தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

நாகராஜசோழன்! ஈழ மக்களுக்கு நடந்த கொடூரத்தின் உவமானம்


அரசியல் வேண்டாம் என நடிகர்கள் சொல்லக்கூடாது. அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்தான். அரசியல் மாற்றம், சமூகமாற்றத்துக்கான ஆயுதமாக திரைப்படத்தைப் பயன்படுத்துவோம் என்றார் இயக்குநரும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான்.
இயக்குநர் மணிவண்ணனின் அமைதிப்படை 2 சீமானும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சீமான் பேசுகையில்,
“அரசியல் எனக்கு வேண்டாம் என்று எனக்கு முன் பேசிய சத்யராஜ் சொன்னார். அது தவறு. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது இங்கு. அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசை தீர்மானிப்பது அரசியல்.
அரசியலை வேண்டாம் என்பவன் நல்ல மனிதனே அல்ல என்கிறார் மேல்நாட்டு அறிஞர். ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலிருந்தும் அரசியல் பிறக்கிறது என்கிறார் இன்னொரு அறிஞர். அரசியலை எல்லோரும் வேண்டாம் என்றால், பின்னர் எப்படி நீங்கள் விரும்புகிற மாற்றங்களை உருவாக்க முடியும்?
அமைதிப் படை அரசியல்படம்தான். இந்த அரசியல் சமூக மாற்றத்தை உண்டாக்கும். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கரின் சிந்தனைகளின் வடிவமாக நான் இயக்குநர் மணிவண்ணனைப் பார்க்கிறேன். இந்த சினிமா மொழியை என்னைப் போன்றவர்களுக்கு மிக எளிமையாகக் கற்றுத் தந்தவர் என் அப்பா மணிவண்ணன்.
எந்தக் காட்சியையும் அவர் காகிதத்தில் எழுதிவைத்து காட்சிப்படுத்தியதில்லை. படப்பிடிப்பு தளத்துக்கு போன பிறகுதான் காட்சிகளைத் தீர்மானிப்பார். வசனங்கள் அப்படியே அருவி மாதிரி வந்து விழும். அதைப் பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கும். ஒரு காட்சியில் வசனம் இன்னும் நன்றாக இருக்கலாமே என நான் சொல்வேன்.
உடனே அவர், அப்படியா… சரி, ஒரு டீ கொடு என்பார். அதை அருந்திவிட்டு… ஒண்ணும் சரியா வரலியேடா… ஒரு சிகரெட் கொடு என்பார். அதை ஒரு முறை இழுத்துவிட்டு, அடுத்த நொடியில் அனல் பறக்கும் வசனங்கள் வந்துவிழும். ´பார்த்தியா.. நீ கேட்ட வசனம், இந்த சிகரெட்ல இருந்திருக்கு´ என்பார் ஒரு எள்ளல் சிரிப்புடன்.
அதேபோல, படப்பிடிப்பின்போது, சில நடிகர்கள் என்னிடம் அல்லது என்னைப் போல உதவியாளராக இருந்த நண்பன் சுந்தர் சியிடம் போய், அடுத்த காட்சி என்னவென்று கேட்பாளர்கள். அது எங்களுக்கு தெரிந்தால்தானே சொல்வதற்கு. நாங்கள் அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவோம்.
இன்னொன்று அது என்ன காட்சி என்று என் அப்பா மணிவண்ணனுக்கும்கூடத் தெரியாது. அந்த இடத்தில் அந்த நொடியில்தான் அதை தீர்மானிப்பார். யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் மெருகேற்றி பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார். இந்த நாகராஜசோழன் திரைப்படம் வெறும் அரசியல் படமல்ல. எமது ஈழ மக்களின் வலியை, அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் உவமானமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கதை நம் மக்களின் கதை. சத்யராஜ் மற்றும் என் அப்பா மணிவண்ணன் இருவருக்கும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள். மணிவண்ணன் எழுத்துக்கு உயிர்தரும் நடிப்பு சத்யராஜூடையது.
அவருக்குப் பிடிக்காமல் எப்படி மணிவண்ணன் எழுத்தை உச்சரிப்பார்… ஆகவே அவருக்குள்ளும் அரசியல் இருக்கிறது. இந்தப் படத்தில் என் தம்பி ரகுவண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு இனி திரையுலகில் சிறப்பான இடத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்,” என்றார்.
Seeman_Book_Fair

Geen opmerkingen:

Een reactie posten