தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 april 2013

தமிழர்களுக்கு தெரியாமலே தமிழர்களுக்கு தீர்வு திட்டம் !


கடந்த மாதம் 21 மற்றும் 22ம் திகதி ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யாவரும் அறிந்த விடையம். இது சரியானது இல்லை என்றால் பிழையானது என்ற வாதப் பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க, அந்தச் சூடு காய்வதற்கு முன்னர் ஜேர்மனியில் ஒரு இரகசிய மாநாடு நடந்து முடிந்துள்ளது. இம் மாநாடு நடைபெற்றதை அதனை நடத்தியவர்கள் அதிர்வுக்கு உறுதிசெய்துள்ளார்கள். தமிழர் தரப்பால் நடத்தப்பட்ட இம் மாநாட்டில் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு, மக்களவை, என்று பல அமைப்புகள் கலந்துகொண்டுள்ளது. இதனை பேகர் பவுண்டேஷன் என்ற அமைப்பு நெறிப்படுத்தியுள்ளது. முக்கியமாக தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் நாட்டின் தலையீடு இந்த மாநாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் இது தொடர்பாக தமிழர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதாவது தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டம் வரையும் மிக முக்கியமான மாநாடாக இது கருதப்பட்டபோதிலும் இதுதொடர்பாக ஏற்பாட்டாளர்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. எனவே நாம் இதனை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டி கடைப்பாட்டில் இருக்கிறோம்.

தெள்ளத் தெளிவாகச் சொல்வது என்றால், கடந்த 33 வருடங்களாக தமிழீழம் தான் வேண்டும் என்று போராடி வந்த புலிகள் அமைப்பு, யுத்தரீதியாக வெற்றிகொள்ளப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் சில தாம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதாகக் கூறிவருகிறது. பல அமைப்புகள் செயல்படுவதால் அவர்களுக்குள் பல தரப்பட்ட கருத்துகள் இருக்கிறது. சில அமைப்புகள் தமிழீழம் தான் இறுதித் தீர்வு என்று கூறுகிறது. சில அமைப்புகள் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்று சொல்லிவருகிறது. மேலும் சில அமைப்புகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள். இவ்வாறு பல முரன்பாடுகள் இருக்கும் பட்சத்தில், இவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களை மூவர் மூவராக விவாதிக்க விட்டு பின்னர் அவர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு common declaration (பொது உடன்பாட்டை) தீர்வு திட்டமாக ஏற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிர்வு இணையம் அறிகிறது.

இதன் அடிப்படையில் இம் மாநாட்டில் கலந்துகொண்ட எல்லா அமைப்பையும், அவர்கள் நினைப்பதை (எது தீர்வுத் திட்டம்) என்பதனை எழுத்தில் தருமாறு உலகத் தமிழர் பேரவை கோரியுள்ளது. இதற்கான காலக்கெடு 7ம் திகதி ஆகும். பின்னர் அவை அனைத்தையும் ஆராய்ந்து தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை அறிவிக்க யூலை 28ம் திகதியை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற இரகசியத் தகவலும் கசிந்துள்ளது. ஆனால் சற்றும் எதிர்பாராத ஒரு விடையம் இதனிடையே நடந்துவிட்டது. அதாவது தமிழக மாணவர்களின் எழுச்சியாகும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், தமிழீழமே இறுதித் தீர்வு என்றும் பல போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் இம் மாநாட்டில் கலந்துகொண்ட சில அமைப்புகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் நிலை காணப்படுகிறது. தற்போது உள்ள நிலையில், ஒரு அமைப்பானது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தீர்வு இருக்கவேண்டும் என்று ஒரு திட்ட வரைபைக் கொடுத்தால், அவ்வமைப்பு துரோகிகளின் பட்டியலில் தான் இடப்படும் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இதனால் பல அமைப்புகள் குழம்பிப்போயுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. 

தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அது சரியான தீர்வுத் திட்டமாக இருக்கவேண்டும். 44,000 ஆயிரம் மாவீரர்களைக் கொடுத்து லட்சக்கணக்கான தமிழர்களை பலிகொடுத்து நடத்தப்படும் விடுதலைப் போராட்டம் இது. எந்த ஒரு இனமும் இதுவரை கொடுக்காத உயிர்ப்பலியை நாம் கொடுத்துள்ளோம். எனவே இவை அனைத்தையும் மனதில் நிறுத்தி ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது நல்லது. அதுவும் சிங்கள அரசிடம் பேரம்பேசும்போது நாம் 10 அடி நிலத்தைக் கேட்டால் அவர்கள் 5 அடி தான் தரவிரும்புவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடையம். எனவே நாம் எதைக் கேட்க்கப் போகிறோம், எவ்வளவு பெரிதாக கேட்க்கப்போகிறோம் என்பது எல்லாம் மிக முக்கியமான விடையம் ஆகும். அவறை ஒரு முறை தமிழ் மக்களிடம் பேசி மற்றும் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டுவது நல்லதல்லவா ?

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.


Geen opmerkingen:

Een reactie posten