இலங்கை தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது.
இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்.
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, இலங்கை அரசாங்கத்துக்கு கடும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்...
அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவினை அங்கத்துவ நாடுகளைப் பலப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முடியும்.
இலங்கை அரசானது, குறித்த இந்த பிரேரணை வரைவினை, பலவீனப்படுத்தி, தோல்வியுறச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கும்.
இந்நிலையில், தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்ற, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றினை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையின் வரைவில் காத்திரமான உள்ளடக்கத்தையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை, இத்தகைய விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கென இருக்கின்ற பொறுப்புள்ள கடப்பாட்டினை, இந்த பிரேரணை தொடர்பில், சபை பொறுப்புடன் ஆற்றும் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் தமிழ் ஆக்கம்
தீர்மான வரைபு: இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)
ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக...
பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்...
இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..
சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று...
சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்
2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்
3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்!
அமெரிக்காவின் தீர்மானம் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்பட்டதால் குழப்பத்தில் இலங்கை!- அரச குழுவினரை அவசரமாக ஜெனிவா செல்ல பணிப்பு
[ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 12:49.28 AM GMT ]
ஆனால் ஒருவாரம் முன்னதாகவே இந்தத் தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதால் இலங்கை அரசை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை இலங்கை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெனிவாவில் உள்ள இலங்கைக் குழுவைப் பலப்படுத்தும் அவசர நடவடிக்கைகள் நேற்றிரவு எடுக்கப்பட்டுள்ளன.
தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முக்கியமான பலரை இலங்கை அரசாங்கம் ஜெனிவா செல்லப் பணித்துள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு டுபாய் திரும்பிய முன்னாள் சட்டமா அதிபரும், இலங்கை அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் உடனடியாக ஜெனிவா செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு குறுகிய காலத்துக்குள் திரும்பவும் ஜெனிவா செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி சட்டவாளர் காலிங்க இந்ததிஸ்ஸ, அலி சப்ரி ஆகியோரை நேற்றிரவு ஜெனிவா செல்வதற்கு இணங்க வைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
ஆனால் அவர்கள் அதற்கு இணங்கினரா என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.
அதேவேளை மேலும் பலர் இன்று அல்லது நாளை அவசரமாக ஜெனிவா செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத நடுப்பகுதிலேயே அமெரிக்காவின் தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்த்து இலங்கை தனது பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களை கொழும்புக்கு திருப்பி அழைத்து விட்டது.
குறிப்பாக இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரும், ஜெனிவா குழுவுக்கான தலைவருமான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு திரும்பி, தேயிலை மாநாடு ஒன்றில் பங்கேற்க ஜப்பான் சென்று விட்டார்.
அவர் மீண்டும் வரும் 14ம் நாளே ஜெனிவா திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இப்போது அவர் ஜப்பானிய பயணத்தை இடையிலேயே, முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பி, முன்கூட்டியே ஜெனிவா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரே அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பதிலுரை நிகழ்த்தவுள்ளார்.
அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிசும் ஜெனிவா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தீர்மான வரைபில் திருத்தங்களை செய்யும் வாய்ப்பு உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் என்பதால், தீர்மானத்தை தோற்கடிக்க முடியாது போனாலும், அதன் தீவிரத்தன்மையைக் குறைக்க இலங்கை முனையும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் ஒப்பமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் ஒப்பமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten