தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2011

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. அசமந்தமாக இருக்கக்கூடாது!– கனடிய வெளிவிவகார அமைச்சர்

[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 05:03.12 AM GMT ]
இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கனடாவின் சார்பில் பேசிய கனடிய வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபை நம்பத்தகுந்த சாட்சியங்களுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அசண்டையீனமாக இருந்து விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
தனது உரையின் முக்கிய அம்சமாக பலஸ்தீனியத்தின் ஆட்சியதிகார பீடம் தங்களை தனிநாடாக அங்கீகரிக்கக் கோருவதை கனடா எதிர்க்கும் என்பதை ஐ.நா.அவைக்கு தெளிவான செய்தியாகத் தெரிவித்த அவர்,
அதன் பின்னர், சிரியா, பர்மா, ஈரான் ஆகியவற்றின் வன்முறைகள், ஜனநாயக விரோதப் போக்குகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருக்கக்கூடாது என்பதைக் குறிப்பிட்டு அதேபோன்று தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக நம்பப்படும் சிறீலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்தும் ஐ.நா. அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை கனடியப் பாராளுமன்ற வளாகத்தில் இந்த வாரம் புதன்கிழமை மாலை சிறீலங்காவின் கொலைக்களம் என்ற விவரண நாடாவை மனிதவுரிமை கண்காணிப்பு மையம் திரையிடவுள்ளது.
இதனை ஏற்பாடு செய்துள்ள கொன்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் தான் கனடிய மனிதவுரிமை மையம் என்ற தமிழ் அமைப்புடன் இணைந்து செயலாற்றப் போவதாக நேற்றைய தினச் செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த ஒளியிழையைப் பார்வையிட தங்களுடைய தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஈழத்தமிழர்கள் அழைப்பு விடுத்து இதன் தாற்பரியத்தை உணர்த்த வேண்டுமென கனடிய தமிழ்க் காங்கிரஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.
சிறீலங்கா போர்குற்ற விடயத்தில் ஐ.நாவின் செயற்திறமையின்மைக்கு கனடா கடும் கண்டனம்
ஐ.நா சபையின் இருப்பும் செயற்திறனும், அது தனது உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் காட்டத்தவறின் இழிநிலைக்கு சென்றுவிடும் என கடும் தொனியில் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்கள், அவ்வாறான செயற்திறமையின்மைக்கான உதாரணங்களில் ஒன்றாக சிறு ஒழுங்குவிதியை காரணம் காட்டி தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை ஏற்று சிறீலங்காவில் புரியப்பட்ட நம்பிக்கைக்குரிய முறைப்பாடுகளைக் கொண்ட போர்க்குற்ற அறிக்கை குறித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதை ஐ.நா தவிர்த்தது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் 66வது ஐ.நா கூட்டத்தொடரில் கனடிய அரசின் சார்பில் செப்டம்பர் 26ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பொதுச்சபையில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் ஐ.நா கூட்டத் தொடாரில் சிறீலங்கா குறித்து பொதுச்சபையில் கருத்துத் தெரிவித்த ஒரே நாடு கனடா என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை செயற்படுத்துவதில் காட்டிவரும் முன்னுக்கு பின் முரணான செயற்பாடுகளால் தாழ்வு நிலைக்குச் செல்வதை கனடா தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர், அதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்க இனவெறி அரசை கொமென்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கு கனடா தெரிவித்த எதிர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளார்.
கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் சிறீலங்காவின் நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்படவில்லையாயின் தான் அங்கு 2013 ல் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மகாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பகிரங்கமாக அண்மையில் அறிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.
அக்டோபர் மாதத்தில் 2011ற்கான கொமன்வெல்த் நாடுகளின் மகாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இங்கு சிறீலங்கா விடயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதிற்கான முன்னறிவித்தலாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரை கொள்ளப்படுகின்றது.
ஐ.நா சபையின் பெரிய எதிரிகள் அதன் செயற்பாடுகளை வெளிப்படையாக குறை கூறுபவர்கள் அல்ல, மாறாக அமைதியாக அதன் கொள்கைகளை உதாசீனம் செய்பவர்கள், இன்னும் மோசமானவர்கள் ஒன்றுமே செய்யாமல் ஐ.நா கீழ்நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், நாங்கள் அவ்வாறு அமைதியாக இருக்கமுடியாது என மேலும் தெரிவித்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்கள்.
நாடுகளின் தனித்துவத்தை கனடா மதித்தாலும், சிறுபான்மையினருகான மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றபோது முகத்தை திருப்பிக் கொண்டு மறுபக்கம் பார்க்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக, குரல் அடக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பது எம் அனைவரின் பொதுக்கடமை எனவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக கனடிய வெளிவிவகார கொள்கையில் சிறீலங்கா குறித்து தொடர்ச்சியாக வெளிப்பட்டுவரும் பல்வேறு மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரையும் பலரால் கொள்ளப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten