சி நடைபெறும்.

முன்னாள் முதல்வர் கலைஞர். கருணாநிதியின் ஆட்சி இதற்கோர் நல்ல உதாரணம்.

இந்திய மத்திய அரசில் ஆட்சி பீடமேறியுள்ள காங்கிரஸின் தேசிய நலன் அரசியலுக்குத் துணை நின்று இறுதியில் ஆட்சியையும் பறி கொடுத்து நிற்கின்றார்.

இந்த ஒரு வரலாற்றில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டவராக இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உள்ளார்.

இந்திய மத்திய அரசின் தேசிய நலன் சார்ந்த வெளிநாட்டுக் கொள்கை என்ற மாயைக்குள் இருந்து தூர விலகி நின்று இலங்கைத் தமிழர் விவகாரத்தையும் தமிழக நலனையும் கையாளத் தொடங்கிவிட்டார் இன்றைய தமிழக முதல்வர்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிய வேளை தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் “இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மாநில அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அளவிலேயே கையாள முடியும். இதனை உரிய முறையில் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளது'' எனத் தெவித்திருந்தார்.

இந்தச் செய்தி அவ்வேளையில் கடந்த கால தமிழக அரசுகளைப் போல புதிய அரசும் செயற்படப் போகின்றதே என்ற அச்சத்தைப் பொதுவாகவே ஊட்டியது.

ஆனால் அது அவ்வாறல்ல புதிய போக்கில் புதிய அரசு செயற்படும் என்பதை முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய நடவடிக்கைகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கையாக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை கடந்த புதன்கிழமை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார்.

தமிழக முதல்வர் ஆரம்பத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்தவர். அன்று அவரின் இந்தக் கொள்கை இலங்கைக்கு இனிப்பாக இருந்தது. ஆனால் இன்று அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதும் அழுத்தம் கொடுப்பதும் இலங்கைக்கு அவ்வளவு விருப்பமான செய்தியாக இருக்காது.

இதன் எதிரொலியான உணர்வலைகளை இலங்கைத் தரப்பிலிருந்து அதிகமாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக தனி ஈழம் கோரவில்லை. தனி ஈழத்துக்கு ஆதரவும் அளிக்கவில்லை. தமிழர்களுக்கு சமவுரிமை வழங்குங்கள். நீதி, நியாயமாக நடத்துங்கள் என்றுதான் கோருகின்றார்.

இதனையே இன்று சர்வதேச சமூகம் தமிழர்கள் சார்பில் இலங்கையிடம் கோரி நிற்கின்றது.

கடந்த பல வருடங்களுக்கு முன் தமிழக திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது அங்கு சிலருடன் உரையாடக் கிடைத்தது. அவ்வேளை இலங்கை மண்ணில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இலங்கைத் தமிழ்மக்களை நோக்கி அன்றைய தமிழக தி.மு.க. அரசும் மத்திய காங்கிரஸ் அரசும் உதவிக்கரம் நீட்டாதா? என எதிர்பார்த்திருந்த கால கட்டம் அது.

திருநெல்வேலி தமிழ் மகன் ஒருவர் இவ்வாறு கூறினார்.

தமிழர்கள் பற்றி இந்திய மத்திய அரசு அக்கறை காட்டாது. மொரிசியஸில் இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது இந்தியா கொதித்தெழுந்தது. ஏன் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் வட இந்தியர்கள். மலேசியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் இந்திய மத்திய அரசு அலட்டிக் கொள்ளவில்லை. ஏன் என்றால் மலேசியாவில் தாக்கப்பட்டவர்கள் தமிழர்கள்.

பாகிஸ்தானுடன் மண்ணுக்காக இந்தியா போர் புரியும். ஏன் என்றால் இந்த மண் இந்தியாவின் வட பகுதியினருக்குச் சொந்தமானது. ஆனால் கச்சதீவை எவ்வித சலனமுமின்றி இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும். ஏனெனில், கச்சதீவு தமிழகத்துடன் இணைந்தது.

இதேபோல் தான் இந்திய மத்திய அரசின் மன நிலையும் இலங்கைத் தமிழர்கள் நோக்கியும் இருக்கும். இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்கள் பற்றி மத்திய அரசு அலட்டிக் கொள்ளாது'' என்று அவர் கூறினார்.

இதனையே தமிழக கவிஞர் பா. விஜய் கேசரி வார இதழுக்கு இவ்வாரம் வழங்கிய செவ்வியிலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு விவகாரமாகவே பார்க்கின்றது என்றும் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் இலங்கை தமிழர் விவகாரத்தைத் தமது விவகாரமாகப் பார்த்தனர் என்பது உண்மைதான். ஆனால் தமிழக அரசுகள் அவ்வாறு பார்க்கத் தவறிவிட்டன.

அதன் விளைவுகள் பற்றி இங்கு கூறத் தேவையில்லை. ஆனால், இன்றைய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு விவகாரமாக தமது விவகாரமாக பார்க்க விழைந்ததன் பிரதி பலனாகவே தமிழக சட்ட சபை தீர்மானம் அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு தீர்மானத்தை தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்திய மத்திய அரசுக்கு அடங்கிக் கிடந்த தி.மு.க. இதற்கு மசியவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்து இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர் தொடர்ந்தும் இதே போக்கினைக் கொண்டிருப்பாராயின் இந்திய மத்திய அரசையும் இலங்கை அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு அவரால் முடியும்.

தமிழக மக்கள் தமிழகத்தில் தேர்தல் மூலம் அமைத்துக் கொடுத்த அரசியல் வீதியை முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு நோக்கி விரிவுபடுத்துவதற்கான சகல வல்லமையையும் இன்றைய அவரது செயன்முறை அவருக்கு வழங்க வல்லது.

இலங்கைத் தமிழர் விவகாரம் தி.மு.க. தமிழகத்தில் தூக்கி வீசப்படவும், காங்கிரஸை ஓரங்கட்டவும் வழி வகுத்துள்ளது. இதில் கிடைத்த அறுவடையுடன் மத்திய அரசுக்கான தேர்தலை நோக்கி இலாகவமாக காய் நகர்த்தவும், தமிழகத்தில் பெரியளவில் தேர்தல் முடிவகளை தனதாக்கிக் கொள்வதற்கும் இன்றைய இந்த நிகழ்வுகள் நிச்சயமாக தமிழக முதல்வருக்கு களம் அமைத்துக் கொடுக்கும்.

முள்ளிவாய்க்காலில் முற்றாகிப் போன ஆயிரமாயிரம் அப்பாவி ஆத்மாக்கள் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை தட்டிவிட்டு நீதி கோர வைத்துள்ளன. இந்த ஆத்மாக்களின் தியாகம் இவர்களுக்காக தமிழகத்தில் தீக்குளித்த ஆத்மாக்களும் இணைந்து தமிழக அரசியல்வாதிகளின் மனச் சாட்சியையும் உசுப்பி விட்டமையே தமிழக முதல்வரின் செயற்பாடுகளாய் அமைந்துள்ளன.

வி.தேவராஜ்

Geen opmerkingen:

Een reactie posten