தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 september 2011

அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தம்! இலங்கையினால் சமாளிக்க முடியுமா?

[ செவ்வாய்க்கிழமை, 06 செப்ரெம்பர் 2011, 07:06.13 AM GMT ]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மற்றைய நாடுகளின் பாரிய உதவியுடன், பங்களிப்புடன் இலங்கை வென்றுள்ளது. ஆனால் 2009ம் ஆண்டு மே'யிலிருந்து பல்வேறுபட்ட முறைகளில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் தினமும் அதிகரித்த வண்ணமாகவுள்ளது. இவற்றை இலங்கையினால் சமாளிக்க முடியுமா?
சர்வதேச சட்டங்களை மீறி போர்க் குற்றம், இன அழிப்பு ஆகிய மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை எப்படியாக தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது?
ஆனால், இவ்விரு பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நாம் தொடர்ந்து சர்வதேசங்களினால் தண்டிக்கப்பட்டு வருகிறோம் என்று சில நாடுகள் கடந்த பல வருடங்களாக முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின்படி குறைந்தது 40,000 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டும், ஏறக்குறைய 300.00 பொது மக்கள் முகாம்களைச் சென்றடைந்தனர். இதேவேளை ஏறக்குறைய 15,000 போராளிகள் சரணடைந்தனர்.
ஆனால் இலங்கை அரசு சகல புள்ளி விவரங்களையும் மறைப்பது மட்டுமல்லாது, தினமும் சரணடைந்த போராளிகள் முதல் பொது மக்கள் வரை காணாமல் போகின்றனர்.
ஐ.நா. முதல், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பல இலங்கையின் இச் சர்வாதிகாரப் போக்குடனான தமிழின அழிப்பைக் கடுமையாக கண்டிக்கின்றன.
இதே வேளை முக்கிய சர்வதேச நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பு நிறுவனம் ஆகியவை உட்பட பல்வேறு மனிதாபிமான, மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையின் எதேச்சையான போக்கைக் கடுமையாக கண்டிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகையால் இவை விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் கடுமையாக உள்ளார்.
ஆனால், இலங்கை தமக்கு மிக நீண்ட காலமாக பழக்கப்பட்ட பொய், புரளி போன்ற திருகுதாளம் மூலம் அயலவரான இந்தியா, உட்பட சகல எதிர்ப்புக்களையும் தற்பொழுது சமாளித்து வருகிறது.
மா புளிப்பது தோசைக்கு நல்லது என்பது போல் இலங்கையின் மகிந்த ராசபக்ச அரசு கொப்பில் நின்று மரத்தைத் தறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாதத்தை அழிக்க உதவிய இராணுவத்தைத் தாம் காட்டிக் கொடுக்க மாட்டோம் என வியாக்கியானம் பேசும் இலங்கை அரசு, இவ் இராணுவ வெற்றிக்கு வித்திட்டு தலைமை வகித்த தளபதி சரத் பொன்சேகாவையே இரண்டரை வருடம் சிறையில் அடைத்துள்ளது.
இப்படியான போக்கைக் கொண்ட அரசினர் உண்மையில் இராணுவத்தைக் காப்பாற்றுவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியமானதா?
தமக்கு சீனாவும், ரஷ்யாவும் என்றும் துணைக்கு வருவார்களென்ற எண்ணத்தில் இலங்கை மிகவும் கண்மூடித்தனமாக நடக்கிறது.
சர்வதேச நீதிமன்றங்கள் ஒரு நாட்டையோ அல்லது நாட்டின் தலைவர்களையோ விசாரித்துத் தண்டனை வழங்குவதை வேறு எந்த வல்லரசுகளாலும் காப்பாற்ற முடியாது என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.
அப்படியானால் இலங்கையின் போர்க் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்பொழுது சீனா, ரஷ்யா, கியூபாவால் என்ன செய்ய முடியும்?
கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் மகிந்த ராஜபக்ச அரசிற்கு சுருக்கு இறுகி வருவதை மறைமுகமாகக் காட்டுகின்றன.
முதலாவதாக, சர்வதேச குற்ற நீதிமன்றத்துடன் பொது நலவாய நாடுகளின் செயலகம் செய்து கொண்டு நல்லிணக்க உடன்படிக்கை, இதனுடைய தாற்பரியத்தை, விளைவுகளை இலங்கை விளங்கிக் கொள்ளுமா?
இரண்டாவதாக, கடந்த 15-07-2011 அன்று இந்தி வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் இலங்கை பற்றி பத்திரிகையாளருக்கு கூறிய கருத்து!
மூன்றாவதாக, அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் திருமதி கிலாரி கிளின்டனுடைய சென்னை பயணம், இந்தியாவில் மாநில அரசுகள் உண்டு.
திருமதி கிளின்டன் சைவ சமயத்தைச் சார்ந்தவராக இருந்தால் தமிழ் நாட்டில் உள்ள பழம்பெரும் சைவக் கோயில்களின் வழிபாட்டிற்காக சென்னை சென்றதாக நாம் கூறிக் கொள்ளலாம்.
ஆனால் எண்ணெய் வளமோ, பொன் வளமோ அற்ற தமிழ் நாட்டிற்கு எதற்காக அமெரிக்கச் செயலர் சென்றார் என்பதைப் பகுத்தறிவு படைத்த இலங்கையின் அரசியல்வாதிகள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சரியோ, பிழையோ, இலங்கை போரை வெற்றி கொண்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது இறுகுகின்ற சர்வதேசத்தின் பாசக்கயிறை இலங்கையால் வெல்ல முடியுமா?

Geen opmerkingen:

Een reactie posten