தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 september 2011

அமெரிக்காவுடன் அரசாங்கம் இறங்கிப் போகக் காரணம் என்ன?

[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:37.47 AM GMT ]
கடந்த மே மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக், கடந்த வாரம் மீண்டும் கொழும்பு வந்திருந்தார்.
அவரது பயணம் கடந்த மாத இறுதியில் இடம்பெற்றிருக்க வேண்டியது.
அமெரிக்காவில் வீசிய ஐரின் சூறாவளி அவரது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் தடுத்து விட்டது.
அவர் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்தது இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகவே இருந்தது.
இந்தமுறையும் பிளேக் தனது பயணத்தின் முடிவில் நம்பகமான போர்க்குற்ற விசாரணையின் அவசியம் குறித்து உறுதிபடக் கூறியுள்ளார்.
அத்துடன் வடக்கில் துணை ஆயுதக் குழுக்களினது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கிறீஸ் பேய்களின் அடாவடித்தனத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிளேக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அரசியல் தீர்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகள் குறித்தும் அவர் பேச்சு நடத்தியுள்ளார்.
போருக்குப் பிந்திய மீள்குடியமர்வு, கண்ணிவெடிகளை அகற்றும் பணியின் முன்னேற்றம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும் அவர் கூறியுள்ள பல விடயங்கள் அரசாங்கத்தினால் ஜீரணிக்க கூடியவையல்ல.
வடக்கில் நீண்டகாலத்துக்கு இராணுவத்தினர் நிலைகொள்ளச் செய்வதைத் தவிர்க்கவும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும், அதிகளவில் தமிழ்ப் பொலிஸாரை பணிக்கு அமர்த்த வேண்டுமெனவும் பிளேக் கூறியுள்ளார்.
பிளேக் கூறியுள்ள கருத்துகளில் இருந்து, அமெரிக்காவோ அவரோ தமது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால்,வழக்கத்தில் இதுபோன்ற கருத்துகள் வரும் போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற அரசாங்கம், பிளேக்கின் கருத்துக்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.
கடந்தமுறை அவர் வந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரைச் சந்திக்கவேயில்லை.
இந்தமுறை பிளேக் வந்தவுடன் காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து விட்டு, நேராக அலரி மாளிகைக்குத் தான் சென்றிருந்தார்.
அங்கு மஹிந்த ராஜபக்ச காலை விருந்துடன் பிளேக்கை சந்திக்கக் காத்துக் கொண்டிருந்தார்.
அந்தச் சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான இறுக்கத்துடன் தோற்றமளிக்கவில்லை.
தனது வெள்ளைச்சட்டை, சிவப்புச் சால்வை எல்லாவற்றையும் விட்டு, சாதாரண உடையில் பிளேக்கை சந்திக்கக் காத்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் பிளேக்கின் ஒரு சில கருத்துகளையே மஹிந்த ராஜபக்ச எதிர்த்துள்ளார்.
பல விடயங்களில் அவர் இணங்கிப் போகும் அளவுக்கு இறங்கிப் போனதாகவும் தகவல். குறிப்பாக கூட்டமைப்புடனான பேச்சுகள், அதில் முக்கியமானதாகும்.
கடந்த மே மாதம் பிளேக் கொழும்பு வருவதற்கான பயணத் திகதியை தீர்மானிக்க முயன்றபோது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியாவில் இருப்பதாக அரசாங்கம் பதில் அனுப்பியது.
அது பிளேக்கின் வருகையைப் பிற்போடச் செய்யும் ஒரு தந்திரமாகவே விமர்சிக்கப்பட்டது.
ஆனால், இந்தமுறை பிளேக் 12ஆம் திகதி வரவுள்ளார் என்ற தகவல் பரிமாறப்பட்ட போதும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளிநாட்டுப் பயணத்தில் தான் இருந்தார்.
அவருக்கென்று வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் ஒன்று காத்திருந்தது. சிங்கப்பூர், தென்கொரியாவில் தொடங்கி ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் முடியும் வகையில் ஆறு நாடுகளுக்கான அவரது பயணத் திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
அதிலும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவிலும் பீரிஸ் இடம் பெற்றிருந்தார்.
பிளேக் கொழும்பு வரத் திட்டமிட்ட 12 ஆம் திகதி தான் ஜெனீவா கூட்டத்தொடரும் ஆரம்பமாகியது.
பீரிஸ் அதற்கு முன்னர் ஜெனீவா சென்று விட்டு அவசரமாக தனது பயணத்தைக் கைவிட்டு கொழும்பு திரும்பினார்.
கடந்தமுறை பிரித்தானியாவில் இருந்து பீரிஸ் இதுபோன்று திரும்பியிருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை.
இம்முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைக் கூட பீரிஸ் இடைநிறுத்தி விட்டுக் கொழும்பு திரும்பியதற்குக், காரணம் இல்லாமல் இல்லை.
இம்முறை அரசாங்கம் பிளேக்கை விமர்சிக்கவோ அதிகமாக அவருடன் முரண்டு பிடிக்கவோ இல்லை.
அவரது வருகையை சாதகமானதாகவே காண்பித்துள்ளது.
அமெரிக்காவுடனான உறவுகளைப் புதிய நிலைக்கு கொண்டு செல்லும் பயணம் என்று கூறியுள்ளது அரசாங்கம்.
வடக்கில் துணை ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிளேக் கூறிய கருத்தைக் கூட அரசாங்கம் நிராகரிக்கவில்லை.
அதனைப் பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்தைக் கூட அரசாங்கம், அது அவரது தனிப்பட்ட கருத்து, அரசின் கருத்தல்ல என்று அலட்சியமாகக் கூறிவிட்டது.
அரசாங்கம் இந்தளவுக்கு இறங்கிப் போவதற்கு, அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அதில் முக்கியமான ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படப் போகும் விவாதம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் தமக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொள்கின்றது.
ஆனாலும், அமெரிக்காவின் செல்வாக்கை அரசாங்கம் அறியாதிருக்க முடியாது.
இன்னொரு விடயம், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்கா பயணமாகவுள்ள ஜனாதிபதி, 23ஆம் திகதி பொதுச்சபையில் உரையாற்றுவார்.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சிக்கல் உள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படியான நிலை ஒன்று வந்தால், அது மிகப் பெரிய நெருக்கடியாக மாறலாம்.
ஏற்கெனவே இதுபோன்றதொரு நெருக்கடி உருவாக பிரித்தானியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பியிருந்தார் ஜனாதிபதி.
அதன் பின்னர் அவர் பிரித்தானியாவின் பக்கம் இன்னமும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அதேநிலை அமெரிக்காவிலும் வந்து விடக் கூடாது என்ற கவலை அரசாங்கத்துக்கு உள்ளது.
அதற்கு அமெரிக்காவுடன் சுமுகமான உறவு அவசியம்.
அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க அரசு உறுதியளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இல்லாவிட்டால் சங்கடங்கள் ஏற்படலாம்.
அது சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்து விடும்.
ஏனென்றால் உலகத் தலைவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் அவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்ள எந்தவொரு நாடுமே விரும்பாது.
அதற்கு இலங்கையும் விதிவிலக்காக இருக்க முடியாது.
எனவே, அமெரிக்காவுடன் இணங்கி இறங்கிப் போகும் முடிவைத் தவிர, வேறு எந்த முடிவையும் எடுக்கின்ற தெரிவு அரசுக்கு இல்லை.
பிளேக் நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் பயணத் திட்டதை மாற்றியமைத்த போதும் கூட இலங்கை அரசு அதற்கு இணங்கி, வளைந்து கொடுத்ததற்கு இதுவே காரணம்.
இதுபோன்று எல்லா விடயங்களிலும் எல்லா நேரங்களிலும் அரசாங்கம் அமெரிக்காவுடன் இணங்கி இறங்கி செயற்படும் என்று கருத முடியாது.

Geen opmerkingen:

Een reactie posten