தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 maart 2012

சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்': சனல்-04 தயாரிப்பில் புதிய ஆவணப்படம்


[ சனிக்கிழமை, 03 மார்ச் 2012, 08:12 GMT ] [ நித்தியபாரதி ]
தற்போது தயாரிக்கப்பட்டு எதிர்வரும் 14 மார்ச் 2012 புதன்கிழமை ஒளிபரப்பாக உள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்' என்ற இப்புதிய ஆவணப்படமானது நான்கு முக்கிய ஆதாரங்களை மையப்படுத்தி, இப்போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை உண்மையில் யார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆதாரபூர்வமாக, சாட்சியங்களைக் கொண்டு ஆராய்கின்றது.

கடந்த ஆண்டில் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் ஒளிபரப்பப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணத் திரைப்படமானது பாராட்டைப் பெற்றுக் கொண்டதுடன், தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் உண்மையில் அங்கு என்ன நடந்ததென்பதை வெளிச்சமிட்டுக் காட்டியதற்காக RTS விருதையும் பெற்றுக் கொண்டது. இத்திரைப்படமானது ஜோன் ஸ்னாவால் தொகுத்து வழங்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்களுடன் தொடர்புபட்ட காட்சிகளை இத்திரைப்படமானது ஆவணப்படுத்தியிருந்தது. இக்காட்சிகளில் சில சனல் 04 தொலைக்காட்சி சேவையால் இது வரையில் வெளியிடப்படதாக மிகக் கொடூரமான, பயங்கரமான காட்சிகளாக இருந்தன.

இத்திரைப்படத்தில் யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ள போதிலும், இவ் யுத்தத்தில் வெற்றி பெற்றுக் கொண்ட சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சில யுத்த மீறல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதாவது புலிகளின் பெண் போராளிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான சாட்சியங்கள் மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சித்திரவதைக் காட்சிகள், 'பாதுகாப்பு வலயங்கள்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைகள் தொடர்பான காட்சிகள் என்பன மிக மோசமான யுத்த மீறல் காட்சிகளாக இருந்தன.

சனல் 04 தொலைக்காட்சி சேவையால் தயாரிக்கப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற இத்திரைப்படமானது, ஜெனீவா, நியூயோர்க் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா கூட்டத் தொடர்களிலும், பிரித்தானிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் பிரதான உயர் மட்ட அதிகாரிகள் மத்தியிலும் திரையிடப்பட்டன.

இத்திரைப்படம் தொடர்பான கருத்துக்களை பல முக்கிய உலக நாட்டுத் தலைவர்கள் வழங்கியிருந்தனர். இவர்களில் பிரதமர் டேவிட் கமறூனும் ஏனைய முக்கிய அரசியற் தலைவர்கள் சிலரும் அடங்குவர். ஐ.நா வல்லுனர் குழுவால் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த காலத்தில் குறிப்பாக இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையின் போது 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரையில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படவுமில்லை, அதற்குப் பொறுப்பளிக்க வேண்டியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவுமில்லை.

மிக சக்தி வாய்ந்த  'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜோன் ஸ்னோவால் தொகுத்து வழங்கப்படும் பிறிதொரு ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

இவ் ஆவணப்படத்தில், சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கோரமான தாக்குதல் சம்பவங்களை நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்கள், இச்சம்பவங்கள் தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் கானொலிகள் என்பனவும் உண்மையில் இறுதி நாட்களில் என்ன நடந்ததென்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்ற யுத்த சாட்சியங்கள், ஆவணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவே தற்போது வெளியிடப்படவுள்ள ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான யுத்த மீறல்கள் உண்மையில் யார் பொறுப்பு என்பதை அதாவது சிறிலங்கா அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் உயர் மட்ட அதிகாரத்தில் உள்ளவர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இது தனது ஆய்வை மேற்கொண்டுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்' என்ற இப்புதிய ஆவணப்படமானது நான்கு முக்கிய ஆதாரங்களை மையப்படுத்தி, இப்போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை உண்மையில் யார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆதாரபூர்வமாக, சாட்சியங்களைக் கொண்டு ஆராய்கின்றது.

அதாவது, பொதுமக்கள் வாழிடங்கள் மீதும் 'பாதுகாப்பு வலயத்தில்' அமைந்திருந்த மருத்துவமனை மீதும் செறிவாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள், யுத்த வலயத்திற்குள் அகப்பட்டுத் தவித்த பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீது தடைவிதிக்கப்பட்டமை – யுத்த வலயத்திற்குள் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் பணியாற்றத் தடைவிதிக்கப்பட்டிருந்தமை, 'மீட்புப் பணியின்' போது பொதுமக்களைக் கொலை செய்தமை, நிராயுதபாணிகளாக, சரணடைந்த புலி உறுப்பினர்களை நிர்வாணப்படுத்தி, கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மீது திட்டமிட்ட முறையில் சித்திரவதைகளை மேற்கொண்டு அவர்களைக் கொலை செய்தமை - இதில் சிறிலங்கா இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டதை ஆதாரப்படுத்தும் புதிய கானொலிக் காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன- ஆகிய முக்கிய நான்கு தலைப்புக்களின் கீழ் இப்புதிய திரைப்படம் தனது ஆய்வை மேற்கொள்கின்றது.

அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்களால் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஐ.நா வல்லுனர் குழுவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக நம்பகமான அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு சிறிலங்காவில் அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட போதிலும், இவற்றை எல்லாம் விட சிறிலங்காவுக்கு உள்ளே தேசிய அளவில் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்து கடந்த டிசம்பரில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள போதிலும் கூட, சிறிலங்கா மீது எந்தவொரு சுயாதீன விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள இவ்வாறான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்துவருகிறது. குறிப்பாக, செறிவான எறிகணைத் தாக்குதலின் போது பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற உண்மையை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகிறது.

'சிறிலங்காவின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்' என்ற இப்புதிய ஆவணப்படமானது பல அதிர்ச்சி தரக்கூடிய, புதிய கானொலிகளையும் காட்சிகளையும் ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு மீறல்களை மேற்கொள்ளுமாறு எங்கிருந்து கட்டளையிடப்பட்டது என்பதையும், இதற்கான 'கட்டளைச் சங்கிலி' எது என்பதையும் ஆராய்ந்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பில் உயர் மட்ட அதிகாரங்களை தற்போதும் தக்கவைத்துள்ள சிறிலங்கா அதிபரும் முப்படைகளின் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தாபய ராஜபக்ச, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத் தளபதிகளாக பணியாற்றியவர்களும் யுத்தம் நிறைவுற்றதிலிருந்து வெளிநாட்டுத் தூதர்களாகவும் செயற்படுகின்ற இரு முன்னாள் இராணுவத் தளபதிகள் தொடர்பாகவும் இப்புதிய ஆவணப்படமானது பல்வேறு வினாக்களை வினவிநிற்கின்றது.

பிரித்தானிய துடுப்பாட்ட அணியினர் மீண்டும் இம்மாதம் சிறிலங்காவுக்கான தமது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ள நிலையில், 2013 ல் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்புக்களின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பங்கு கொள்ளும் உச்சி மாநாடானது சிறிலங்காவிலேயே மேற்கொள்ளப்படும் என்பது தற்போதைய நிகழ்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், அனைத்துலக சமூகத்தால் கவனத்தில் எடுக்கத் தவறியுள்ள, அவர்களால் மறக்கடிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பயங்கரமான, வேதனையான, கொடூரமான யுத்த கால அனுபவங்களை மீளவும் நினைவூட்டக் கூடிய புதிய ஆவணப்படமாக இது தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதானது காலத்துக்கு தேவைப்பாடன ஒன்றாக உள்ளது.

[தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்' என்ற இப்புதிய ஆவணப்படமானது எதிர்வரும் 14 மார்ச் 2012 புதன்கிழமை ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.]

செய்தி வழிமூலம் : சனல்-04 தொலைக்காட்சி சேவையின் இணையத்தளம்

மொழியாக்கம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20120303105708

Geen opmerkingen:

Een reactie posten