தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 september 2011

நிபுணர் குழு அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டது! தீர்வு விடயத்தில் தாமதித்தால் கடும் நெருக்கடி ஏற்படும்!- ரணில்

[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 06:19.37 AM GMT ]
இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு இந்த வருடத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க, வலியுறுத்தியுள்ளார்.
 
இல்லையேல் சர்வதேசத்தின் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அவர் தனது அலுவலகத்தில் நேற்று தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அங்கு அவர் கூறியதாவது:
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும், அரசுக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசியல் தீர்வு தொடர்பிலான தனது யோசனைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதேபோல், அரசும் தனது யோசனைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.
அரசியல் தீர்வு யோசனை எப்படி அமைய வேண்டும் என்ற தீர்மானம் மேற்படி இரண்டு தரப்புகளிடமும்தான் உள்ளது. இரு தரப்புகளும் முதலில் ஒரு பெரிய இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அந்தத் தீர்வு யோசனையை பரிசீலித்துப் பார்த்து நாம் எமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம்.
எப்படி இருப்பினும், அரசியல் தீர்வு ஒன்று கட்டாயம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் அது மிக விரைவில் வரவேண்டும் என்பதிலும் எமது கட்சி மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
அதேபோல் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அரசு உரிய பதிலை வழங்கவேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அரசியல் தீர்வு தொடர்பிலும் அரசு இந்த வருட இறுதிக்குள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காலத்தை இழுத்தடித்துக் கொண்டு சென்றால் சர்வதேசத்தின் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க வேண்டியேற்படும்.
போரில் பல பொதுமக்கள் உயிரிழந்ததையும் இலங்கையில் ஜனநாயகம் முற்றாக அழிந்து போயுள்ளதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இதற்குப் பரிகாரம் கிடைக்கும் வரைக்கும் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படவேண்டும்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ள போதிலும், சர்வதேசம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கை ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த அறிக்கை ஒரு முக்கிய ஆவணமாக சர்வதேசத்தால் பார்க்கப்படுகின்றது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten