தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!


இலங்கை சிறைகளில் ஏற்கனவே உள்ள 24 மீனவர்களுடன், அங்குள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய பெருங்கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை பெற்று அங்கு தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவதை நான் மிகுந்த வேதனையுடன் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இலங்கை அரசால் இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இலங்கை அரசு இப்போது எங்கள் மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளது.
இராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் 13.3.2013 முதல் இலங்கை சிறையில் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் இந்த தேதி வரை விடுதலை செய்யப்படவில்லை. இதுதவிர இராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இலங்கை சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் 6.4.2013 அன்று தமிழக மீனவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இந்த 30 மீனவர்கள் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளில் கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தார்கள். 6.4.2013 அன்று மாலை இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடித்து சென்றது. அந்த மீனவர்களை 18.4.2013 வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமுதாயத்தினரிடம் பதற்றமான சூழ்நிலையையும், மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நட்புறவற்ற அண்டை நாட்டின் நட்புறவற்ற செயல் காரணமாக தங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்த அரசும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் வகையில் தன்னிச்சையாக சர்வதேச கடல் எல்லை வரையறுக்கப்பட்டதை எதிர்த்து எனது தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது பற்றி நான் ஏற்கனவே தங்களுக்கு எழுதி உள்ள கடிதங்களில் தெரிவித்திருக்கிறேன்.
தங்கள் பாரம்பரிய உரிமையுடன் மீன் பிடித்து வரும் நமது மீனவர்கள் அடிக்கடி சிறை பிடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து சிறை பிடித்து செல்லும் நடவடிக்கை காரணமாக இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பதோடு மீனவ சமூகத்தினர் மத்தியிலும் அதிகப்படியான பதற்ற நிலையை உருவாக்கும்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு செயல்பாடு என்றே கருதி அதை நான் தங்கள் கவனத்திற்கு மீண்டும் ஒரு முறை கொண்டு வருகிறேன்.
எனவே இலங்கை சிறைகளில் ஏற்கனவே உள்ள 24 மீனவர்களுடன், அங்குள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அல்லது துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten