தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

சிறிலங்கா என்னும் சொர்க்கம் பிக்குகளாலும், காடையர்களாலும், நாசமாக்கப்படுகின்றது - அவுஸ்ரேலிய ஊடகம்!

[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. இதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி] 

சிறிலங்காத் தீவில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட 26 ஆண்டுகால நீண்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின்னர், தற்போது சிறிலங்கா அரசாங்கமானது இத்தீவில் சமாதானமும் ஒற்றுமையும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக உலகை நம்பவைக்க வேண்டிய நிலையிலுள்ளது.

பாங்கொங்கிலிருந்து புறப்பட்ட சிறிலங்கா எயர்லைன்ஸ் 423 விமானத்தின் விமானி சிறிலங்காத் தீவில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளதைப் பயணிகளுக்குக் காண்பிப்பதில் பெரும் விருப்பம் கொண்டிருந்தார்.

இந்த விமானி தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட சிறிலங்காவின் மத்திய பகுதியின் மேலாகப் பறந்து கொழும்பைச் சென்றடைவதன் மூலம் தனது நாட்டின் வளங்களைக் காண்பிப்பதில் ஆர்வங் கொண்டுள்ளார்.

"எங்களது எல்லாப் பயணிகளையும் சொர்க்கத்திற்கு மகிழ்வுடன் வரவேற்கிறோம்.... புத்துயிர் பெற்றுள்ள சொர்க்கத்திற்கு வரவேற்கிறோம்" என எயர்லைன்ஸ் 423 விமானத்தின் விமானி தனது இனிமையான குரலில் வரவேற்றார்.

மகிழ்ச்சியை மட்டும் தருகின்ற சிறிலங்காவின் கரையோர சுற்றுலா மையங்களைப் பார்க்கும் போது ஆசியாவில் மிகச் சிறந்த இடமாக இது காணப்படலாம். அத்துடன் போரில் வெற்றி வாகை சூடிய ராஜபக்சவின் அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களுக்கு சிறிலங்காவானது சொர்க்கத்திற்குச் சமனான ஒரு அரசியல்shangri -La போன்று காணப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவாலும் அவரது மூன்று சகோதரர்களாலும் ஆளப்படும் சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரின் கனவுக் கோட்டையாக சிறிலங்கா விளங்குகிறது.

2005லிருந்து மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் சிறிலங்காவை ஆட்சி செய்கின்றனர். தென்னாசியாவில் மாறிவரும் தற்போதைய அரசியல் இயங்குநிலையானது ராஜபக்ச குடும்பமானது இன்னுமொரு தலைமுறைக்கு அரசியல் உயர்பீடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நிலைப்பாட்டை வழங்குகிறது. ராஜபக்ச சகோதரர்களுக்கு வர்த்தக மற்றும் இராணுவ உதவிகளை வழங்கும் நாடுகளுடன், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள் வாழும் வடக்கில் ஆதாயங்களை ஈட்டக்கூடிய நவீன பொருளாதார மீள்கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில், போருக்குப் பின்னான சிறிலங்காவில், சொர்க்கம் எனக் கூறப்படுகின்ற எண்ணக்கருவானது இத்தீவில் வாழுகின்ற பெரும்பாலானவர்கள் மத்தியில் விவாதித்திற்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது என்பதை The Global Mail ஊடகம் ஆய்வு செய்துள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவிற்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கோ அன்றி ராஜபக்சவால் ஊட்டப்படுகின்ற அரசியல்வாதிகளோ அன்றி சிறிலங்காத் தீவில் வாழும் குடிமக்களைப் பொறுத்தளவில் 'சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி' என்கின்ற கருத்தாக்கமானது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. இத்தீவில் வாழும் முஸ்லீம் மற்றும் தமிழ் சமூகங்களைப் பொறுத்தளவில் போருக்குப் பின்னான சிறிலங்காவில் வாழ்வதற்கான நிலை காணப்படவில்லை.

தற்போது ஆட்கடத்தலானது ஆதாயமீட்டுகின்ற ஒரு வர்த்தகமாக மாறியுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவானது தனது நாட்டிற்குள் அத்துமீறி நுழைபவர்களை பப்புவா நியூயோகினிக்கு இடம்மாற்றம் செய்வது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

போரின் முடிவானது சிங்கள தேசியவாதம் நாட்டில் மிகத் தீவிரம்பெற வழிவகுத்துள்ள அதேவேளையில், சிறிலங்காத் தீவின் மொத்த சனத்தொகையான 21 மில்லியனில் 15 சதவீதமான சிறுபான்மை தமிழ் சமூகமானது தாம் தொடர்ந்தும் அடக்கப்படுவதாகவும், 'திட்டமிடப்பட்ட ரீதியில் இனப்படுகொலைக்கு' ஆளாவதாகவும் கருதுகின்றனர். பல நூற்றாண்டுகளாக சிறிலங்காத் தீவில் வேறூன்றியுள்ள இந்து-தமிழ் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மேற்கொள்வதாக தமிழ் மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

தமிழர்கள் வாழும் வடக்கு- - கிழக்கு முழுவதிலும் சிறிலங்கா இராணுவத்தினர், தனியாருக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து இராணுவத் தளங்களை உருவாக்குகின்றனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சிறிலங்காவில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தி விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கமானது இவ்வாறு படகுகள் மூலம் தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு துணைபோவதாக சந்தேகிக்கப்படும் அதேவேளையில், கெவின் றூட்டின் பப்புவா நியூயோகினித் தீர்மானமானது எவ்வளவு தூரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் நுழைவதை நிறுத்தும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறமுடியாது.

சிறிலங்காத் தீவின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்தைக் கொண்ட முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தின் மத்தியிலும் தற்போது விரோதம் தோன்றியுள்ளது. தமிழ் மொழியைப் பேசும் முஸ்லீம் மக்கள் அரேபியாவிலிருந்து 7ம் நூற்றாண்டில் வர்த்தக நோக்கம் கருதி சிறிலங்காவில் குடியேறிய மக்கனள் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது முஸ்லீம் சிறுபான்மையினர் நடுநிலையாகச் செயற்பட்டனர். ஆனால் தற்போது தாம் சிங்கள பெரும்பான்மையினரால் தாம் அடக்கப்படுவதாக சிறிலங்காவில் வாழும் பெரும்பாலான முஸ்லீம்கள் கருதுகின்றனர். தென் சிறிலங்காவைச் சேர்ந்த கல்வியறிவு குறைந்த கிராமிய மட்ட பௌத்த சிங்களவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சாக்கள் தம்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடக் காரணமாக உள்ளதாக முஸ்லீம்கள் கருதுகின்றனர்.

பௌத்த பிக்குகளின் தலைமையில் செயற்படும் சிங்களக் காடையர்கள் தம்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். தொடர்ச்சியாக தற்போது முஸ்லீம் பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய இடங்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் அதாவது ஆகஸ்ட் 10ல், கொழும்பு பள்ளிவாசல் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில், முஸ்லீம் மக்கள் மீது சிங்கள ஆயுதக் குழுவினரால் 30இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொது அமைப்புக்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஊடகங்கள் சுயாதீனமாக தமது கருத்துக்களை முன்வைப்பதற்கும் ராஜபக்சாக்கள் முட்டுக்கட்டைகளாக உள்ளனர். பொது அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதில் ராஜபக்சாக்கள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். ஊடகவியலாளர்கள் மீதும் இவர்கள் தமது செல்வாக்குகளைப் பிரயோகிக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர்.

ஒற்றையாட்சி நிலவும் பல்கலசாரத்தைக் கொண்ட தமது 'மசாலா சமூகத்தின்' விழுமியங்களும் சுதந்திரம் என்பன சிதைவுற்று வருவதாக சிங்கள மிதவாதிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோர் கவலை கொள்கின்றனர். கொலனித்துவத்தின் பின்னரும் ஜனநாயகம் பின்பற்றப்பட்ட தென்னாசியாவின் ஒரேயொரு நாடான சிறிலங்காவானது தற்போது வன்முறைகள் இடம்பெறும் 'மாபியா நாடாக' மாறிவருவதானது இங்கு வாழும் புத்திமான்கள் மற்றும் சிங்கள மிதவாதிகளின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
25 Aug 2013

http://lankaroad.com/index.php?subaction=showfull&id=1377469221&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten