தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 maart 2012

பிரேரணை நிச்சயம் சமர்ப்பிக்கப்படும் என்பதை உணர்த்தியிருக்கும் மரியா ஒட்டேரோவின் உரை!


இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் நேற்று ஆற்றிய உரையிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணையினை உறுதியாக கொண்டுவரும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முக்கியமாக மரியா ஒட்டேரோவின் உரையிலிருந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதிபடத் தெரிவதாக ஜெனிவாவில் தங்கியுள்ள இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அதாவது அமெரிக்கா அல்லது வேறொரு ஐரோப்பிய நாடு இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரலாம் என்று அரசாங்கத் தூதுக்குழு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் மரியா ஒட்டேரோ மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அவற்றை இலங்கை அரசாங்கம் கட்டாயம் அமுல்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையுடன் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் நல்லுறவுடன் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையானது இலங்கை தொடர்பில் நடவடிக்கை ஒன்றை எடுத்தால் அது இலங்கையின் நிரந்தர சமாதானத்துக்கு வழி வகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மரியா ஒட்டேரோவின் உரையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை வருவது உறுதியாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் எனவே, அதற்கேற்ற வகையில் தயாராகுவதற்கான ஏற்பாடுகள் ஜெனிவாவில் உள்ள இலங்கை குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten