தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2011

புலம்பெயர் தமிழர்களே அச்சப்படாதீர்கள்!- பேராசிரியர் திரு யான்.பி.நீல்சன்

[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 09:17.44 AM GMT ]
நாடு கடந்த தமிழீழ அரசையோ அல்லது உலகத் தமிழ் கூட்டமைப்பையோ பார்க்கும் போது, நீங்கள் மேற்குலக நாடுகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு உங்களிடம் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
என்று பேராசிரியர் திரு யான்.பி.நீல்சன் அவர்கள், கடந்த திங்களன்று செனிவாவில் நடந்த ஈழத்தமிழர்களின் பொங்குதமிழ் பேரணியில் கலந்துக் கொண்டு இதை தெரிவித்தார்.
மேலும் நமது கடந்தக் கால பட்டறிவின் மூலம் பார்க்கும் போது, மேற்குலக நாடுகள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையானது வீண்தான், ஏனெனில் பாதிக்கப்பட்டவட்களுக்கு ஆதரவாக இல்லாமல் குற்றவாளிகளின் பக்கம் சாய்ந்தது மட்டுமல்லாமல் இங்கே போராட்டம் நடத்தியவர்களை அச்சப்படுத்தும் வகையில் அவர்களை குற்றவாளிகளாகவும் சித்தரித்த்து.
இவற்றையெல்லாம் கண்டு பயந்து விடாமல், இந்தியாவை பற்றியும் சற்று சிந்தியுங்கள், ஏனெனில் இலங்கையில் நடப்பதை தீர்மானிக்கும் ஆற்றலாக அது இன்றளவும் உள்ளது.
பேராசிரியர் நீல்சன் என்ற சமூகவியலாளர், தமிழீழ மக்களின் போராட்டத்துடன் இணைந்துள்ள சர்வதேச மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிசு நகருக்கு அருகில் உள்ள நகரத்தின் ஆணையாளர் போன்ற அரசியல் ஆளுமையாளர்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக இங்கு வந்திருப்பது ஏனென்றால் இலங்கையில் நடந்துக்கொண்டிருப்பது, மேற்குலக சமூகத்தில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்று பிரெஞ்சு நகராட்சி ஆணையாளர் திரு ஸ்டீபன் கடிக்னன் அவர்களின் வருகையை நீல்சன் பாராட்டி பேசினார்.
இந்தப் போராட்டத்தில் உங்களுடன் மேலும் சில வெள்ளைக்கார மக்கள் உள்ளனர். எல்லோரும் அடுத்த முறை வரும்போது தங்களின் இத்தாலி, பிரஞ்சு, யெர்மன் மற்றும் ஸ்காண்டிநேவியன் நண்பர்களில் சிலரைக் கண்டிப்பாக அழைத்துவர வேண்டும். இல்லையெனில் இது உங்களுடையப் போராட்டமாக மட்டும் தான் இருக்கும்.
மேலும் அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக உங்களுடைய பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் ஐ.நா மன்றத்தின் பிரதுநிதிகளிடமும், பல தொண்டு நிறுவனங்கள் மூலம் ஐ.நா விற்கு தெரிவிக்கவும் நடந்து கொண்டிருக்கிற போராட்டத்தை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடும் கண்டுகொள்ளவில்லை.
உலகத்தில் சுமார் 200 நாடுகளில், கிட்டத்தட்ட 2000 பேர் தங்கள் சொந்த நாட்டின் சிறைகளில் உங்களை ஒத்த கோரிக்கைகளுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளனர். மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, அவர்களை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் அவர்களும் உங்களைப் போன்றே அடக்குகுறையாலும், ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் உங்களைப்போலவே விடுதலை தாகத்தைக் கொண்டுள்ளனர்.
போர்க்களத்தில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தீர்கள். சிங்கள இராணுவத்திற்கெதிரான ஆயுதப்போராட்டம் வெற்றிபெற்றிருந்தக் காலகட்டம் அது. பொதுவாக இந்த நிலை, அமைதிப்பேச்சு வார்த்தையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தமிழர்கள் போராட்டக்களத்தில் பெற்ற வெற்றிகளை அமைதிப்பேச்சு வார்த்தை நடவடிக்கையில் இழந்தனர். நாம் கண்டிப்பாக இதற்கான காரணங்களை ஆராய வேண்டும், எதிரிகள் யார் என்று கண்டறிய வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் நாம் யாருடன் நட்பு வைத்துக்கொள்ள போகிறோம் என்பது முக்கியம்.
நாடுகடந்த தமிழீழ அரசையும், உலகத் தமிழர் கூட்டமைப்பையும் பார்க்கும் போது, நீங்கள் ஒற்றுமையாக இணைந்து, மேற்குலக நாடுகளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். இந்த நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஐக்கிய நாடுகள், யப்பான், நோர்வே போன்ற நாடுகளை உள்ளடக்கிய கூட்டத்திடம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சமதொலைவு மற்றும் நடுநிலையுடன் அணுகும் உதவியை எதிர்பார்த்தோம். ஆனால், வெகுவிரைவில் அவர்களின் நோக்கமும், செயல்பாடுகளும் வேறு வழியில் திரும்பின.
நாட்டின் இனவெறி பேரினவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளின் பக்கமே சாய்ந்தனர். மேற்குலக நாடுகளின் ஆளும் வர்க்கம், தங்களுடைய சொந்த அரசியல் நலன்களைத்தான் கருத்தில் கொண்டிருந்தது, மக்களின் மனித உரிமைகளையோ, மக்களாட்சியையோ அல்ல.
ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த நாடுகளில் சிறுபான்மையினராக மாற்றப்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகளை பற்றி பேராசிரியர் நீலசன் மேலும் கூறுவதாவது:
நானும் உங்களுடைய தனித்தமிழீழத்திற்கான முறையான கோரிக்கையை இங்கே பதிவு செய்கிறேன். மேலும் தமிழ்மக்களால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறேன்.
ஆனால், தற்சமயம் இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தற்சமயம் இருக்கக்கூடிய பெரிய ஆபத்து, தமிழர்களின் நாடுகள் குறைக்கப்பட்டு சிறுபான்மையாக மாற்றப்படுவது தான்.
சர்வதேச சட்டத்தில், சிறுபான்மையினருக்கு தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் ஒன்றுபட்ட உரிமைகள் கிடையாது.
உங்கள் சொந்த நாட்டின் நிலப்பகுதியில் நீங்கள் மக்களாக இருக்கும் வரையில், உங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிக்க.
சொந்த நாட்டில் போர்க்காலங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு திரும்புவதை தடுப்பதையும், அப்பகுதிகளில் சிங்கள விவசாயிகளை மக்களை கொண்டு காலணியாதிக்கத்தையும், இராணுவத்தின் உயர்பாதுகாப்பு மண்டலங்களை ஏற்படுத்தியும், நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி என்றப் பெயரில் தமிழர்களின் நிலங்களை சுற்றுலாவிற்காக எடுத்துக்கொள்வதையும், சிங்கள அரசு 2009 லிருந்து ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளது.
மக்கள் தொகையிலும், அரசியலிலும் நீங்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருகிறீர்கள் என்பதைதான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும் மோசமாக, அனைத்து மக்களும் வாழ்கின்ற தொடர்ச்சியான ஒரு பிரதேசமாக காட்டுவதற்காக முயற்சிக்கிறது. இந்த தொடர்சியான நிலப்பரப்பாக மாற்றும் நடவடிக்கையை நீங்கள் களையவில்லை, முறியடிக்கவில்லை எனில் யூதர்களுக்கு ஏற்பட்டதை போன்றே உங்களுக்கும் எல்லாம் கிடைப்பது போன்று இருக்கும் ஆனால் உங்களுக்கான சுயநிர்ணய உரிமை இருக்காது.
தமிழினம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து இது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
தற்சமயம் தனிநாட்டிற்கான சுய-நிர்ணய உரிமை என்பதை முன்னிறுத்த முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். இது நமது நீண்ட நாள் இலக்கு. புலம்பெயர் தமிழர்களை விட, இலங்கைத் தீவில் வாழும் தமிழ்மக்கள், தங்களுடைய அரசியல்வாதிகள் செய்யக்கூடிய பிழைகளை தடுக்க வேண்டிய சரியான தருணம் இது.
நீங்கள் மேற்குலக நாடுகளைப் பற்றி சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டு, இந்தியாவைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள். ஏனெனில் அவர்கள்தான் இன்றளவும், இலங்கையில் நடப்பதை தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறார்கள்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்பது உண்மைச் செய்திதான்.
ஆனால் இதைப்பற்றி இந்தியாவை விட அமெரிக்கா கவலைப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆகையால் புவி-சார் அரசியலைப் பற்றி ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது மற்றும் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டுள்ளது.
இறுதியாக, சர்வதேச விசாரணை ஆணையமும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் இலங்கை மீதான வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்டாலும், அது இலங்கையின் அரசியலமைப்பையும், ராசபக்சே குடும்பத்தின் ஊழலையும் மாற்றிவிடாது. வேறுவகையில் சொல்ல வேண்டும் என்றால், இது ஊடகத்தின் நிலைமையை மாற்றிவிடாது.
இலங்கையில் சிங்களவர்களுக்கு இடையில் உள்ள அறிவார்ந்த மக்களும், மக்களாட்சியை விரும்புகிறவர்களும், தங்களுடைய சொந்த நலன்களுக்காகவாவது அதிகார மயப்படுத்தலையும், இனவெறி கொள்கைகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.
நீங்கள் செனிவாவில் அமர்ந்துக் கொண்டு சுய-நிர்ணய உரிமையை உரத்துக் கேட்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலம்பெயர் தமிழர்கள் இங்கே தங்கள் கொடிகளுடன் வந்திருக்கும் அதே நேரத்தில், இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
உங்களுக்கிடையில் பிளவுகள் உள்ளன. அவற்றை நீங்கள் களைந்து ஒன்றுபட்ட முன்னணியாக வேண்டும். நீங்கள் வேறு வேறு பாதைகளில் பயணிக்கலாம். ஆனால் ஒற்றை இலக்கு உடையவர்கள் நீங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
கடந்த காலங்களில் இந்த மாதிரியான போராட்டங்களை இங்கே முன்னெடுத்தவர்கள், குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இது இலங்கை என்ன நினைக்கிறதோ அதற்கு சாதகமாகத்தான் கண்டிப்பாக வேலைசெய்யும். உங்களை அச்சப்படுத்துவது தான் இதன் பொருளாகும். நான் உங்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் இவைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள்.
அடக்குமுறைகள் இருக்கும் வரை தடைகளும் இருக்கும், ஆகையால் இவைகளை உண்மையில் சவால்களாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், நீங்கள் அச்சப்பட்டுக்கொண்டு உங்கள் போராட்டங்களை கைவிடுவீர்களாயின், நீங்கள் முயற்சிக்காமலேயே தோற்றுப்போவீர்கள்.

Geen opmerkingen:

Een reactie posten