26 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவோ பொறுப்புக்கூறவோ சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
2012ம் ஆண்டுக்கான உலக மனிதஉரிமைகள் நிலைமைகள் குறித்த அறிக்கையை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ளது.

90 நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து 676 பக்கங்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாத்து வருவதாகவும், ஊடகங்கள் மற்றும் குடியியல் சமூகக்குழுக்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு,கிழக்கில் காணிகள் அபகரிப்பு மற்றும் பாதுகாப்பின்ன்மை பற்றிய பெருமளவு முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட- நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பரில் வெளியிடப்பட்ட போதும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை அது விடுவித்துள்ளது.“ என்றும் கூறப்பட்டுள்ளது.

“2011இல் பொறுப்புக்கூறுதல் மிகமுக்கிய பிரச்சினையாக இருந்ததுடன் ஊடகங்கள் மீதான தணிக்கை அதிகரித்தது, நீண்டகாலமாக இருந்து வந்த குறைகள் எவற்றுக்கும் தீவிரமாகப் பதிலளிக்கப்படவில்லை. “ என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவி்த்துள்ளார்.

நீதியற்ற, பலவீனமாக சட்ட ஆட்சியை, நில அபகரிப்பை, ஊடகத் தணிக்கையை சிறிலங்கர்கள் ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போர் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளி்ல் இருந்து அரசபடைகளை விடுவித்துள்ளதுடன், மேலதிக பொறுப்புக் கூறுதல் பற்றிய எந்த உறுதியான அடியையும் எடுத்து வைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் சிறிலங்கா அரச படைகளின் மீறல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த அறிக்கையில் எதையும் காணவில்லை. சுதந்திரமாக கருத்துகளை வெளியிடுவோர் மீதான தாக்குதல்கள் 2011 இலும் தொடர்ந்தன.“

‘உதயன்‘ செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டது, நெதர்லாந்து வானொலி ஊடகவியலாளர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்ட பின்னர் வெள்ளை வானில் வந்தோரால் தாக்கப்பட்டது, அவர்களின் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது, மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் யாழ்ப்பாணத்தில் காணாமற் போனது என்பனவற்றை தீவிரவாத செயல்களாகவே மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் பட்டியலிட்டுள்ளது.

இணையத்தளங்களை பதிவு செய்ய சிறிலங்கா அரசு விடுத்த உத்தரவை கருத்து சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாக இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்துக்கான அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் சிறியளவிலேயே உள்ளதாகவும் அது கூறியுள்ளது.

பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 1000 முன்னாள் போராளிகளின் நிலைமை என்னவென்று தெரியாத நிலை உள்ளதாகவும், தடுப்பிலுள்ளோர் சித்திரவதை செய்யப்படுவது, மற்றும் தவறாக நடத்தப்படுவது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.