தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 januari 2012

''பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவு இல்லாத நிலை இருக்கிறதே?'' - ஆனந்தவிகடன் கேள்விக்கு பதிலளித்த கவிஞர் சேரன்


ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசங்கள் இருப்பதும். தொடர்ச்சியான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது.
வேரைவிட்டு வெகு தூரம் விலகி விழுந்த விதைகளில் ஒருவராக, இன்று கவிதை விருட்சமாக இருப்பவர் கவிஞர் சேரன். தன் 'காடாற்று’, மற்றும் 'எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை சென்றிருந்தார். கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் - மானுடவியல் துறை பேராசிரியராக இருப்பவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்து ஆனந்த விகடன் அளாவளாவியது.
''என் 'காடாற்று’ தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் 'காடாற்று’ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால்... இறந்துபோனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆக வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது.
ஆனால், இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு அப்படி காடாற்று செய்ய முடியாது. 'போர் முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது. ஆனால், அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்!'' என விரிந்தது அவருடைய உரையாடல்.
''புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?''
''தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு... 20 வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிடத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்புகள் வேறு. அந்த விதத்தில் இது புதிய படைப்பு அனுபவத்தை முன்வைக்கிறது!''
''இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?''
''போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும் வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவி இல்லாமல் அந்தப் போரில் அவர்கள் வெற்றி அடைந்ததற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றுக்களும் இதை உறுதிபடுத்தின. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையும் அதை தெளிவுபடுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், 'கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவுசெய்ததை, காலச்சுவடு பதிப்பகம் 'கூண்டு’ என்ற தலைப்பில் தமிழில் வெளியிட்டு இருக்கிறது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டு இருப்பது விளங்கும். எத்தனைஅப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட வேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தன.
'இவ்வளவு உயிர் இழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை’ என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.
அதேபோல், வட கிழக்கு மாகாண மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்துவருவது தமிழர்களுக்குப் பெரும்பாலும் பயன் அளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்து உள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைவு தான்!''
''வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?''
அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமர்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டி எடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்து விடக் கூடாது அல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொது மக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.
இலங்கை வட கிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தித் திட்டங் களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவ னங்கள் அடையும் பொருளாதாரப் பயன்கள்தான் அதிகம். அங்கு அமைக்கப் படும் காற்றாலைகள் மலேசியாவில் இருக் கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும், அங்கு நடப்ப தாகச் சொல்லும் பல நலத் திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக்கொண்டு இருக்கின்றன. இவை எல்லாமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக்கும்!''

''லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதம் இருப்போர் முள்வேலி சிறையில் அடை பட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'' ''ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.
1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்து, காய்தல் உவத்தல் இல்லாத சுய விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.
2. இனிவரும் போராட்டம் பன்முகப் பட்ட, பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங் கைத் தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்.
3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் 'உணர்வுத் தோழமை’ என்ற அடிப்படையில் ஜனநாயகரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல், பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.
4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப் போனதால், அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.
5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவையாக இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டி இருக்கிறது.
''நாடு கடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்..?''
''கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் நடந்த 'நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்!''
''எலெக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''
''செல்போன், இணையதளம் மூலம் வாக்கு அளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஓர் இடத்தில் பரீட்சார்த்தமாக செய்துபார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டு அளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலெக்ட்ரானிக் ஓட்டுரிமையைத் துரிதப்படுத்தும். அதனால், வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டு அளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்து இருந்த 'நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்!''
''பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவு இல்லாத நிலை இருக்கிறதே?''
''பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு 'மல்டிபிள் சொய்ஸ் கேள்வி’ மூலமாகப் பதில் சொல்ல விரும்புகிறேன்.
1. பிரபாகரன் இருக்கிறார். திரும்பி வருவார்.
2. இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
3. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
4. கனத்த மௌனம்.
5. மேற்கூறிய யாவையும் சரி.
- இந்த பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்!''

நன்றி
ஆனந்த விகடன்

Geen opmerkingen:

Een reactie posten