தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 september 2011

சிறீலங்கா குறித்த கனடிய அணுகுமுறையில் பாரிய மாற்றம்!-தேசிய பத்திரிகை குளோப் அன்ட் மெயில்


[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 01:38.45 PM GMT ]
கனடா தழுவி வெளியாகும் குளோப் அன்ட் மெயில் என்னும் ஆங்கில தினசரியின் இன்றைய பதிப்பில், கொள்கையில் மாற்றம்! மனித உரிமைகள் விடயத்தில் சிறீலங்காவின் மீது அழுத்தம் பிரயோகிக்கிறார் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர்! எனத் தலைப்பிட்டு கனடிய அணுகுமுறையின் பாரிய மாற்றங்கள் குறித்து விரிவான முதன்மைச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தமிழ் மக்களிடையே பெரிதாகவும், உலகலாவிய நாடுகள் மத்தியிலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்ற இவ்விடயம் குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள அப்பத்திரிகை கடந்த காலங்களில் தமிழர்கள் கனடிய அரசு குறித்து விசனம் கொண்டிருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது பல சர்வதேச நாடுகள் போன்று கனடாவும் வாளாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போது சிறீலங்காவிற்கு எதிரான அழுத்தத்தை மேலும் சர்வதேச ரீதியாக அதிகரிப்பதில் கனடா முன்நிற்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கனடியப் பிரதமர், மாற்றம் ஏற்படாதவரை 2013ல் சிறீலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு தான் செல்ல மாட்டேன் எனவும், ஏனைய தலைவர்களும் அவ்வாறே செய்வர் எனத் தெரிவித்த கருத்து சர்வதேச ரீதியாக வெளியானதன் பின், அச் செயற்பாட்டை கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் முக்கிய பணியாகக் கொண்டுள்ளதாக செய்தியாளர் கம்பல் கிளாக் மேலும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கனடியத் தமிழர் குழு ஒன்றை அமைச்சர் சந்தித்துப் பேசியதாகவும், அவர்களின் கரிசனையை சிறீலங்கா தரப்புடன் பேசும் போது அவர் தெரிவித்து வருவதாகவும் அவ்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி..எல். பீரிசை கடந்த வியாழக்கிழமை செப்டம்பர் 22ம் நாள் ஐ.நா சபையிலும், கனடாவிற்கான சிறீலங்கா தூதுவரை ஒட்டாவாவிலும் வைத்து சந்தித்தபோது கனடாவின் கரிசனைகளை நேரடியாக தெரிவித்ததாகவும், வெறும் நம்பிக்கையூட்டல்களை அல்ல மாற்றத்தை உடன் காண விரும்புவதாகவும் தெளிவுபடத் தெரிவித்ததாக அமைச்சரின் பேச்சாளர் கிரிஸ் டே தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் போர்க்குற்ற விவகாரத்தில் கனடா சுயாதீன வெளிப்படையான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்பதை பல தளங்களிலும் சமீபகாலமாக வலியுறுத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜி.எல் பீரிசிடம் கனடிய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்காவின் ஆட்சி எதேச்சாதிகாரம் நிறைந்ததாக மாறிவருவது குறித்து கனடாவின் கரிசனையை நேரடியாக தெரிவித்தது குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்பில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தற்போதைய ராஐபக்ச அரசு குறித்து தாமும் கொண்டுள்ள இக்கரிசனையை நேரடியாக தெரிவிக்க தாம் தயங்கினாலும், கனடா நேரடியாக தெரிவித்துள்ளமை நல்ல ஆரம்பம் என்றனர்.
கனடாவின் தொடரும் சிறீலங்கா குறித்த இராஐதந்திர நடவடிக்கைகள் குறித்து எமது செய்தியாளர் கனடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவருடன் பேசிய போது அவர் இச்செயற்பாடுகள் தற்போதைய அரசு யூனில் பதவியேற்று வெளிவிவகார அமைச்சராக ஜோன் பெயட் அவர்கள் பதவியேற்றதில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அதற்கு ஆதாரமாக யூலையில் வெளியிடப்பட்ட அமைச்சின் செய்திக் குறிப்பொன்றையும் எமது செய்தியாளரிடம் காண்பித்தார். யூலை 24ஆம் நாள் இந்தோனிசியாவில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட கனடிய வெளிவிவகார அமைச்சர் அங்கு வைத்து அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகிளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தமையும் அவர்களுடன் சிறீலங்கா விடயங்கள் குறித்து பேசியதாகவும் அதில் இருந்தது.
சரி, ஐ.நாவின் மனித உரிமைகள் அவையத்தின் கூட்டத்தொடரில் nஐனிவாவில் கலந்து கொண்ட கனடிய வெளிவிவகார அமைச்சர் அங்கு வைத்து சிறீலங்காவிற்கு எதிராக கனடா கொண்டுவர இருந்த பிரேரணையை செப்டம்பர் 22ஆம் நாள் வாபஸ் பெற்றார் எனத் தமிழில் வெளியாகி உலகெங்கும் தமிழரிடையே பரபரப்பை ஏற்படுத்திய செய்தி குறித்து கனடிய வெளிவிவகார அதிகாரியிடம் எமது செய்தியாளர் வினவிய போது அது குறித்து கனடிய அதிகாரி வியப்பு வெளியிட்டார்.
கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் செப்டம்பர் 20ஆம் நாளில் இருந்து 27ஆம் நாள் வரை கனடா சார்பில் ஐ.நா பொதுச்சபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள நியூயோர்க்கில் இருந்தார் எனக் கூறிய அவ்வதிகாரி, அவர் ஜெனிவா செல்லவேயில்லை என்றார். அவ்வாறாயின் தமிழில் மட்டும் ஒரு செய்தி எவ்வாறு வெளியாகியது, அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? ஏன்ற கேள்வி தற்போது பூதாகரமாக எழுந்துள்ளது.
சிறீலங்கா குறித்து கனடிய மாற்றம் தீவிரமடைந்துவரும் நிலையில் இது குறித்த சிறீலங்காவின் எதிர் நடவடிக்கைகளும் தீவிரமடையும். இம்மாற்றங்களை நோக்கி தமிழின செயற்பாட்டாளர்கள் தங்கள் முகங்களைக் காட்டாது உண்மைக்கும் சத்தியத்திற்குமாக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
அவர்களை கண்டறியவும், அவர்கள் மீதான நெருக்குவாரத்தை அதிகரிக்கவும், தேவை ஏற்பட்டால் வன்முறையை ஏவிவிடவும் பல முயற்சிகள் திரை மறைவில் நடைபெற்று வருகின்றன.
இதில் இருந்து வெற்றிகரமாக வெளிவருவது கனடிய தமிழ் மக்கள் முன் உள்ள சவால் நிறைந்த பணி என்றார் மூத்த கனடியத் தமிழின உணர்வாளர்.

Geen opmerkingen:

Een reactie posten