தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

சிலை உடைப்புடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக!– பொன் செல்வராசா ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் !


[ மட்டு நிருபர் ]
மட்டக்களப்பு நகரில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, பேடன் பவல், சுவாமி விபுலானந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் மட்டக்களப்பு மக்களின் இதயங்களைப் புண்படுத்திய மறக்கமுடியாத ஒரு செயல் எனவும், இந்த சிலை உடைப்புடன் தொடர்புபட்டவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு.....
....நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் முழு வடிவம் வருமாறு:
அதிமேதகு மகிந்த ராஜபக்ச
இலங்கை ஜனாதிபதி
கொழும்பு
07.04.2012
ஐயா!
சர்வதேச புகழ்பெற்ற மாமனிதர்களின் சிலைகள் உடைப்பு
கடந்த 5ம் திகதி இரவு நடைபெற்ற மேற்படி விடயம் சம்பந்தமாக 6ம் திகதி காலை சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட பின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிலைமையை விபரமாக விளக்கினேன்.
மகாத்மாகாந்தி:  நாட்டின் சமாதானத்திற்காக சத்தியாக்கிரகத்தின் மூலம் பல கோரிக்கைகளை வென்றெடுத்த இந்திய மகான்.
பேடன் பவல்:  இவர் சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர். இப்போது இலங்கை தப்புள்ள நகரில் ஆசிய பசுபிக் சாரணிய ஜம்போறி நடந்துகொண்டிருக்கும் வேளையில் இச்சிலை உடைப்பு கடந்த 5ம் திகதி நடைபெறிறிருப்பது ஆச்சரியத்தை தருகின்ற விடயமாகும்.
சுவாமி விபுலானந்தர்:  இவர் இந்திய பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் பேராசிரியர் ஆவார். அத்துடன் யாழ்நூல் எனும் புத்தகத்தை எழுதி பிரபல்யமானவர். மட்டக்களப்பில் பிறந்த இவர் சிவானந்த வித்தியாலயத்தையும் நிறுவிய ஒரு மகான்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை:  இவர் ஒரு இலக்கியவாதி. மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு புலவர். தமிழ் இலக்கியத்தில் மிகவும் பாண்டியத்தியம் பெற்றவர். அத்துடன் இலங்கை முழுவதும் பிரபல்யம் வாய்ந்த ஒரு தமிழ் அறிஞர்.

இப்படிப்பட்ட சர்வதேச புகழ்மிக்க தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் மட்டக்களப்பு மக்களின் இதயங்களைப் புண்படுத்திய மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும்.
அதுமட்டுமல்லாமல் இச்சிலைகள் மட்டக்களப்பின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளன. மேலும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலும் உள்ளன. ஆகவே இவற்றிக்கு மத்தியில் இதை யார் செய்தார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது.
ஆகவே அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! இதை செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டக்களப்பு மக்களின் மனதிலிருந்து கவலையைப் போக்குமாறும் கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
உண்மையுள்ள,
பொன் செல்வராசா
பாராளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு

Geen opmerkingen:

Een reactie posten