தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம் கோரவில்லை!- இராயப்பு ஜோசப் பேராயர் (செய்தித்துளிகள்)!


யுத்த வடுக்களை சுமக்கும் மக்கள் மீது அரசாங்கம் மேலும் வரிகளைச் சுமத்தியுள்ளது: பா.அரியநேத்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:25.53 AM GMT ]
யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து வாழும் எமது வடகிழக்கு மக்கள் மீது அரசாங்கம் பெரும் வரிகளைச் சுமத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மின்சாரப் பாவனைக்கும் விலையினை உயர்த்தியுள்ளமை மக்களுக்கு பெரும் சுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 47 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசு வெளிநாடுகளில் கடன்பட வேண்டும். அதனை அடைப்பதற்கு எமது மக்கள் வரிசெலுத்த வேண்டும் என்றால் அது எந்த விதத்தில் நியாயமாகும். அரசாங்கம் செய்யும் அல்லது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் மற்றுமொரு அடாவடித்தனமாகும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கம் சீர்கெட்டுக் கொண்டு வருகின்றது. இவற்றுக்கு அண்மையில் செங்கலடியில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் சான்றாகும். 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் கொலை செய்யும் அளவிற்குத் துணிந்துள்ளார்கள் என்றால் மாணவர்களின் ஒழுக்கம் எந்தளவிற்குச் சென்றுள்ளது. என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு பல துறைகளிலும் சாதனைகளை புரிந்த மாவட்டம் எனவே எமது உறவுகள் தங்களுடைய பிள்ளைகளை ஒழுக்கமிக்கவர்களாக வளர்தெடுக்க வேண்டும் குறிப்பாக கல்குடா கல்வி வலய பாடசாலைகளில் இவ்வொழுக்கக்கேடு மிகவும் அதிகரித்து வருகின்றது. இதற்கு அப்பகுதியிலுள்ள கல்வித்துறை சார்ந்தவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
விளையாட்டுக்களிலும் ஏனைய இதர செயற்பாடுகளிலும் பெண்களையும் இணைத்து சம பங்குடன் செயற்படவேண்டும் இவற்றுக்கு விளையாட்டுக் கழகங்கள் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
2ம் இணைப்பு சவுதியில் நிர்க்கதியாகியுள்ள தமிழர்களை  அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்! அரியநேத்திரன் எம.பி. வேண்டுகோள்
சவூதி அரேபியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ள வடகிழக்கை சேர்ந்த தமிழர்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பான முறையில் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சவூதி அரேபியாவில் இருக்கும் ஜித்தா என்னும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அதிகமானவர்கள் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் எனவும் அது தொடர்பில் அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
வறுமையின் காரணமாக பல்வேறு கஸ்டங்களுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் அங்கு ஏமாற்றப்பட்டு நடுத்தெருவுக்கு விடப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிரித்து வருகின்றன.
இலங்கையில் செயற்படும் பல போலி முகவர்களை நம்பிச் செல்லும் ஏழை மக்களின் வாழ்வில் இது பெரும் கஸ்டங்களை ஏற்படுத்துகின்றது.
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு தடவைகள் சென்று உதவிகள் கோரிய போதும் அவர்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
சவூதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவை சேர்ந்தவர்களை அந்த நாட்டு தூதர அதிகாரிகள் சென்று பத்திரமாக மீட்டுச் சென்றுள்ள நிலையில் இலங்கை தூதரகம் அது தொடர்பில் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நாட்டுக்கு பெரும் செலாவணி வருமானத்தை பெற்றுத்தரும் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினையேற்படும்போது அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டியது தூதரகத்தின் கடமையாகும்.
ஆனால் அந்த கடமையை செய்யாமல் அங்குள்ள தூதரகம் செயற்படுவதானது கண்டிக்கத்தக்கதாகும். அங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே இந்த பாராமுகமாக இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுத்து நிர்க்கதியான நிலையில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கையெடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம் கோரவில்லை!- இராயப்பு ஜோசப் பேராயர் (செய்தித்துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:29.02 AM GMT ]
தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம் கோரியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனி ஈழக் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென மன்னார் பேராயர் கோரியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கொன்சோல் காரியாலத்தின் அழைப்பின் பேரில் நான்; இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தேன்.
ஆனால், ஈழக் கோரிக்கை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவதற்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அளித்த சாட்சியங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கவில்லை என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டாம் - வன்னிக் கட்டளைத் தளபதி
நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டாம் என வன்னி கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா கோரியுள்ளார்.
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவது சட்டவிரோதமானது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 100 மதகுருமாரை அழைத்து, பொனிபஸ் பெரேரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாட்டுக்குள் தனிநாடு என்ற சிந்தனை கனவாகவே கருதப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் தனிநாட்டுக் கோரிக்கை நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வன்னிக் கட்டளைத் தளபதியின் இந்த கருத்தை பல மதகுருமார் ஏற்றுக் கொண்டதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten