தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

நவநீதம்பிள்ளையின் வரவால் இலங்கை அரசு கடைப்பிடிக்கும் அமைதி வாரம்!

இராணுவத்தினர் அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை!- தேர்தல் ஆணையாளர் - முறையிட்டும் நடவடிக்கை இல்லை!- தமிழ் கூட்டமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 12:44.43 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் சிலர் இராணுவத்தினரால் அச்சுறுத்துப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து பிபிசியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்துபூர்வமான முறைப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் தம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நேரடியாகப் பார்வையிடவும். கண்காணிப்பதற்குமாக அவர் சென்றுள்ளார்.
இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகக் கூறப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவ்வாறு எழுத்து மூலமான முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் தங்களை அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
வடக்கிலே வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்று பொதுவாகத் தெரிவிப்பது போதாது, எழுத்து மூலமாக முறையிட்டால்தான் அது பற்றிய விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் தலையிடுகின்றனர் என்று கூறப்பட்டாலும், அத்தகைய தேவை அவர்களுக்குக் கிடையாது எனவும் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்.
தன்னுடைய அழைப்பின் பேரிலோ அல்லது பொலிசார் அழைத்தால் மட்டுமே இராணுவம் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் என்றும், அவ்வாறில்லாமல் படையினர் தேர்தல் விடயங்களில் தலையீடு செய்திருந்தால், அது தொடர்பில் சரியான முறையில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அப்போதுதான் அதுபற்றிய விசாரணைகளை ஆணையம் நடத்த முடியும் என்றார் இலங்கையின் தேர்தல் ஆணையாளர்.
முறைப்பாடு செய்தோம்: சுரேஷ் எம்பி.
தேர்தல் ஆணையாளரின் இந்தக் கூற்று குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையில், இதுபற்றி ஆராய்வதற்காக, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கூட்டப்பட்ட கூட்டங்களில் தாங்கள் தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட அன்று எமது வேட்பாளர் ஒருவர் சாவகச்சேரியில் அச்சுறுத்தப்பட்டது தொடர்பில் அவர் தேர்தல் திணைக்களத்திற்கு முறையிட்டிருந்தார்.
ஆனால் திணைக்களம் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
சம்பவங்கள் குறித்து நேரடியாக அவருக்கு எடுத்துக் கூறிய பின்பும் எழுத்து மூலமாக முறைப்பாடு தேவை என்று அவர் கூறுவது கவலைக்குரிய விஷயம் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhv6.html#sthash.bJvf5xTl.dpuf

நவநீதம்பிள்ளையின் வரவால் இலங்கை அரசு கடைப்பிடிக்கும் அமைதி வாரம்!
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 03:37.00 AM GMT ]
இலங்கையை முன்னிலைப்படுத்தி அடுத்து வரும் மாதங்களில் இடம்பெறப் போகும் நிகழ்வுகளின் முதலாவது கட்டம் இந்த வாரமே ஆரம்பமாகிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இந்த வாரம் 25 ம் திகதி இலங்கை வரவுள்ளார் என்ற செய்தி வெளிவர ஆரம்பித்ததிலிருந்தே இலங்கை அரசிடம் ஒரு தடுமாற்றம் தென்பட ஆரம்பித்திருந்தது.
நடந்து முடிந்த இரண்டு மனித உரிமை கூட்டத் தொடர்களில் இலங்கையின் போர்f;குற்றங்கள் சம்பந்தமான பிரேரனைகள் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டபோது ஆணையாளரினால் வெளியிடப்பட்ட ஆரம்ப உரையானது, இறுதிக்கட்டப் போரில் இலங்கைப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அதற்கான பொறுப்புக் கூறலையும் வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
அவரது அந்த உரை வெளியானதிலிருந்து நவநீதம்பிள்ளை என்றாலே இலங்கை அரசுக்கு வெறிபிடிப்பதுபோல் ஆகிவிட்டது. இலங்கை அரசின் உயர் மட்டத்தினரும், இனவாத அரசியலவாதிகளும் அநாகரீக முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
உலக அரங்கில், உன்னதமான உயர் பதவியில், அதுவும் ஒரு தமிழ் பெண் இருந்து கொண்டு தம்மை ஆட்டிப் படைக்கிறாளே என்ற வயித்தெரிச்சல்தான் இவ்வளவு தூரம் இனவாதிகளை கொதிப்படைய வைத்தது. ஆனால், அந்த உயர் பதவியில் யார் அமர்ந்திருந்தாலும், அநியாயமாக ஒரு இனம் அழிக்கப்பட்டது என்ற வகையில் இதேமாதிரியான ஒரு அணுகுமுறையைதான் கடைப்பிடிப்பார்கள் என்பதை இலங்கை போன்ற பிற்போக்கான அரசுகாளால் உணர்ந்துகொள்ள முடியாது.
அதேபோல், இவ்வளவு தூரம் கொடுமைகள் தமிழருக்கு இழைக்கப்பட்ட பின்பும் இலங்கையை இன்றும் நட்புநாடாக கருதும் இந்தியாவின் பிரதிநிதி ஒருவர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக வீற்றிருக்கும் பட்சத்தில், இதேமாதிரியான நடவடிக்கைகளைத்தான் எடுத்திருப்பார் என்று செல்லிவிட முடியாது.
ஏனெனில், இறுதிப் போரின்போது ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகராக இருந்த விஜய் நம்பியார் நடந்து கொண்ட விதத்தையே உதாரணமாகக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, இன்றும் இந்திய அரசினதும், காங்கிரஸ் கட்சியினதும் துரோகம் தொடரவே செய்கிறது.
அண்மையில் சத்தியமூர்த்திபவனில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஞானதேசிகன் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள், இந்திய அரசின் ஒட்டுமொத்த சிந்தனையையும் வெளிப்படுத்தியிருந்தது. ராஜபக்ச ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்! என்ற அவரது வார்த்தைகளால் புண்பட்ட ஈழத் தமிழர்களின் நெஞ்சங்கள் மீண்டும் பற்றி எரிவதுபோலாகிவிட்டது.
ஞானதேசிகன் ஒன்றை மறந்துவிட்டார். இலங்கை அரசு இந்தியாவை எவ்வளவு தூரம் ஏமாற்றுகிறது என்பதையோ, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு இலங்கை எவ்வளவு தூரம் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதன் பாதிப்பைக்கூட உணராதவராகவே தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மகிந்தாவினால் தமிழர்கள் பாதுகாககப்படுவதாக இந்தியாவில் இருந்தபடி ஞானதேசிகன் சொல்கிறார். ஆனால். இந்தியா சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசாங்கத்தால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு என்று அதே காலப்பகுதியில் சொல்லியிருக்கிறார். இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரை விடவா எங்கோ இருந்து வால்பிடிக்கும் ஞானதேசிகனுக்கு இலங்கை அரசைப்பற்றி தெரிந்துவிடப்போகிறது? வெலிவேரிய சூட்டுச் சம்பவத்தை அறிந்த பின்பும் இப்படி ஒரு கருத்தை ஞானதேசிகன் போன்றவர்கள் வெளியிடுகிறார்கள் என்றால், இவர்களிடம் எப்படி மனித உரிமைகளை எதிர்பார்ப்பது?
உலக அரங்கில் எமக்கு இருக்கும் அற்ப சொற்ப நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் அமைவாகவே நவநீதம்பிள்ளை அவர்களின் பதவிக்காலம் நீடிப்பதாக கருதவேண்டியுள்ளது. இலங்கை அரசாலும், அரச படைகளாலும் எமக்கு ஏற்படுத்தப்பட்ட அதிஉச்ச அழிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் விடியல் பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பின் ஒரு விஜயமாகவே நவநீதம் பிள்ளை அவர்களின் வரவை அனைத்து தமிழினமும் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவரின் வரவை எதிர்பார்ப்பதாக சொல்லிக்கொண்டு, கூடவே அவரது பயணத்துக்கு நிபந்தனைகளையும் விதித்தபடி, மறைமுக எதிர்ப்பை காட்டிவந்தது இலங்கை அரசு. அவை எதையும் கண்டுகொள்ளாமலும், காரணம் எதுவும் சொல்லாமலும் தனது பயணத்தை பிற்போட்டு வந்த  ஆணையாளர் அவர்கள், தனது பிரதிநிதிகளை மட்டும் காலத்துக்குக் காலம் இலங்கைக்கு அனுப்பி தகவல்களை பெற்று வந்தார்.
சரியானதொரு தருணம் கிடைத்ததும் தனது பயணத்தை திட்டமிட்டார். அதன்படி வரும் 25 அம் திகதி இலங்கை வரவுள்ளார். வடபகுதித் தேர்தல், மனித உரிமைகள் கூட்டத்தொடர், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மகாநாடு ஆகியவற்றை மையப்படுத்தயதாக ஆணையாளர் அவர்களின் பயணம் அமைந்ததுதான் இலங்கை அரசுக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது.
கூடவே வெலிவேரியாவில் பொதுமக்கள் மீது படைகள் நடாத்திய சூட்டுச் சம்பவமும் ஆணையாளரின் விசாரணைகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துவிட்டது. சிங்கள மக்களுக்கே இன்று இந்த நிலை என்றால், முள்ளிவாய்க்காலில் அன்று தமிழ் மக்களின் நிலை...? என்று சிந்திப்பதற்கான கதவை அரச படைகளே திறந்து விட்டுள்ளார்கள்.
ஆணையாளரின் வரவையிட்டு வாய் வீரம் பேசிவந்த இலங்கை அரச தலைவர்களும், இனவாத புத்த பிக்குகளும் அவருக்கு இருக்கும் சர்வதேச வல்லமையை புரிந்துகொண்டு அடங்கிவிட்டதாகத் தெரிகிறது. வெலிவேரிய சம்பவம்போல் இந்த இடையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதிலும், வடக்குத் தேர்தல் களத்தில் வன்முறைகள் எதுவும் நடக்காதபடியும்.
போர் இடம்பெற்ற பகுதிகளில் தமிழ் மக்களி;ன் மனித எச்சங்கள், தடையங்கள் என்பவற்றை அழிப்பதிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை போராட்டங்களின்போது நடாத்திய தாக்குதல்களின் தடயங்களையும் அழிப்பதாக தெரிய வருகிறது.
ஆனாலும், ஆணையாளரின் பயணத்தின் பின் இலங்கை அரசின் அராஜகம் தொடர்வதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன. அதுவும் வடக்குத் தேர்தலில் அரசின் கெடுபிடிகள் மேலும் மோசமாகலாம். ஆணையாளரின வரவு நாட்டில் ஒரு தற்காலிக அமைதியை மட்டுமே கொடுக்கும்.
kana-ravi@hotmail.com
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhw6.html#sthash.paDKFEEl.dpuf

Geen opmerkingen:

Een reactie posten