தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 november 2011

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்களை புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு

[ வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011, 06:51.23 AM GMT ]
ஆணைக்குழு முன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆணைக்குழு சாட்சியமளித்த பெண்களை மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கிய (தற்போதும் மறைமுகமாக இயங்குகின்ற) ஒட்டுக்குழுக்களுக்கெதிராக (கருணா பிள்ளையான் குழுக்கள்) சாட்சியமளித்த பெண்களிடம் மேலதிக விசாரணைகளை நடாத்துவதற்காக கொழும்பு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக குறித்த பெண்கள் மனித உரிமை அமைப்புகளிடம் முறையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
சர்வதேசத்தின் குற்றச் சாட்டுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பதிலாக அமையுமென இலங்கை அரசு பெரிய எடுப்பில் கூறி வருகின்றது.
ஆனால் இந்த அறிக்கையை ஒரு நம்பகமான நீதியான அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாதென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கூறிவந்தாலும் அறிக்கையில் என்னதான் கூறப்பட்டுள்ளதென அறிவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இதே நேரம் இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பல பெண்கள் அரசுடன் இருக்கின்ற ஒட்டுக்குழுக்களும் இலங்கை இராணுவமுமே தங்கள் உறவினர்களை கடத்தியதாகவும் கொலை செய்ததாகவும் தகுந்த ஆதாரத்துடன் தெரிவித்திருந்தனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சாட்சியமளிக்கையில் கருணா குழு தன்னை வெள்ளை வானில் கடத்திச் சென்று கொலை செய்ய முற்பட்டபோது தான் தப்பிச் சென்றதாகவும் பல பெண்களை அந்தக்குழு கொலை செய்ததை தான் பார்த்ததாகவும் இதனால் தனது சகோதரியை குறித்த குழு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் பின்பு தானும் கைது செய்யப்பட்டு இலங்கை இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் எதுவித அச்சமுமின்றி தெரிவித்திருந்தார்.
மேற்படி இந்த பெண்ணை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநாவின் விசேட பிரதிநிதிகளும் பல தடவைகள் இரகரியமாக சந்தித்து இலங்கை இராணுவதால் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட இந்த பெண்ணிடம் பல தடவைகள் தொடர்புகொண்ட இந்த ஆணைக்குழு தனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதாகவும் ஆணைக்குழுவின் முன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீளப்பெறுமாறும் வற்புறுத்தி இருத்தனர் ஆனால் இவற்றை ஏற்க அந்தப் பெண் மறுத்துவிட்டார். ஆனால் குறித்த பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட அவரது பதவியை இலங்கை அரசு மீண்டும் வழங்கியுள்ளதானது இந்தப் பெண்ணை சமாதானப்படுத்த ஆணைக்குழு பாரிய முயற்சி எடுக்கின்றதென்பது புலனாகின்றது.
இதேபோன்றுதான் இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை ஒரு நீதியான அறிக்கையாக காட்டுவதற்காக தங்களிடம் முறைப்பாடுகளை பதிவுசெய்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாக சர்வதேசத்திற்கு தெரிவிப்பதற்கு முற்படுவதாக தென்படுகின்றது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்பட்ட கருணா பிள்ளையான் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக குறித்த ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை எனவும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten