தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 september 2011

நான் ஆறுமுகம். விரைவில் சாகப் போகிறேன். மரணமடைந்த பிறகு யாரும் அழ அனுமதிக்க வேண்டாம்

 (வீடியோ இணைப்பு)
'நான் ஆறுமுகம். நான் விரைவில் சாகப் போகிறேன். நான் மரணமடைந்த பிறகு யாரும் அழ அனுமதிக்க வேண்டாம்.' இந்த வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த விவரணப்படம். கிளிநொச்சியின் போரினால் சிதைந்த ஒரு வீட்டின் சுவரில் காணப்படும் இந்த (White lies and brute force) வாசகத்துடன் ஆரம்பிக்கிறது காட்டுமிராண்டித்தனமான மிருக பலமும் வெள்ளைப் பொய்களும் என்ற விவரணப்படம்.


போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது, போர் முடிவடைந்த பிற்பாடு தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது போர் முடிவடைந்து இரண்ட வருடங்களுக்குப் பின்னரும் இன்று இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விவரணப்படமாக அது இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் தனது இரண்டு கால்களையும் இழந்த ஒரு விவசாயி சொல்கிறார்: முள்ளிவாய்க்காலில் நான் எனது இரண்டு கால்களையும் இழந்தேன். இறுதி யுத்தத்தில் பெருமளவான மக்கள் காயப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் நான் நேரடியாகப் பார்த்தேன். 75 தொடக்கம் நூறுபேர்வரையான காயப்பட்டவர்களை ஏற்றி வைத்திருந்த வாகனத்தை இரணுவத்தினர் எரித்து விட்டனர். அதனை நான் என் கண்களால் பார்த்தேன். நான் இருந்த பங்கருக்குள் 27 பேர் இருந்தோம். ஒரு மாதம் அதற்குள் இருந்திருப்போம். ஆதற்குள் ஒரு பிணக் குவியலையே நான் கண்டேன். அக்காலப்பகுதியில் என் கண்ணால் முப்பதினாயிரம் சடலங்கள் வரை கண்டேன் என்கிறார் அவர்.

2009 மே 16ஆம் திகதி ஓமந்தையில் வைத்து எனது கணவரை இராணுவம் விசாரித்து விடுவதாக அழைத்துச் சென்றது. மே 18ஆம் திகதிதான் அவரை நான் கடைசியாகக் கண்டேன். அதன் பின்னர் எங்களை முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். முகாமிலிருந்து விடுதலையாகி எனது கணவரைத் தேடினேன். ஓமந்தை இராணுவக் கொமாண்டருக்கு இது தொடர்பில் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எது வித பதிலும் வரவில்லை. யுஎன்எச்சிஆர். ஐசிஆர்.சி ஓமந்தை பொலிஸ் என எல்லா இடமும் கடிதம் கொடுத்தேன். பூசா, நான்காம் மாடி என முகாம்கள் பலவற்றுக்கும் போனேன். எங்கும் அவருடைய பெயர் இல்லைஎன்று கைவிரித்து விட்டார்கள் என்கிறார் கணவனைக் காணாது பரிதவிக்கும் ஒரு பெண்மணி.

சித்திரவதை என்பது சாதாரணமானது என்னை புலிகள் என்று சொல்லி ஒத்துக் கொள்ளச் சொல்லி சித்தரவதை செய்தார்கள். மின்சார அதிர்ச்சி, குறட்டால் நகங்களைப் பிடுங்குதல் என சித்திரவதைகள் ஏராளம். வலயம் நான்கு முகாமுக்கு அருகில் குளிக்கச் சென்ற ஆறு பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வக்கு உள்ளாக்கப்பட்டனர் என்கிறார் இன்னொரு இளைஞர்.

இரண்டு வகையாகச் சித்திரவதைகளைப் பிரிக்கலாம். ஒன்று சித்தரவதை செய்வதனூடாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வது என்பது. இது தற்போது தேவையில்லாதது. ஏனெனில் இலங்கை அரசாங்கம் தாங்கள் பயங்கரவாதத்தைத் துடைத்தெறிந்து விட்டதாகச் சொல்கிறது. எனவே அந்தக்காரணம் வலுவற்றது. இரண்டாவது காரணம். இவர்கள் எதிரியினுடைய மக்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைப்பது என்கிறார் ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்பைச் சேர்ந்த மீனாட்சி கங்குலி.

அரசாங்கம் தன்னளவில் நியாயமாகச் செயற்பட்டு வருகிறது. அதிகாரப்பகிரிவு என்பது அவசியமில்லை என்கிறார் இந்தியாவுக்கான இலங்கைத்தூதுவர் காரியவாசம்.

சமாதானம் மற்றும் மீள்பார்வை என்பவற்றில் தேசம் இரண்டாகப் பிளவுண்டு கிடக்கிறது என்கிறார் என்.டி.ரிவி வர்ணனையாளர்.

அரசாங்கம் போரில் வென்று விட்டது. எனவே அதற்கு உண்மையான பேச்சுவார்த்தை என்பது இப்போது அவசியமில்லை என்றாகி விட்து அரசாங்கத்துக்கு. ஆனால் தொடர்ந்து மக்கள் ஒடுக்கப்படும் போது அந்த ஒடுக்குமுறையின் எல்லை தாண்டும் போது அது உடனடியாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவே ஒரு ஆயுதப் போராகப் பரிணமிக்கும். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒதுக்குதலுக்கு ஆளாகி புலம் பெயர்ந்துள்ள ஏனைய சிறுபான்மையிராகிய பலஸ்தீனிய, குர்திஸ் சமூகங்களுடன் சர்வதேச ரீதியில் தனது ஒற்றுமையை பலப்படுத்திக் கொண்டு எழுந்து வரும். அந்த எதிர்ப்பு நிச்சயமாக வேறொரு வடிவத்தில் இருக்கும். ஆனால் அது தேசிய அடையாளங்களைக் கொண்டதாக மட்டும் இருக்காது என்கிறார் சமாதானம் மற்றும் இணப்பாடு தொடர்பில் புலமையாளரான குட்ரன் கரமீர்


Sri Lanka: White lies and brute force
14 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten